சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் செயல்பட்டு வரும் பிரபலமான தனியார் நிறுவனம் பிரைம் சரவணா ஸ்டோர்ஸ். ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் உள்ள இந்த நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியன் வங்கியில் சுமார் 240 கோடி ரூபாய்க் கடன் வாங்கியுள்ளது. கடன் வாங்கிய தொகையானது வட்டியுடன் சேர்த்து அதிகரித்த நிலையில், இந்த நிறுவனம் கடன் மற்றும் வட்டித் தொகையைத் திருப்பி செலுத்தத் தவறியுள்ளது.

இந்தியன் வங்கி சார்பில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தக் கோரி, பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்குப் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இருந்தபோதும், அந்த நிறுவனம் சார்பில் கடன் தொகை செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்தியன் வங்கி இந்த விவகாரத்தை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்காக தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போதும் அந்த நிறுவனம் பணம் செலுத்தத் தவறியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடன் தொகையைக் கட்ட நீதிமன்ற உத்தரவு வந்தும், பணத்தைத் திரும்பச் செலுத்தாததினால் வங்கி சார்பில் அந்த நிறுவனத்தை ஜப்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. ஜப்தி செய்வது தொடர்பாக வங்கியிலிருந்து கடந்த 15 தினங்களுக்கு முன்பாக பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்று காலை, நீதிமன்ற அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் அங்குச் சென்றனர்.

ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோரின் துணிக்கடை மற்றும் நகைக் கடையை வங்கி அதிகாரிகள், நீதிமன்ற அலுவலர்கள் முன்னிலையில் ஜப்தி செய்து சீல் வைத்தனர். கடையை ஜப்தி செய்ததற்கு அந்த நிறுவனத்தினர் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்படுகிறது. கடைகள் ஜப்தி செய்யப்பட்டதினால் இந்த நிறுவனங்களில் வேலை பார்த்த ஊழியர்களின் நிலை என்ன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. மேலும், கடை வளாகம் ஜப்தி செய்யும்போது பெருமளவு காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டதால் அந்த இடம் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது.