திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள காமக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். வயது 41. இவர், 2003-ஆம் ஆண்டில் காவலர் பணியில் சேர்ந்து 2008-ல் சப் இன்ஸ்பெக்டராகப் பணி உயர்வுப் பெற்றார். தொடர்ந்து, வேலூர் சரகத்துக்குட்பட்ட காவல் நிலையங்களில் 12 ஆண்டுகள் பணியாற்றிவந்தார். கடைசியாக, சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பணிபுரிந்துவந்தார்.
இந்த நிலையில், கடந்த மே 8-ம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் எஸ்.ஐ செல்வராஜ் மரணமடைந்தார். செல்வராஜின் மனைவி கோமதியும் வேலூரில் பெண் காவலராக உள்ளார். இவர்களுக்கு 9, 7, 6 ஆகிய வயதுகளில் மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், செல்வராஜின் குடும்பத்துக்கு உதவிட அதே 2003-ம் ஆண்டில் இவருடன் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதும் உள்ள காவலர்கள் 5,598 பேர் முன்வந்தனர். இவர்கள் டெலிகிராம் செயலி மூலம் ஒன்றிணைந்து தலா 500 ரூபாய் வீதம் மொத்தம் ரூ.27,99,000 நிதி திரட்டினர். இந்தத் தொகையில் செல்வராஜின் 3 பெண் பிள்ளைகள் மீதும் தலா 9,32,000 ரூபாயை எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்து அதற்கான ஆவணங்களையும் அவரது மனைவி கோமதியிடம் வழங்கினர். பாலிசி எடுத்ததன் மூலம் கிடைக்கப்பெற்ற முகவர் தரகுத் தொகை 54,055 ரூபாயையும் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. இந்த உன்னத சேவை காவல்துறையினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
