அரளிப்பாறை மஞ்சுவிரட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்! - 4 பேர் பலி; 94 பேர் காயம்

அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றபோது மாடு முட்டியதில் பார்வையாளர்கள் நான்கு பேர் பலியாகினர். 94 பேர் காயமடைந்தனர்.
மதுரை ஜல்லிக்கட்டுப் போட்டியைபோல், சிவகங்கையில் மஞ்சுவிரட்டுப் போட்டிகள் விமர்சையாக நடைபெறும். ஆண்டு முழுதும் பல்வேறு இடங்களில் மஞ்சுவிரட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும், மஞ்சுவிரட்டு ஆர்வலர்களுக்கு எந்தப் பகுதியில் எப்போது மஞ்சுவிரட்டுப் போட்டி என்று தெரிந்துவிடும். இதனால் மஞ்சுவிரட்டுப் போட்டிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைவிட அதிக அளவில் கூட்டம் கூடும்.

இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவின் 10-ம் நாளில் நடைபெறும் இந்த மஞ்சுவிரட்டை முல்லைமங்கலம், சதுர்வேதிமங்கலம், கண்ண மங்கலம், சீர்சேர்ந்தமங்கலம், வேழமங்கலம் ஆகிய ஐந்துநிலை நாட்டார்கள் சேர்ந்து தொன்றுதொட்டு நடத்திவருகின்றனர்.
அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோயில் காளைகளுக்கு மரியாதை செய்து, காளைகளுக்கு வேஷ்டி, துண்டு வழங்கப்பட்டன. பிறகு, தொழுவத்திலிருந்து முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதும், மற்ற காளைகள் தொடர்ந்து அவிழ்க்கப்பட்டன.

தொழுவிலிருந்து பதிவு செய்யப்பட்ட 111 மாடுகள் மட்டும் ஜல்லிக்கட்டு காளைகளாக அவிழ்த்துவிடப்பட்டன. எனினும், ஆங்காங்கே வயல்வெளிகளிலும் ஆயித்துக்கும் மேற்பட்ட மாடுகள், கட்டு மாடுகளாகளாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில் சீறிப்பாய்ந்து சென்ற மஞ்சுவிரட்டு மாடுகள் முட்டியதில் திருப்பத்தூர் புதூரைச் சேர்ந்த சேது (45), ஆத்தங்குடியைச் சேர்ந்த அஜித்குமார் (26), நாமனூரைச் சேர்ந்த மருது (40), மேலவண்ணாரிருப்பைச் சேர்ந்த மகேஷ் (23) ஆகிய நான்கு பேர் பலியானர்கள். மேலும் 94 பேர் காயமடைந்தனர். மலைக் குன்றின் மீது அமர்ந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள், சிறுவர்கள் மஞ்சுவிரட்டைப் பார்த்தனர்.