தஞ்சாவூர்: `ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது!' - பாராட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
தாய், சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகளாக என்ன தேவை என்பதையும் ஜோதிகா கேட்டறிந்தார்.
நடிகை ஜோதிகா ஏழைத் தாய்மார்கள், குழந்தைகள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கியிருப்பது அமைச்சர், கலெக்டர், மருத்துவத்துறை அதிகாரிகள் எனப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஜோதிகா, சில மாதங்களுக்கு முன்பு தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தஞ்சாவூர் பெரிய கோயிலுடன் தஞ்சாவூரில் உள்ள பழைமையான அரசு மருத்துவமனையை ஒப்பிட்டு அதன் பராமரிப்பு குறித்துப் பேசினார். ``படபிடிப்புக்காகத் தஞ்சாவூர் சென்றிருந்தபோது மருத்துவமனையில் கண்ட காட்சிகள் என் மனசுக்கு கஷ்டத்தைத் தந்தன. அவற்றைத்தான் நான் இங்கு பேசுகிறேன். கோயில்களைப் போலவே அரசு மருத்துவமனைகள் பராமரிக்கப்பட வேண்டும்” என ஜோதிகா கூறியிருந்தார்.
ஜோதிகாவின் பேச்சு அப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதுடன் பெரும் பாராட்டையும் பெற்றது. சிலர் அரசு மருத்துவமனையைப் பராமரிக்கும் செயலை செய்துவிட்டு அவை குறித்து விமர்சனம் செய்யலாம் எனவும் சமூக வலைதளங்கள் மூலமாக ஜோதிகாவுக்கு ஆலோசனையையும் வழங்கினார்கள்.

நாள்கள் கடந்த நிலையில் இதை அனைவரும் மறந்துவிட்டனர். ஆனால், ஜோதிகா தான் பேசுவதற்கு முன்பாகவே இந்த மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டதுடன் இந்த மருத்துவமனைக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய நினைக்கிறேன் எனப் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில் கூறியிருக்கிறார். சொன்னதைப் போலவே மருத்துவமனைக்கு உதவியும் செய்து அனைவரையும் நெகிழவும் வைத்துள்ளார்.
அகரம் அறக்கட்டளை மூலமாகக் குறிப்பிட்ட அந்த அரசு மருத்துவமனைக்கு உதவி செய்வதற்காகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய், சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகளாக என்ன தேவை என்பதையும் ஜோதிகா கேட்டறிந்தார்.

அதன்படி இன்று ராசா மிராசுதார் மருத்துவமனையில் ரூ. 25 லட்சம் நிதியை அமைச்சர் விஜயபாஸ்கர், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருதுதுரை முன்னிலையில் அகரம் பவுண்டேஷன் சார்பில் திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் வழங்கினார். தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, ராஜ்யசபா எம்.பி வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதைப் பெற்றுக்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது பாராட்டத்தக்கது. இதற்கு அரசின் சார்பில் நன்றி” என்றார்.

தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்த்ராவ், ``ஜோதிகாவின் சமூக அக்கறைக்குத் தலை வணங்குகிறேன். ஒரு தாயான அவர் பல தாய்மார்களின் தேவைக்காக இந்த உதவியைச் செய்திருக்கிறார் அவருக்கு ரொம்பவே பெரிய மனசு” என்றார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருதுதுரை, ``தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக 25 லட்ச ரூபாய் வழங்கிய ஜோதிகாவுக்கு நன்றி. அரசின் திட்டங்களுடன் மக்களின் பங்களிப்பும் கைகோக்கும்போது அது பெரும் சிறப்பாக அமையும் என்பதற்கு ஜோதிகா செய்துள்ள உதவி சரியான முன் உதாரணமாக அமைந்துள்ளது” என்றார்.