கஷ்டப்பட்டு க்யூவில் நின்னு ரேஷன் கடையில் வெயிலில் தள்ளுமுள்ளு செய்து பொருட்களை வீட்டுக்கு வாங்கி வந்தால்… ‘இனிமேல் ரேஷன் பொருட்கள் உங்கள் வீட்டுக்கே வரும்’ என்று தேர்தல் வாக்குறுதி அறிக்கை விடுவார்கள் தலைவர்கள். அது உண்மையோ இல்லையோ… ‘அடப் போங்க பாஸ்’ என்று சலிப்பாக இருந்தாலும், கேட்பதற்குச் சொகுசாகவே இருக்கும்.
அப்படித்தான் எனது டிரைவிங் லைசென்ஸ் காலாவதியாகி, 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, டிரைவிங் ஸ்கூலில் அப்ளை பண்ணி… ஆர்டிஓ அலுவலகத்தில் காத்திருந்து… புகைப்படம் எடுத்து… மறுபடியும் லைசென்ஸை ரினியூவல் செய்து வாங்குவதற்குள்…. பெட்ரோல் விலை 18 தடவை ஏறிவிட்டிருந்தது. ரினியூவல் செய்யப்பட்ட டிரைவிங் லைசென்ஸைப் பார்த்துப் புளகாங்கிதமடையும்போதுதான் அந்த பிரேக்கிங் நியூஸ் வந்தது. ‘‘இனிமேல் டிரைவிங் லைசென்ஸ் ரினியூவல் செய்ய ஆர்டிஓ அலுவலகம் போகத் தேவையில்லை!’’ என்றது அந்தச் செய்தி.
இதற்கான Parivahan எனும் வலைதளத்தை நேற்று நம் தமிழக முதல்வர் திறந்து வைத்தும் பேசினார். இதுபோல் பல விஷயங்களுக்கு நாம் ஆர்டிஓ அலுவலகம் போகத் தேவையில்லை என்கிறது அந்த அறிக்கை.

டிரைவிங் லைசென்ஸை ரினியூவல் செய்ய…
லைசென்ஸில் முகவரி மாற்றம் செய்ய…
தொலைந்து போன உங்கள் லைசென்ஸை டூப்ளிகேட் எடுக்க…
முக்கியமாக… LLR எனப்படும் Learners Licence எடுக்க!
இப்படி முக்கியமான நான்கு விஷயங்களுக்கு நாம் ஆர்டிஓ அலுவலகம் போய், தேவுடு காக்கத் தேவையில்லை என்றொரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்குப் பெயர் Contactless Service Operation. சொல்லப்போனால், இந்த ஆப்பரேஷனை மத்திய அரசு 2018–லேயே அறிவித்து விட்டது. ஆனால், நம் மாநில அரசு நேற்றிலிருந்துதான் இதை இம்ப்ளிமென்ட் செய்திருக்கிறது.
https://parivahan.gov.in/parivahan/ எனும் இணையதளத்தில் போய்… நீங்கள் விரும்புவதை ஆன்லைன் மூலம் உட்கார்ந்த இடத்திலிருந்தே செய்து கொள்ளலாம். இதற்கு முக்கியமாக உங்களிடம் இருக்க வேண்டிய ஆதாரம் – ஆதார் கார்டு! LLR எடுப்பதற்கு உங்கள் ஆதாரங்களை அப்லோடு செய்தால்… ஒரு சின்னப் பரீட்சை வைக்கிறார்கள். வழக்கம்போல் போக்குவரத்து சிக்னல்கள்… விதிமுறைகள்… சிம்பல்கள் என்று பல விஷயங்களை நீங்கள் சரியாகப் பரீட்சை எழுத வேண்டும். (கூகுளில் சர்ச் பண்ணி பாஸ் ஆகிடலாமா எனும் உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது). அதிகபட்சம் 8 மார்க் எடுத்து பாஸ் ஆகிவிட்டால்… சின்னக் கட்டணம் செலுத்தி ஆன் தி ஸ்பாட்டிலேயே LLR –யை ப்ரின்ட் எடுத்துக் கொள்ளலாம். இந்த LLR வைத்திருக்கும் 30 நாட்களுக்குப் பிறகு உங்களுக்குத் தோதான நாளில் 8 போட்டு ஓட்டிக் காட்டி, முறையான டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக் கொள்ளலாம். இந்த எல்எல்ஆர் 150 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்னது, டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்கும் ஆன்லைனில் வழி இருக்கானு கேட்கிறீங்களா?
அதற்கும் வழிவகைகள் வந்தாலும் வரலாம். ஏற்கெனவே ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளே அத்தாரிட்டியாக இருந்து, ஆர்டிஓ அலுவலகம் வந்து 8 போட்டுக் காட்டாமலேயே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்றொரு செய்தி ரொம்ப நாட்களுக்கு முன்பு அடிபட்டு வந்தது. இது டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஜாலிதான். ஆனால், அந்த டிரைவிங் பள்ளிகளுக்குச் சொந்தமாக 5 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்றது GO. டிரைவிங் ஸ்கூல்களின் எதிர்ப்புக்குப் பிறகு 4 ஏக்கர்… அப்புறம் 3 ஏக்கர்… பின்பு 2 ஏக்கர்.. ம்ம்ஹூம்.. அதற்கும் எதிர்ப்பு வலுக்க… சிட்டிக்குள் 50 சென்ட் இடம் இருந்தால் போதும் என்றார்கள். இதை ஆன்லைன் டெஸ்ட் ட்ராக்காக இருக்க வேண்டும். இது ஒரு Computer Assisted Test Track. அதாவது, நீங்கள் இங்கே ஓட்டிக் காட்டுவது எல்லாமே கணினியில் ரெக்கார்டு செய்யப்படும் என்பதால்… டிரைவிங் ஸ்கூல் அதிகாரிகள்கூட ஏமாற்ற முடியாது. இதை பைலட் ப்ராஜெக்ட் என்றும் சொல்கிறார்கள்.
நீங்கள் என்னதான் டிரைவிங் ஸ்கூலில் மாதக்கணக்கில் பயிற்சி எடுத்துவிட்டு… ஆர்டிஓ அலுவலர் முன்பு வாகனம் ஓட்டிக் காண்பித்தாலும்… அந்த 2 நிமிடங்களில் ஒரு ஓட்டுநரின் மனநிலையை எப்படி அந்த அலுவலரால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் – ஒரு ஓட்டுநரின் மனநிலை, ஒழுக்கம், டிரைவிங் பண்புகள் என அந்த ஓட்டுநருக்கு மாதக்கணக்கில் பயிற்சி அளிக்கும் டிரைவிங் பள்ளிகளின் இன்ஸ்ட்ரக்டருக்கு நன்றாகவே தெரிந்திருக்குமல்லவா? அதற்காகவே டிரைவிங் ஸ்கூல் அதிகாரிகளிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க அரசு ஆர்டர் போட்டிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், ஆன்லைன் கம்ப்யூட்டர் அசிஸ்டட் ட்ராக், அதற்கு முதல்படியாக இருந்தால் மட்டுமே சாத்தியம். இல்லையென்றால், வண்டியை பேலன்ஸ் பண்ணத் தெரியாதவர்கள்கூட உரிமம் வாங்கும் ஏமாற்று வேலைகள் நடந்தாலும் ஆச்சரியமில்லை. இப்போதைக்கு தமிழ்நாட்டில் 14 RTO–க்களில் இதை அமுல்படுத்தியிருக்கிறது. முதல் கட்டமாக கரூரில் இந்த ஆட்டோமேட்டட் டெஸ்ட் ட்ராக்கில் சோதனை நடத்திப் பார்த்ததில், மேனுவல் டெஸ்ட்டைவிட இது ஒர்க்அவுட் ஆவது தெரிந்திருக்கிறதாகச் சொல்கிறார்கள்.
லைசென்ஸ் ரினியூவல் செய்வது… முகவரி மாற்றம் செய்வது… டூப்ளிகேட் லைசென்ஸ் எடுப்பது… எல்லாம் ஓகே! இதில் ரொம்பவும் எளிமையாகவும், எதிர்ப்பாகவும் பார்க்கப்படுவது LLR எடுப்பதுதான். எளிமையாகப் பார்ப்பவர்கள், புதிதாய் LLR அப்ளை செய்பவர்கள். இதை எதிர்ப்பாகப் பார்ப்பவர்கள் டிரைவிங் ஸ்கூல் ஓனர்கள் மற்றும் போக்குவரத்து சமூகநலக் காப்பாளர்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇது பற்றி ஒரு டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர், ‘‘ரினியூவல் ஓகே… அட்ரஸ் சேஞ்ச் பண்றது ஓகே… ஆனா LLR–ல்தான் பல சிக்கல் இருக்கப் போகுது. எங்ககிட்ட வந்து ஒருத்தங்க டெஸ்ட் எடுக்கும்போதுதான் அவங்களோட கேரக்டர் பத்தி, டிரைவிங் ஸ்டைல் பத்தித் தெரிஞ்சுக்க முடியும். ஆன்லைனில் இது மாதிரி நடக்கும்போது, கன்னாபின்னானு எல்எல்ஆர் அப்ளிகேஷன்ஸ் குவியும். அப்போ ஆதார் இருந்தா என்ன வேணாலும் பண்ணலாமா! டூப்ளிகேட் லைசென்ஸிலும் இஷ்டத்துக்குத் தொலைச்சுட்டு, இதனால் நிறைய பிரச்னைகள் வரும்!’’ என்று கொந்தளித்தார்.
ஒரு வகையில் அரசின் இந்த முடிவால், பல லட்சம் லிட்டர் பெட்ரோல் பயன்பாடு கட்டுக்குள் வரப் போகிறது. எப்படினு கேட்கிறீங்களா? தமிழ்நாட்டில் 2020–2021 ஆண்டில் 12.2 லட்சம் பேர் LLR–க்கு அப்ளிகேஷன் போட்டு வாங்கியிருக்கிறார்கள். 9.6 லட்சம் பேர் தங்கள் லைசென்ஸை ரினியூவல் செய்திருக்கிறார்கள். இந்த ஆண்டில் முகவரி மாற்றம் செய்தவர்கள் 2.3 லட்சம் பேர். அதாவது மொத்தம் 24 லட்சம் பேர். இனிமேல் 24 லட்சம் பேரும் ஆன்லைனிலேயே அப்ளை செய்து கொள்ளலாம். ஆர்டிஓ ஆபீஸ்க்குப் போக வண்டியை எடுக்கத் தேவையில்லை. அப்படியென்றால், பெட்ரோல் போடத் தேவையில்லைதானே!
என்னது, பெட்ரோல் விலையைக் குறைக்கணுமா? வாய்ப்பில்லை ராஜா!