'கொரோனா சமயத்தில் தூய்மையை முன்னெடுக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், அரசு அதிகாரிகளே பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை நீர்நிலை அருகே கொட்டச் சொல்லுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைக்கும் விதமாக மாறிவிடும் எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துவருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் குறிப்பிட்ட கண்மாய் மற்றும் ஊரணிகளில் குப்பைகள் கொட்டி சீர் கேடு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் இது குறித்து சமூக ஆர்வலர்கள் சரவணன் மற்றும் முருகன், ``சிவகங்கை நகராட்சியில் பணி புரியும் ஊழியர்கள் தினசரி தெருக்களில் வாங்கும் குப்பைகளை ஊரணிகள், கண்மாய் கரைகளில் கொட்டித் தொடர்ந்து சீர்கேட்டை உருவாக்குகின்றனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சாதாரண விஷயமாக இதைக் கடந்துபோகக் கூடாது. அவ்வாறு செல்வதன் விளைவுதான் தண்ணீர் பஞ்சம், உணவு பஞ்சம், நோய் தாக்குதல் பரிணாம வளர்ச்சி பெருகிறது. கேள்வி கேட்க ஆளில்லை என்பதனால்தான் நகராட்சி நிர்வாகம் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் நீர்நிலைகளைக் குப்பை மேடாக்கி வருகின்றனர். இப்படி குப்பை மேடாக்கி வரும் நீர்நிலைகள் பல வருடங்களுக்குப் பிறகு, காணாமல் போய்விடும். அதன் பின் ஏதாவது ஒரு அரசியல்வாதி இது தனது பாட்டனார் சொத்து, இங்கு குளமெல்லாம் இல்லை என்று ஒரு ஆவணம் தயார் செய்து, ஆக்கிரமிப்பு செய்து மல்டி ஃப்ளெக்ஸ் கட்டடங்களாக மாற்றிவிடுவார்கள்.

இது தொடர்ந்து பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. சிவகங்கை பொறுத்தவரை ஆத்தா ஊரணி, உடையார் ஊரணி, செட்டி ஊரணி எனப் பல ஊரணிகள் குப்பைகள் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் இளையான்குடி சாலையில் உள்ள கீழ்பாத்தி கண்மாய் கரையை சுற்றி சிவகங்கை நகராட்சி வாகனங்கள் மூலம் குப்பை மலை, மலையாக குவிக்கப்படுகிறது. இது அரசு அதிகாரிகளுக்கு தெரிந்துதான் நடக்கிறதா? ஊழியர்கள் தன்னிச்சையாகச்க் செயல்படுகின்றனரா என்று தெரியவில்லை. இதே போல் சிவகங்கை அரசு பழைய மருத்துவமனை அருகே இருக்கும் புறம்போக்கு இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால் காற்று மாசு ஏற்பட்டு நோயாளிகள் பாதிக்கப்படலாம். எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டனர்.

இது குறித்து வாணியங்குடி பகுதி பி.டி.ஓ பழனியம்மாள், "கீழ்பாத்திகண்மாயை தற்போது தான் சுத்தப்பட்டுத்தி வைத்தோம். மீண்டும் அங்கு குப்பை கொட்டப்படுகிறதா? இது குறித்து நகராட்சி ஆணையரிடம் விசாரிக்கிறேன்” என்றார்.
சிவகங்கை நகராட்சி ஆணையரை நாம் தொடர்பு கொண்டோம், ``நான் பயணத்தில் உள்ளேன் பிறகு பேசுகிறேன்" என்றார். பிறகு நாம் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கவில்லை.