கோவை வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள். 87 வயதாகும் கமலாத்தாள் பாட்டி, இப்போதும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்றுவருகிறார். இன்று, நேற்று அல்ல... யாருடைய தயவும் இல்லாமல் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மாவு அரைப்பது, சட்னி, சாம்பார் வைப்பது என்று கமலாத்தாள் இட்லி கடையில் எல்லாமே அவரது கைவண்ணம்தான். ஆரம்பத்தில் ஒரு இட்லியை 25 பைசாவுக்கு விற்றுவந்தார்.
பிறகு 50 பைசாவுக்கு மாறி, தற்போது ரூ.1-க்கு விற்றுவருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை சமைப்பதற்கு காஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர் என்ற எந்த வசதியும் கிடையாது. விறகு அடுப்பும், ஆட்டுக்கல்லும்தான் கமலாத்தாள் பாட்டி கடையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்தன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமலாத்தாள் குறித்து வெளி உலகத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து பல்வேறு இடங்களிலிருந்து உதவிக்கரங்கள் நீண்டுவருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
காஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர்கள் உதவியாக வந்தன. முக்கியமாக, மகேந்திரா குழுமத்தின் ஆனந்த் மகேந்திரா, பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தார். இதற்காக கடந்த ஆண்டே, ரூ .2.5 லட்ச மதிப்பில் 1.75 சென்ட் நிலத்தை வாங்கி கமலாத்தாள் பெயரில் பதிவுசெய்து அவரிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1.75 சென்ட் இடத்தை கமலாத்தாள் பாட்டிக்கு பதிவுசெய்து கொடுத்தார். மொத்தம் 3.5 சென்ட் நிலத்தில் கமலாத்தாள் பாட்டிக்கு வீடு மற்றும் இட்லிக் கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகள் நடந்துவந்தன.
பணிகள் முழுமையாக முடிந்ததால், அன்னையர் தினமான நேற்று வீட்டை கமலாத்தாள் பாட்டியிடம் ஒப்படைத்தனர். இது குறித்து கமலாத்தாள் பாட்டி கூறுகையில், “என் குடிசைக்கு வந்தவங்ககிட்ட வீடு கட்டிக் கொடுங்கனு கெஞ்சினேன். ஆனந்த் மகேந்திராகிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொன்னாங்க

சொன்ன மாதிரியே இப்ப வீடு கட்டிக் கொடுத்துட்டாங்க. ஆனந்த் மகேந்திரா சாருக்கு நன்றி. நீங்க நல்லாருக்கணும். நீங்களும், உங்க குடும்பமும் 100 வருஷத்துக்கு நல்லாருக்கணும்” என்றார்.