கரூர்: `ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்குறாங்க!' - எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்

வறண்டு கிடந்த அமராவதி ஆற்றில் ஒரு வருடத்துக்குப் பிறகு தண்ணீர் வருவதால், கரூர்வாசிகள் அதை ஆர்வமாகப் பார்க்க வருகின்றனர். ஆனால், இளைஞர்களும் பெண்களும் தண்ணீர்க் குழாய்க் கட்டையில் ஏறி நின்று, செல்ஃபி எடுக்க முயல்கிறார்கள். இது ஆபத்தை ஏற்படுத்தும்.
புரெவி புயலைத் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, கரூர் மாவட்ட அமராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதைப் பார்க்க ஆவலுடன் வரும் கரூர்வாசிகள் பலரும் செல்ஃபி எடுக்க முயல, 'ஆபத்தை விலை கொடுத்து வாங்காதீங்க' என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கைவிடுக்கிறார்கள்.

புரெவி புயலைத் தொடர்ந்து, தமிழகத்தில் தொடர் கனமழை பெய்தது. அதன் காரணமாக, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள அமராவதி அணை, அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால், அமராவதி அணையிலிருந்து, அமராவதி ஆற்றில் 4,450 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த வருடத்தில் முதன்முறையாக, அமராவதி ஆற்றில் தண்ணீர் வந்ததால், கரூர் நகரின் மையப் பகுதியான லைட்ஹவுஸ் கார்னர் பகுதியைக் கடந்து செல்லும் அமராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைக் காண பொதுமக்கள், சுற்றுலா தலத்தில் கூடுவதைப்போல பார்வையிட்டுவருகின்றனர்.

அதேசமயம், இளைஞர்களும் பெண்களும் பாலத்தின் ஓரத்திலுள்ள குடிநீர்க் குழாய்களுக்கு மேலே ஏறி, ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்துவருகின்றனர். `இது ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் செயல்' என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து, நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், ``வறண்டுகிடந்த அமராவதி ஆற்றில் ஒரு வருடத்துக்குப் பிறகு தண்ணீர் வருவதால், கரூர்வாசிகள் அதை ஆர்வமாகப் பார்க்கவருகின்றனர். ஆனால், இளைஞர்களும் பெண்களும் தண்ணீர்க் குழாய்க் கட்டையில் ஏறி நின்று, செல்ஃபி எடுக்க முயல்கிறார்கள். இது ஆபத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே, கரூர் மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளில் நின்று இப்படி செல்ஃபி எடுக்க முயன்ற பலர், தண்ணீரில் சிக்கி இறக்க நேரிட்டிருக்கிறது. கடந்த நவம்பர் 5-ம் தேதி மாயனூர் கதவணையை ஒட்டியிருக்கும் துணை வாய்க்காலில் ஓரமாக நின்று குளிக்கும்போது செல்ஃபி எடுத்த கரண் என்ற 18 வயது இளைஞர் நீரில் மூழ்கி பலியானார். இதேபோல, கரூர் நகரப் பகுதியிலுள்ள எல்.ஜி.பி நகரைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் யு.கே.ஜி படித்துவந்தான்.

கடந்த 2018, ஆகஸ்ட் 20-ம் தேதி காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீரைக் காண வாங்கல் அருகேயுள்ள வாங்கல் மோகனூர் காவிரிப் பாலத்தின்மீது பாபு, குழந்தையைவைத்து செல்ஃபி எடுத்தபோது குழந்தை தவறி விழுந்து, நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தான். மூன்று நாள் போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புதுறையினர் உடலை மீட்டுக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சோக சம்பவங்களின் வடுக்கள் இன்னும் ஆறாத சூழ்நிலையில், தற்போது அமராவதி ஆற்றுப் பாலத்தின் மேலே நின்று செல்ஃபி எடுக்கும் பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட நிர்வாகம், அமராவதி ஆற்றில் ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்க முயலும் இளைஞர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்றார்கள்.