திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மாவூத்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் கொடைக்கானலில் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கொடைக்கானலில் பணியின் போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாலசுப்பிரமணி, நிலை தடுமாறி கீழேயே விழுந்தார். இந்த விபத்தில், அவர் பரிதாபமாகப் பலியானார்.இந்தச் சம்பவம் காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காவலர் பாலசுப்பிரமணியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவர் சொந்த ஊரான மாவூத்தன்பட்டிக்கு அடக்கம் செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டது.

ஆம்புலன்ஸிலிருந்து இறக்கப்பட்ட அவர் உடலுக்குத் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சீனிவாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லாவண்யா, ஆய்வாளர் சண்முகலட்சுமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து, எஸ்.பி உள்ளிட்ட போலீஸார் பாலசுப்பிரமணியின் உடலைத் தோளில் சுமந்து வந்தனர். பின்னர், பாலசுப்பிரமணியின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் காவலரின் உடலை எஸ்.பி மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகள் இணைந்து சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்திய நிகழ்வு அந்தப் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.