கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பேரூராட்சியில் இருக்கிறது எலச்சிபாளையம் கிராமம். 1957-ம் ஆண்டு அங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டப்பட்டது. அங்கு தற்போது 174 மாணவர்கள் படித்துவருகின்றனர். ஆனால், இடப்பற்றாக்குறை காரணமாக, அந்தப் பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை. இதனால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்விக்கு, இந்தச் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பல கி.மீ பயணிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

அந்தப் பகுதி மக்களும் பள்ளியை தரம் உயர்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவந்தனர். ``நிலம் இருந்தால், நாங்கள் கட்டடம் கட்டித் தருகிறோம்” என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர், ரூ.3 கோடி மதிப்புள்ள தனது 1.50 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கினார். அந்தப் பள்ளி ஏற்கெனவே இயங்கிவரும் இடமும், ராமமூர்த்தி குடும்பத்தினர் தானமாக வழங்கியதுதான். ராமமூர்த்தியின் இந்த உதவி அந்த மக்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து, ராமமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, ஊர் மக்கள் இணைந்து பாராட்டுவிழா நடத்தியிருக்கிறார்கள். அந்த விழாவில், ராமமூர்த்திக்கு நினைவுப்பரிசு வழங்கி, தானமாக வழங்கிய இடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், அந்தப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித் தரத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். விழாவில் பேசிய ராமமூர்த்தி, ``இந்தப் பகுதியில் மேல்நிலைப்பள்ளி இல்லாததால், ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் கல்வி இடைநிற்றல் அதிகரிக்கிறது. அரசு உடனடியாக அதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

அதேபோல, பள்ளியின் வளர்ச்சிக்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். பள்ளி கட்டடம் கட்ட அனைத்து வகையிலும் உதவி செய்வதற்குத் தயாராக இருக்கிறேன். இங்கு மேல்நிலைப்பள்ளி வந்து, அதன் மூலம் மாணவர்கள் முன்னேற வேண்டும். அது மட்டுமே எனக்கு மனநிறைவைக் கொடுக்கும்” என்றார்.