"ஏதோ எங்களால் முடிந்தது!" - பழங்குடி மற்றும் நாடோடி மக்களுக்கு உதவும் கல்லூரி மாணவர்கள்!
ஆரம்பத்தில், வீட்டிலேயே முகக்கவசங்களைத் தைத்துத் தயாரித்துப் பழங்குடி மக்களுக்கு வழங்கிய மாணவர்கள், பொது முடக்கக் காலத்தில் அவர்களின் நிலையை உணர்ந்து, அவர்களுக்குச் சமையல் பொருள்கள் வழங்கி உதவ முன்வந்தனர்.
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் காரணமாக மாதக்கணக்கில் நீண்டுகொண்டிருந்த நெடுநீள ஊரடங்கின் காரணமாக சாமான்ய மக்களின் வாழ்வாதாரம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. ஊரடங்கால், கூலித் தொழிலுக்குச் செல்பவர்களின் நிலைமை பரிதவிப்புக்கு உள்ளாகிப்போனது. பேரிடர் காலத்தைச் சமாளிக்க ஏதுவாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிவாரண உதவிகளைச் செய்த போதிலும் சமூகத்தின் அடித்தட்டு மக்களான, பழங்குடிகள், நாடோடிகள் போன்றோருக்கு அந்த உதவிகள் நடைமுறை சிக்கல்கள் காரணமாக முழுமையாகச் சென்றடையவில்லை.
அப்படி, கையறுப்பட்ட நிலையில் தவித்த பழங்குடி மற்றும் நாடோடி இன மக்களுக்குத் தன்னார்வலர் சமூகம் கைகொடுத்து துயர் துடைக்கத் தவறவில்லை. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியில் அமைந்துள்ள ஜெயா அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தின் உதவியோடு பொது முடக்கக் காலத்தில் களத்தில் இறங்கி ஏழை எளிய மக்களுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் முதலியவற்றை வழங்கி உதவி செய்து அனைவரின் பாராட்டுகளையும் வெகுவாகப் பெற்றுள்ளது. ஊரடங்கு நேரத்தில் தொடங்கிய மாணவர்களின் அறப்பணி தற்போது வரையிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகக் கல்லூரிகளில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் (என்.எஸ்.எஸ்) கீழ், மாணவர்கள் மரம் நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிராமப் பகுதிகளில் இருக்கும் படிக்காத மக்களுக்கு அடிப்படை ஆங்கிலம் பயிற்றுவிப்பது போன்ற சமூகப் பணிகளை மேற்கொள்வர். ஆனால், இந்தக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், ஒருபடி மேலாகச் சென்று திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடி மற்றும் நாடோடி இன மக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் கண்டறிந்து, அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.

ஆரம்பத்தில், வீட்டிலேயே முகக்கவசங்களைத் தைத்துத் தயாரித்துப் பழங்குடி மக்களுக்கு வழங்கிய மாணவர்கள், பொது முடக்கக் காலத்தில் அவர்களின் நிலையை உணர்ந்து, அவர்களுக்குச் சமையல் பொருள்கள் வழங்கி உதவ முன்வந்தனர். அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் நாடோடி மற்றும் பழங்குடி இன மக்கள் அதிக அளவில் வசிக்கும் புன்னம்பாக்கம், ஆவாஜிப்பேட்டை, ஏனம்பாக்கம், மணவாள நகர் காலனி மற்றும் நத்தமேடு பகுதிகளைத் தேர்ந்தெடுத்தார்கள்.
அவர்கள் தங்கள் பெற்றோர்களின் உதவியுடன் கல்லூரி நிர்வாகத்திடம் நிவாரண உதவிக்குத் தேவையான தொகையில் பாதியை மனமுவந்து அளித்தனர். மீதமுள்ள தொகையைக் கல்லூரி நிர்வாகம் ஏற்றுக்கொண்டு, 5 பகுதிகளில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கி உதவி செய்தது.

பொது முடக்கக் காலத்தில் ஒரு சில மாதங்கள் உதவலாம் என்ற நிலைப்பாட்டுடன் இந்த அறப்பணியினைத் தொடங்கியவர்கள், அந்த மக்களின் நிலை கருதி தற்போது வரையிலும் தொடர்ந்து உதவிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில் நோய்த்தொற்றிற்கு பயந்து அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருந்த நேரத்தில், ஏழை எளிய மக்களின் உணவுத் தேவையைக் களத்திலிறங்கிப் பூர்த்தி செய்த கல்லூரி மாணவர்களின் செயல் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.