தேனி: சிறுவனின் உயிரைப் பறித்த அரசு கட்டடத்துக்காகத் தோண்டப்பட்ட குழி! - என்ன நடந்தது?

அரசு நெல் கொள்முதல் நிலையம் கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து, சிறுவன் உயிரிழந்த சம்பவம், தேனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ளது கெங்குவார்பட்டி கிராமம். விவசாயத்தைப் பிரதான தொழிலாகக்கொண்டிருக்கும் இந்தப் பகுதியில், விவசாயிகளுக்காக அரசு நெல் கொள்முதல் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு, காட்டுரோடு நூல் தோப்பு எனும் பகுதியில் நிலமும் கையக்கப்படுத்தப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் அந்த இடத்தில், கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக அஸ்திவாரம் அமைக்கக் குழி தோண்டப்பட்டது.

இந்தநிலையில், இன்று காலை அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் செந்தில்பாண்டி - ஜோதி தம்பதியின் 5 வயது மகன் ஹரீஸ், விளையாடச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறான். நீண்டநேரம் கழித்தும் ஹரீஸ் வராத நிலையில், ஜோதி தேடிச் சென்றிருக்கிறார். அப்போது, நெல் கொள்முதல் நிலைய கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த மழை நீரில் ஹரீஸ் விழுந்து இறந்துகிடந்திருக்கிறான்.

விளையாடச் சென்ற சிறுவன் குழியில் விழுந்து இறந்ததை அறிந்த சிறுவனின் உறவினர்களும் பொதுமக்களும் அலட்சியமாகச் செயல்பட்ட கட்டட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, ஹரீஸ் உடலுடன் தேனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைச் சமாதானம் செய்துவருகின்றனர் தேவதானப்பட்டி போலீஸார்.
ஹரீஸின் தந்தை செந்தில்பாண்டி கடந்த ஒன்றரை வருடத்த்துக்கு முன்னர், உடல்நலக் குறைவு காரணமாக இறந்துவிட்ட சூழலில், தற்போது ஹரீஸ் உயிர்ழந்திருப்பது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

`தேங்கியிருக்கும் மழைநீரால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் நடந்துவரும் சூழலில், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் இடங்களை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.