கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவரைச் சுற்றிவளைத்த கும்பல்! - பழிக்குப் பழி கொலையா?

மானாமதுரை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு பைக்கில் திரும்பி வரும்போது, காவல் நிலையம் அருகேயே மர்மக் கும்பல் ஒன்று அவரைச் சரமாரியாக வெட்டிக் கொன்றது. தேர்தல் சமயத்தில் நடந்த கொலைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினோத் கண்ணாவும், மைனர் மணி என்ற அருள்நாதனும். நெருங்கிய நண்பர்களான இருவரின் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி எனப் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், இருவரும் கடந்த ஜனவரி-9ம் தேதி இரவு மானாமதுரை கோர்ட் எதிரேயுள்ள கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அங்கு இரண்டு பைக்குகளில் வந்த ஐந்து பேர்கொண்ட கும்பல், வினோத் கண்ணாவையும், அருள்நாதனையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.

ஆபத்தான நிலையில் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் அருள்நாதன் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக 10 நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டு காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், இந்தக் கொலை வழக்கில் சிறையிலிருந்த தங்கமணி என்பவரின் மகன் அக்னிராஜ், ஜாமீனில் வெளிவந்து கடந்த சில நாள்களாக மானாமதுரை காவல்நிலையத்தில் கையெழுத்திட்டுவருகிறார்.
வழக்கம்போல நேற்று மானாமதுரை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு பைக்கில் திரும்பி வரும்போது, காவல் நிலையம் அருகேயே ஒரு மர்மக் கும்பல் அவரைச் சரமாரியாக வெட்டிக் கொன்றது. தேர்தல் சமயத்தில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி ராஜராஜன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இது குறித்து காவல்துறையினர் சிலர் நம்மிடம், ``அக்னிராஜின் சொந்த ஊர் ஆவாரங்காடு. மானாமதுரைப் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இந்தநிலையில் பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததாகச் சொல்லப்படுகிறது. சட்டக் கல்லூரியில் படிப்பதால் படிப்பு கெடக் கூடாது என்று ஜாமீனில் வெளிவந்திருக்கிறா. இதைத் தெரிந்துகொண்ட மற்றொரு கும்பல் அவரைக் கொலை செய்திருக்கிறார். இந்தக் கொலை தொடர்பாக தர்மர், இருளப்பன், விக்னேஷ்வரன், சக்தி உள்ளிட்டோர் சரணடைந்திருக்கிறார்கள். விசாரணை நடைபெறுகிறது” என்றார்.