`பேரிகார்டுகளில் தனியார் விளம்பரங்கள் ஏன்?’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பயணிக்க வேகம் நிர்ணயம் செய்வது தொடர்பாகவும், பேரிகார்டுகளிலுள்ள விளம்பரங்களை அகற்றுவது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
மதுரையைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அளித்த பொதுநல மனுவில், `தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்கு முன்பாக இருக்கும் பொதுச் சாலைகளில் விளம்பரம் செய்யும் வகையில் பேரிகார்டுகளை வைக்கின்றன. பேரிகார்டுகள் மூலம் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. அதேபோல் பேரிகார்டுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் முறையாக ஒட்டப்படாததால் இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரிக்கின்றன.

இது குறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, தமிழகத்தின் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும், பொது இடங்களிலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித்திரிவதைத் தடுக்கவும், நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேரிகார்டுகளை அகற்றவும், எந்தெந்த இடங்களில் பேரிகார்டுகளை வைக்கலாம் என்பது குறித்து முறையான வழிகாட்டுதல்களை பிறப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு, `தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றன, சாலைகளிலுள்ள பேரிகார்டு அமைப்பதில் தனியார் விளம்பரங்களை ஏன் வைக்கப்படுகின்றன?’ எனக் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, `அதிவேகமாகச் சென்றதாக எத்தனை வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன?’ எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பயணிக்க வேகம் நிர்ணயம் செய்வது தொடர்பாகவும், பேரிகார்டுகளிலுள்ள விளம்பரங்களை அகற்றுவது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.