பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ளது வி.களத்தூர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இங்குள்ள இளைஞர் ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர், தீவிர சிகிச்சையின் பலனாக தற்போது வீடு திரும்பியுள்ளார்.
தொடர்ந்து அதே கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் உள்ளிட்ட மேலும் இருவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வி.களத்தூர் காவல் நிலையம் மூடப்பட்டு, தற்போது நடமாடும் காவல் நிலையமாக நான்கு சக்கர வாகனத்தில் இயங்கிவருகிறது.

இதன் காரணமாக, வி.களத்தூர் கிராமம் மட்டுமல்லாமல் அந்த ஊரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் உயர் அடுக்கு பாதுகாப்பில் உள்ளன. கிராமத்துக்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட வி.களத்தூர் கிராமத்தில், பஞ்சாயத்து தலைவர் வழக்கறிஞர் பிரபு தலைமையில் கிராம ஊராட்சி நிர்வாகக் குழுக்கள் சார்பாக பல்வேறு வகைகளில் தூய்மைப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், வி.களத்தூர் கிராமத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவரும் அய்யாதுரையின் தாயார் அங்கம்மாள், நேற்று மதியம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இறந்த தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த கையோடு, கிராம மக்களின் நலனுக்காக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார், அய்யாதுரை.
அய்யாதுரையிடம் பேசினோம்.
“அம்மாவுக்கு 80 வயசு ஆகுது. அவருக்கு சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் இருந்தன. இதனால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த 10 நாள்களாகவே அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில நேற்று மதியம் 12.30 மணியளவில் அம்மா தவறிவிட்டாங்க. கொரோனா பிரச்னை காரணமாக சொந்தக்காரங்க யாரும் வர முடியாத சூழல். நான் தூய்மைப் பணியாளராக இருப்பதால், எனக்கு ஊரோட நிலவரமும் கொரோனா நோய்த் தொற்று குறித்தும் தெரியும். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பஞ்சாயத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்கிறேன்.

எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடி இருப்பதையும், ஊரடங்கு உத்தரவால் மக்கள்படும் கஷ்டங்களையும் தினம்தினம் நேரில் பார்க்கிறேன். அதனால், இறந்த அம்மாவின் உடலை நீண்ட நேரம் வைத்திருக்க மனம் ஒப்பவில்லை. சில மணி நேரம் அம்மாவின் உடலை வைத்திருந்தோம். பிறகு 4.30 மணி அளவில் குறைந்த நபர்களோடு அம்மாவை அடக்கம் செய்தோம்" என்றவர்,
``எனக்கும் நான்கு குழந்தைகள் இருக்காங்க. . நம்மைப்போல் பிள்ளை குட்டிகளை வைத்துக்கொண்டு ஜனங்க கஷ்டப்படுவதைப் பார்க்கிறோம்.

அதனால் அம்மாவை நினைத்து வீட்டில் முடங்கிக்கிடக்க மனம் ஒப்பவில்லை. அதனால் வழக்கம்போல் எனது பணிக்கு திரும்பிவிட்டேன்” என்றார் வெள்ளந்தியாக.
இறந்த அம்மாவின் உடலை அடக்கம் செய்த கையோடு பணிக்கு திரும்பிய தூய்மைப் பணியாளருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.