ஒரு பெண்ணுக்குப் பெருமகிழ்ச்சி தரக்கூடிய செய்தி, தன் கர்ப்பம் உறுதிசெய்யப்படும் வேளை. குழந்தையை பிரசவிக்கும் காலம் வரை ஒவ்வோர் இரவும், பகலும் கண்ணும் கருத்துமாக அந்த சிசுவின் மீது அதிக அக்கறை செலுத்துவார். மேலும், மகப்பேறு சார்ந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது, உணவு முறையைச் சரியாகக் கையாள்வது என மகப்பேறு காலத்தில் அதிக கவனம் செலுத்துவது என்பது இன்றியமையாத ஒன்று.
இந்நிலையில், ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கக் கர்ப்பிணிளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் சிகிச்சை மற்றும் ஆலோசனை முறைகளை விட கூடுதலான பயன்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே கிடைக்கும் எனும் நம்பிக்கையைக் கொண்டு சேர்க்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர் விழுப்புரம், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள்.

`Open House Day' என்பதே அந்தப் புதிய முயற்சி. ஆச்சர்யமாக உள்ளதல்லவா?! இனிவரும் ஒவ்வொரு மாதத்திலும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று `Open House Day' விழுப்புரம், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினத்தன்று, கர்ப்பிணிகள் தாங்கள் எந்த மாதிரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம், மகப்பேறு காலத்தில் எப்படி எல்லாம் இருக்க வேண்டும், வீட்டிலேயே எளிய முறையில் உடற்பயிற்சி செய்வது எப்படி போன்ற தங்களது சந்தேகங்களை உரிய மருத்துவர் மற்றும் ஆலோசகரின் மூலம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த `Open House Day' குறித்து மேலும் அறிந்து கொள்வதற்காக விழுப்புரம், நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவர் நிஷாந்த்தை தொடர்பு கொண்டு பேசினோம்.
``இதுபோன்ற ஒரு தினம் இதற்கு முன்பு எங்கும் நடைபெற்றது கிடையாது. முதன்முறையாக கடந்த 8-ம் தேதி அன்று நமது ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் செயல்படுத்தத் தொடங்கியுள்ளோம். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் HOD ஆன மருத்துவர் ராஜேஸ்வரி, சிறப்பு விருந்தினராக இருந்து இதைத் தொடங்கிவைத்தார்.
கொரோனா பரவலைக் கட்டுபடுத்த நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல் நிகழ்ச்சியின்போது, `Never let anyone to suffer' என்று கூறப்பட்ட அந்த வார்த்தையே இந்த யோசனைக்குத் துவக்கம் எனலாம். பொதுவாக, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று பரிசோதனைக்காக கர்ப்பிணிகள் இங்கு வந்து செல்வார்கள். இருப்பினும் பிரசவம் சம்பந்தப்பட்ட மருத்துவர், ஆலோசகர் மற்றும் நிபுணர்கள் ஒரே நேரத்தில் சுகாதார நிலையங்களில் இருக்கும் வாய்ப்புகள் குறைவுதான்.

எனவே, கர்ப்பிணிகள் கஷ்டப்படக்கூடாது, அவர்களுக்குத் தேவையானதை நாம்தான் கொடுக்கணும் என்பதற்காக இந்த `Open House Day' அன்று, மகப்பேறு மருத்துவர், பெண் மருத்துவர், முடக்கவியல் நிபுணர், ஆலோசகர் என துறைக்கு ஒரு நபரும், 3 செவிலியர்களும் குழுவாக இருக்கும்படி ஏற்பாடு செய்துள்ளோம். அன்றைய தினத்தில், கர்ப்பிணிகள் தங்களுக்குள்ள மனஅழுத்தப் பிரச்னைகள், எளிய முறையில் உடற்பயிற்சி செய்யும் வழிமுறைகள், பரிசோதனை வழிமுறைகள், பேறுகால உணவு முறைகள் மற்றும் சந்தேகங்களை குழுவில் உள்ள சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும் ஆலோசகர் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கர்ப்பகாலத்தில் அவர்கள் எடுத்துக்கொள்ளக் கூடிய ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை அன்றைய தினம் காட்சிப்பொருளாக வைப்போம். ஏனெனில், சொல்லிப் புரிய வைப்பதைவிட கண் பார்க்கக் காட்டினால் நன்றாக ரீச் ஆகும் என்பதற்காகத்தான் அந்த ஏற்பாடு. தன் வீட்டிற்கு வந்தவரை உபசரித்து அனுப்பும் தமிழரின் பண்பாட்டை பின்பற்றி, அன்றைய தினம் வரும் கர்ப்பிணிகளுக்கு இலவசமாக ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கி அனுப்பி வைக்கிறோம். இதற்கென 04146226341 எனும் உதவி எண்ணும் உண்டு.
இதற்கு முன்பாக இந்த எண்ணை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆலோசனை மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக பயன்படுத்தி வந்தோம். தற்போது கர்ப்பிணிகளுக்குப் பயன்படுத்துகிறோம். இவர்களுக்கு மட்டுமல்ல... யார் இந்த உதவி எண்ணிற்கு அழைத்தாலும் நிச்சயம் உதவி செய்வோம்" என்றார்.