தேக்கு மரத்தை வீட்டில் வளர்க்கலமா... வெட்டி விற்க அரசு அனுமதி பெறுவது எப்படி? #DoubtOfCommonMan

பொதுவாகத் தேக்குமரம் பராமரிப்பு என்பது சாதாரண மரங்கள் வளர்ப்பு போல் எளிய முறைதான்.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``தேக்கு மரத்தை வீட்டில் வளர்க்கலாமா... அப்படி வளர்கும்பட்சத்தில் அம்மரங்களை வெட்டி விற்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் விகடன் வாசகர் ப.சுவாமிநாதன். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

தேக்கின் தாவரவியல் பெயர் `டெக்டோனா க்ரன்ட்டிஸ்' ஆகும். மரவேலைப்பாடுகளில் தேக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தேக்கு என்றாலே பர்மா தேக்கு என்பதே பலருக்கும் நினைவில் வரும். அதற்கு அடுத்தாற்போல் உலகமெல்லாம் பயணிப்பது நம் கேரளா தேக்கு. கேரளாவில் மழையின் அளவு அதிகமாக இருப்பதால் அங்கு தேக்கு நன்கு வளருகிறது. அதன்பின் தமிழ்நாட்டின் செஞ்சிக்கோட்டையில் விளையும் தேக்குகளுக்கு மதிப்பு அதிகம்.

தேக்கு மரம், வீட்டின் அத்தியாவசிய பொருள்களான கட்டில், பீரோ, அலமாரி, மேஜை போன்றவற்றை செய்வதற்குப் பயன்படக்கூடிய மரம். நாம் வீடு கட்டும்போது ஜன்னல் செய்வதற்கும், நிலை அமைப்பதற்கும் பல்வேறு மரங்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் எந்த மரமும் தேக்கு மரத்தைப் போல் பலன்தரக்கூடியது இல்லை. வெயில் காலங்களில் வெடிக்காமல், மழைக்காலங்களில் பாழாகாமல் அனைத்துக் காலத்துக்கும் ஏற்ற தேக்கு மரம்தான். அதனால்தான் அதனுடைய தேவை அதிகமாக உள்ளது. தேவையின் பொருட்டு விலையும் அதிகமாக இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்ட முன்னாள் வனப் பாதுகாவலர் ராஜசேகரிடம் வாசகர் ப.சுவாமிநாதனின் கேள்வியை முன்வைத்து விபரம் கேட்டோம்.
``பொதுவாக தேக்குமரம் பராமரிப்பு என்பது சாதாரண மரங்கள் வளர்ப்புபோல் எளிய முறைதான். ஆற்று வண்டல் மணல் கலந்த நிலங்கள், செம்மண் நிலங்கள், செம்புறை மண் நிலங்கள் மற்றும் மணல் கலந்த களி நிலங்களிலும் தேக்கு நன்கு வளரும். மரத்தை நட்டுவைத்து நீர் ஊற்றி, உரம் இட்டு வளர்த்தாலே போதுமானது. ஆனால், தேக்கு மரம் வளர வளர அதைச் சுற்றி வளரும் இலை, கிளைகளை வெட்டிவிட்டுக்கொண்டே வர வேண்டும். அப்போதுதான் மரம் நீண்டு, நெடியதாக வளரும். வளர்க்கப்படும் தேக்கு பயன் தருவதற்கு 12 வருடங்கள் ஆகும். அதன்பின் அதை நாம் தேவைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வீட்டில் தேக்குமரம் வளர்ப்பதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதை விற்பதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் வனத் துறையினரின் அனுமதி மிகக் கட்டாயமானது. அவர்களிடம் அனுமதி பெறாமல் நாம் தேக்கு மரத்தை நம் வீட்டிலேயே வைத்திருந்தாலும் அதை வெட்டக்கூட முடியாது. நம் வீட்டில் தேக்கு மரத்தை வளர்க்கிறோம் என்பதற்கான ஆதாரங்களையும், அதன் விற்பனை அல்லது பயன்படுத்துவதற்கான ஆதாரங்களையும் வனத்துறையினரிடம் சரியாக ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்களிடம் மிக எளிதில் அனுமதி பெற முடியும். அனுமதி பெறப்பட்ட பின் நம்முடைய அனைத்துப் பயன்பாட்டுக்கும் தேக்கு மரத்தை வெட்டிப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனுடைய தேவைகளும் மதிப்புகளும் அதிகரிக்க அதிகரிக்கவே தேக்கு மரத்தை வெட்டிக் கடத்திச் செல்வதும் அதிகரிக்கிறது. அது சட்டத்துக்குப் புறம்பானது" என்றார்.
இதேபோல விகடனின் #DoubtOfCommonman பக்கத்தில் கேட்க உங்களிடம் கேள்விகள் இருந்தால், இந்தப் படிவத்தில் பதிவுசெய்யவும்.
