ஒழுகும் கூரை; 30,000 புத்தகங்கள்! -சொந்தப் பணத்தில் நூலகத்தைச் சீரமைத்த குன்னூர் மக்கள்

குன்னூர் காட்டேரி டேம் பகுதியில் பல ஆண்டுகளாக ஒழுகிய கூரையுடன், பராமரிப்பு இல்லாமல் காணப்பட்ட ஊரக நூலகத்தைப் பொதுமக்களே நிதி வசூலித்து புனரமைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமப்புற நூலகங்கள் போதிய பராமரிப்பின்றியே காணப்படுகின்றன. இதேபோல் குன்னூர் அருகில் உள்ள காட்டேரி அணை கிராமத்தில் கிராமப்புற நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த இந்த நூலகம், 1995-ம் ஆண்டு சொந்தமாகக் கட்டடம் எழுப்பப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது.
30,000-க்கும் அதிகமான நூல்கள் உள்ள இந்த நூலகத்தில் 1,800 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக நூலகக் கட்டடங்களை அரசு முறையாக பராமரிக்கத் தவறியதால் இந்த நூலகக் கட்டடமும் மிக மோசமாக சேதமடைந்தது.
மேலும் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு புத்தகங்கள் சேதமாகும் அபாயத்தில் இருந்தன. மேலும் வெளித்தோற்றத்திலும் பாழடைந்த கட்டடமாகக் காட்சியளித்தது.
இந்த நூலகக் கட்டடத்தைச் சீரமைக்கப் பலமுறை ஊர் மக்கள் அரசிடம் முறையிட்டும், நிதி இல்லை என்ற பதிலே வந்துள்ளது. இந்த நிலையில் கிராம மக்கள் சிலர் தங்களால் இயன்ற நிதியைத் திரட்டி சொந்த முயற்சியில் நூலகக் கட்டடத்தைப் பொலிவுபடுத்தி வருகின்றனர்.
நூலகச் சீரமைப்பில் ஈடுபட்ட காட்டேரி கிராமத்தைச் சேர்ந்த சதீஸ் நம்மிடம் பேசுகையில், "நூலகக் கட்டடம் வண்ணங்கள் பெயர்ந்து பல ஆண்டுகளாக மோசமான நிலையில் காணப்பட்டது. பொதுமுடக்கத்தால் நூலகங்கள் செயல்படத் தடை உள்ள நிலையில், இந்த சமயத்தில் நூலகத்தைச் சீரமைக்க முடிவு செய்தோம். ஊர் மக்களின் உதவியுடன் நூலகத்திற்கு வண்ணம் பூச முடிவு செய்து பணியைத் தொடங்கினோம்.
ஆனால் மேற்கூரையில் பல இடங்களில் விரிசல் இருந்தது. எனவே மேற்கூரையையும் சீரமைக்க வேண்டியிருந்தது. அதற்காக மேலும் பணம் தேவைப்பட்டது. நண்பர்களின் உதவியுடன் சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவில் தற்போது புதுப்பொலிவுடன் மாற்றியுள்ளோம். இதனால் புத்தகங்கள் பாதுகாக்கப்படுவதோடு பொது முடக்கத் தளர்வுக்குப் பின் நூலகத்தை நல்ல முறையில் மக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்" என்றார்.

பொது முடக்கக் காலத்திலும் ஊர்மக்கள் சொந்த முயற்சியில் நூலகத்தைச் சீரமைத்த இவர்களின் செயல் மக்களிடம் பாராட்டைப் பெற்றுவருகிறது.