தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் - 4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 5,575 மையங்களில் 16,29,865 பேர் தேர்வு எழுதினர். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் போன்ற பணிகளுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் நவம்பர் மாதம் 25-ம் தேதி வெளியானது.

இந்த நிலையில், தேர்வில் வெற்றியடைந்தவர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள், இந்த இரண்டு மையங்களிலும் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகப் பிற தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தப் புகாரின் அடிப்படையில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் தேர்வு எழுதிய பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை நேரடியாக அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 13-ம் தேதி காலை தொடங்கிய விசாரணை மறுநாள் வரை நீடித்தது. அந்த இரு மையங்களில் தேர்வெழுதிய பிற மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான தேர்வர்கள் ஒரே மாதிரியான பதிலைத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

தேர்வர்கள் அளித்த பதில் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் பேசினோம். `` பிற மாவட்டங்களைச் சேர்ந்த பலர் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுத்து தேர்வு எழுதியுள்ளனர். `சம்பந்தமே இல்லாமல் எதற்காக அந்தத் தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?' என அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர்களில் பெரும்பாலானவர்கள் `எங்கள் பாட்டிக்குத் திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரம் செல்ல வேண்டியிருந்தது. அதனால் அங்கேயே தேர்வு எழுதிவிட்டு அப்படியே திதி கொடுத்துவிட்டு வந்தோம்’ எனப் பதில் கூறினர். இந்த விவகாரம் பற்றியும் இதன் பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார் விரிவாக.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டுக்குப் பின்னால் ஒரு போலீஸ்காரர் இருப்பதாகவும் அவர் டிஎன்பிஎஸ்சி அதிகாரி ஒருவருக்குக் கார் ஓட்டுநராக இருந்ததிலிருந்து இதேபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தேர்வர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், டிஎன்பிஎஸ்சி செயலர், தேர்வுக் கட்டுப்பட்டு அலுவலர் ஆகியோர் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன் முடிவில் முறைகேடு தொடர்பாகவும் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றியும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.