அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் உலக அளவிலான ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டியில் தேர்வாகும் ஓவியங்கள் நாசா வெளியிடும் காலண்டரில் அச்சிடப்படும். இந்த ஆண்டுக்கான ஓவியப்போட்டி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் உள்ள மாணவ, மாணவிகள் 25,000 பேர் பங்கேற்றனர்.

இதில் இந்தியாவைச் சேர்ந்த 9 மாணவர்களின் ஓவியங்கள் தேர்வாகின. அதில் பழனி புஷ்பத்தூர் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி தித்திகாவின் ஓவியம், 10 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு பிரிவில் 2வது இடம் பெற்றது. விண்வெளி வீரர் ஒருவர் கூடைப்பந்து விளையாடுவது போன்று இவர் வரைந்து அனுப்பிய ஓவியம் காலண்டரில் இடம் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவி தித்திகாவுக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மாணவி தித்திகாவிடம் பேசினோம். ``7 வயதில் இருந்து வரையத் தொடங்கிவிட்டேன். அப்பா அருண்குமார், அம்மா உமாதேவி என்னை உற்சாகப்படுத்தினர். விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள்களின் படங்கள் வரையப் பிடிக்கும். மற்றபடி இயற்கை காட்சி, கார்ட்டூன் பொம்மைகள் என விரும்பி வரைவேன்.

ஆயில் பெயின்டிங், பென்சில் ஆர்ட் கற்றுக்கொண்டுள்ளேன். ஆனால், வாட்டர் கலர் பெயின்ட் வரைவதில்தான் ஆர்வம் அதிகம். வீட்டில் இருக்கும்போது படிப்பு நேரம் போக மீதமுள்ள நேரங்களில் வரைந்துகொண்டே இருப்பேன். தற்போது நாசா காலண்டரில் எனது ஓவியம் வந்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது’’ என்றார்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் 2018-m ஆண்டில் விண்வெளிக்குச் செல்லும் போது என்னென்ன உணவுகள் தேவை என்ற தலைப்பில் போட்டி நடைபெற்றது.

உலக அளவிலான இந்த ஓவியப் போட்டியில் பழனியைச் சேர்ந்த காவியா, செல்வஸ்ரீதத் ஆகியோரது ஓவியங்கள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக பழனி மாணவர்களின் ஓவியங்கள் நாசா காலண்டரில் இடம்பெற்றுவருவதால் ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமல்லாது பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.