ரிஜிஸ்டர் ஆபீஸில் திருமணத்தைப் பதிவுசெய்ய பெற்றோர்களின் சம்மதம் அவசியமா? #DoubtOfCommonMan

திருமணத்தைப் பதிவுசெய்துகொள்ளும்போது, பெற்றோர்களின் சம்மதம் அவசியம் என பல சார்பதிவாளர் அலுவலகங்களில் சொல்லப்படுகிறது.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "காதல் திருமணத்தைப் பெற்றோர்களின் சம்மதம் இருந்தால் மட்டுமே ரிஜிஸ்டர் பண்ணமுடியும் என சட்டம் வந்துள்ளதாமே?" என்ற கேள்வியை வாசகர் கார்த்தி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

திருமணம் செய்துகொள்ளும் புதுமணத் தம்பதிகள், தங்களின் திருமணத்தைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்பது 2009 -ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கட்டாயச் சட்டமாக்கப்பட்டது. திருமணம் முடிந்த 90 நாள்களுக்குள் திருமணப் பதிவு செய்துகொள்ள வேண்டும். காதல் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள், தங்களின் திருமணத்தைப் பதிவுசெய்துகொள்ளும் போது, பெற்றோர்களின் சம்மதம் அவசியம் வேண்டும் எனப் பல சார்பதிவாளர் அலுவலகங்களில் சொல்லப்படுகிறது.
திருமணத்தைப் பதிவுசெய்ய பெற்றோர்களின் சம்மதம் அவசியமா? அவர்கள் உடன் இருக்க வேண்டுமா? அவை சட்டமாக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து வழக்கறிஞர் சினேகாவிடம் பேசினோம் .
"தமிழ்நாடு திருமணச் சட்டத்தின்படி, திருமணம் முடிந்த 150 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும். அப்படிப் பதிவுசெய்யாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடியும். திருமணத்தைப் பதிவுசெய்வதைப் பொறுத்தவரை காதல் திருமணத்திற்கு தனி வழிமுறை, பெற்றோர்கள் முன்னிலையில் நடக்கும் திருமணத்திற்கு தனி வழிமுறை என்பதெல்லாம் இல்லை.

திருமணங்கள் சார்ந்து நிறைய பிரச்னைகள் வருவதால், திருமணத்தைப் பதிவுசெய்யும்போது, திருமணம் செய்து கொண்ட தம்பதிகளில் யாரேனும் ஒருவருடைய பெற்றோராவது திருமணப் பதிவின்போது தம்பதிகளுடன் இருக்க வேண்டும் என்பது பதிவுத்துறை ஆணையரால் வாய்மொழியாக சொல்லப்பட்டுள்ள தகவல்.
ஆனால், இது தற்போதுவரை சட்டத்தில் வலியுறுத்தப்படவில்லை. ஆணையாகவும் எங்கும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் ஆணையரால் சொல்லப்பட்ட தகவல் என்பதால், பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்களில் இது பின்பற்றப்படுகிறது. பெற்றோர்கள் இல்லையெனும் பட்சத்திலோ, பெற்றோர்கள் சம்மதம் இன்றி நடைபெறும் திருமணம் எனும் சூழலில் சார்பதிவாளரிடம் சூழலை விளக்கி திருமணத்தைப் பதிவு செய்யலாம். அதற்காக, நினைத்த உடனே திருமணத்தைப் பதிவு செய்துகொள்ள முடியாது. அதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. முதலில், திருமணத்தைப் பதிவு செய்ய, உங்கள் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தற்போது, திருமணப் பதிவுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமே செய்துகொள்ள முடியும். https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளப் பக்கத்தில், திருமணத்தைப் பதிவுசெய்ய கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும். அதன்பின், உங்கள் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் குறிப்பிட்டுள்ள நேரம், தேதியில் உரிய ஆவணங்களுடன் சென்று திருமணத்தைப் பதிவு செய்துகொள்ளலாம்.
திருமணத்தைப் பதிவுசெய்ய மூன்று நபர்களின் சாட்சிக் கையொப்பம் அவசியம். அது, பெற்றோர்கள், நண்பர்கள் என மேஜரான யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்" என்றார்.

திருமணத்தைப் பதிவுசெய்ய அரசாங்கத்திடமிருந்து 100 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆதனால் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். திருமணப் பதிவு பற்றிய கூடுதல் தகவல்களை அறிய https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடலாம்.