`தவித்த பழவேற்காடு மீன்பிடி குடும்பங்கள்..!’ - களத்தில் இறங்கிய விகடன்

இந்தப் பேரிடர் காலத்தில் உணவு முழுமுதற்தேவையாக இருக்கிறது. அவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய வாசகர்கள் பங்களிப்போடு விகடன் குழுமம் முழு முனைப்புடன் களத்தில் இறங்கி செயல்பட்டுவருகிறது.
ஒருபக்கம் உயிர்கொல்லி கொரோனா, மறுபக்கம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் என இரண்டுக்கும் மத்தியில் சிக்கித் தவிக்கும் சாமான்ய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்தியாவில் 70 நாள்களைக் கடந்து நீடித்துக்கொண்டிருக்கும் ஊரடங்கின் காரணமாகப் பெரும்பாலான மக்கள் தங்கள் வேலைகளை இழந்து பரிதவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கின் காரணமாகக் கூலித்தொழிலார்கள், நாடோடிகள், பழங்குடிகள், புலம்பெயர் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரின் குடும்பங்கள் வருவாயின்றி பெரும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளன. நோய் பாதிப்புடன் சேர்ந்து ஊரடங்கால் உணவுக்கு வழியில்லாமல் திண்டாடுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே இருந்து வருகிறது. மக்களின் வாழ்வாதார சூழலைக் கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நிவாரண திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் வாசகர்கள் பங்களிப்போடு விகடனும் மக்களுக்காகக் களத்தில் இறங்கி பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது. பெரும்பாலான நாடோடிகள் மற்றும் பழங்குடிகளுக்கு ரேஷன் கார்டுகள் இல்லாததன் காரணமாக அரசின் எந்தத் திட்டங்களும் சலுகைகளும் அவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கப்பெறுவதில்லை.
அன்றாட வருமானம் ஒன்றையே நம்பி தங்கள் வாழ்நாள்களை நகர்த்தி வரும் இத்தகைய ஏழை மக்களின் நிலையை இந்த ஊரடங்கு அதலபாதாளத்திற்கு தள்ளி இருக்கிறது. பரிதாபகரமான சூழலில் சிரமப்படும் இந்த மக்களுக்கு பல தன்னார்வலர்கள் தங்களால் இயன்றதைத் செய்து வருகின்றனர். ஆனாலும் தேவை அதிகமிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த பழவேற்காட்டில் மீன்பிடி தொழிலையே நம்பி வாழ்க்கையை நகர்த்தி வரும் 200-க்கும் மேற்பட்ட பழங்குடி இன குடும்பங்கள் ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாக தகவல் கிடைத்தது.
செஞ்சியம்மன் நகர், ராஜரத்தினம் நகர், கள்ளுக்கடைமேடு, பேட்டை, பள்ளிக்குப்பம், கடல்கன்னியூர் மற்றும் கனவாள்துறை உள்ளிட்ட 7 கிராமங்களைத் சேர்ந்த இந்த மக்கள், பழவேற்காடு நன்னீர் ஏரியில் கமிஷன் அடிப்படையில் இறால், மீன் மற்றும் நண்டுகள் முதலியவற்றைப் பிடித்து கொடுப்பது, வலை தயாரித்துக் கொடுப்பது மற்றும் கூலித்தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண், பெண் பேதமின்றி ஏரிச் சேற்றில் இறங்கி நண்டு, இறால் கடிக்கும் ஆளாகி ரணமான இவர்களின் கரங்கள் வியாபாரிகளிடம் அன்றாடம் பெறும் அதிகபட்ச வருமானம் 250 ரூபாய் மட்டுமே. அதைக் கொண்டு பிள்ளைகளின் பசியை ஆற்றிவிட்டு பெரும்பாலும் இரண்டு வேளை உணவுடனே உறங்கச் செல்லும் இந்த ஏழை மக்களின் வாழ்க்கையை இந்த ஊரடங்கு மேலும் இன்னலாக்கி உள்ளது.

இங்கு உதவி தேவைப்படும் 249 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு 3,11,250 ரூபாய் செலவில் 20 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் முறையான சமூக விலகலைக் கடைப்பிடித்து வழங்கப்பட்டன.
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களை அடையாளம் கண்டு உதவும் விகடனின் இந்த அறப்பணி வாசகர்களின் ஆதரவுடன் தொடரும். நேரடியாக உதவி செய்ய விரும்பும் வாசகர்கள், இயன்ற தொகையை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்யலாம். கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோடு: (IFSC) CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.
Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749) /03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
வெளிநாட்டு வாசகர்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோடு: IDIB000C032, ஸ்விப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம்.
நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் `COVID 19 Relief’ என்று மறவாமல் குறிப்பிடவும். கூடவே உங்களின் பெயர், ஊரை தவறாமல் குறிப்பிடவும். முகவரி மற்றும் தொடர்பு எண்களையும் குறிப்பிடுவதும் நல்லது. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.
வாருங்கள் வாசகர்களே... நம் உறவுகளின் துயர் துடைப்போம்! - ஆசிரியர்
குறிப்பு: கடந்தகாலங்களில் உங்களோடு கரம்கோத்து விகடன் முன்னெடுத்த பணிகள் பல உண்டு. அவற்றில், `நிலம் நீர் நீதி’ மற்றும் `கஜா துயர் துடைப்போம்’ ஆகிய பணிகள் தற்போதும் தொடர்கின்றன. பணி பற்றிய விவரங்கள், கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை `வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ இணையப்பக்கத்தில் http://vasancharitabletrust.org/ கொடுக்கப்பட்டுள்ளன.