ராசிபுரம் நகராட்சியின் 27 வார்டுகளிலும், இருபெரும் திராவிடக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு இரவு நேரத்தில் வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று பணத்தைக் கொடுத்து, வாக்கு கேட்டுவருவதாகக் கூறி, சமூக ஆர்வலர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தமிழகம் முழுக்க இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், கடந்த 17 - ம் தேதியோடு பிரசார காலம் முடிவடைந்தது. நேற்று பிரதான கட்சிகள் ஆங்காங்கே வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாகப் புகார் எழுந்தது. அந்த வகையில், நேற்று இரவு சராசரியாக தி.மு.க ரூபாய் 1,500-ம், அதிமுக 1,000 ரூபாயும் என்ற அளவில் வீடுதோறும் பல குழுக்களாகச் சென்று பணப் பட்டுவாடா செய்ததாகக் கூறி, சமூக ஆர்வலர்கள் நள்ளிரவில் சாலைமறியல் போராட்டத்தில் குதித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் நல்வினைச் செல்வன், சமூக ஆர்வலர்களோடு போராட்டத்தில் குதித்தார். 'என்ன நடந்தது?' என்று அவரிடம் கேட்டோம்.

``இரண்டு பிரதான கட்சிகளும் இங்கே நீக்கமறப் பணம் கொடுப்பதாகத் தகவல் வந்தது. ராசிபுரத்தில் கடும் போட்டி நிலவும் வார்டுகளில் தி.மு.க ஒரு படி மேலே சென்று வெற்றி பெற்றுவந்தால், 2 கிராம் தங்கம் என்று ஒரு சில வார்டுகளிலும், ஒரு சில வார்டுகளில் வெள்ளிக் கொலுசு தருவதாகவும் கூப்பன்களை வீடுதோறும் கொடுப்பதாகத் தகவல் வந்தது. ராசிபுரம் 19-வது வார்டு காட்டூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தேர்தல் அலுவலர்கள், பாதுகாப்புப் பணியில் காவலர்கள் இருந்த நிலையில், அந்தப் பள்ளியின் தெருவில் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் கூப்பன்களைக் கொடுப்பதாக அங்குள்ளவர்கள் தகவல் கொடுத்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி விரைந்து சென்று கூப்பன்களுடன் கையும் களவுமாக அந்த இளைஞர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு, ராசிபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உடனே வருவதாகக் கூறிய தேர்தல் பறக்கும் படையினர், காலம் கடந்துதான் வந்து சேர்ந்தனர். பறக்கும் படையானது காலை 6 முதல் மதியம் 2 மணி வரை ஒரு குழுவும், 2 மணியில் இருந்து 10 மணி வரை ஒரு குழுவும், 10 மணி முதல் காலை வரை ஒரு குழுவும் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டு தொலைபேசி எண்கள் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால், ஒருவருக்கொருவர், `அவரிடம் சொல்லுங்கள் இவரிடம் சொல்லுங்கள்’ என்று தட்டிக்கழித்துவிட்டனர். ஒருவழியாக பறக்கும் படை அதிகாரிகள் காலதாமதமாக காட்டூர் பகுதிக்கு வந்தனர். அதனால், பொதுமக்களுடன் அவர்கள் வாகனத்தை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டத்தைச் செய்தோம். அதன் பிறகு, ராசிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், முற்றுகைப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால், இரு கட்சிகளும் கிட்டத்தட்ட பண பட்டுவாடாவை முடித்துவிட்டது.

சாதாரண கவுன்சிலர் பதவிக்கு இவ்வளவு பணம் கொடுத்து ஜெயித்து பொறுப்புக்கு வந்தால், பிறகு எப்படி அவர் நேர்மையாக மக்களுக்கு உழைப்பார்? சகலத்திலும் ஊழல் பண்ணவே நினைப்பார். தேர்தல் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கிக்கொண்டு, பண பலம் இருந்தால் வெல்லலாம், அதிகாரம் இருப்பவர்கள் எதையும் செய்யலாம் என்பதான சூழல் ஆரோக்கிய அரசியலுக்கு உகந்த விஷயமாக இல்லை. திராவிடக் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் தரும் நிலை போய், பணத்துக்கும் கூடுதலாகத் தங்கக் காசுகள், வெள்ளிக் கொலுசுகள் அதுவும் தேர்தல் முடிந்த பிறகு தருவதற்கான கூப்பன்கள் வழங்குவது என்று அடுத்த நிலைக்கு போயிருப்பதன் மூலம், ஜனநாயகத்தைக் கொலைசெய்யும் நிலைக்கு கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறார்கள். உண்மையில், இந்திய தேர்தல் ஜனநாயகம் எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை" என்றார் வேதனை வெளிப்படும் குரலில்.