குழந்தைப் பருவத்தில் பெரியாரின் மடியில் தவழ்ந்தவர் என்கிற பெருமை மட்டுமல்ல, பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக் கொள்கைகளை உறுதியாகப் பற்றி வளர்ந்தவர் அ.அருள்மொழி. உயர் நீதிமன்ற வழக்கறிஞரான இவர், ஒரு சிறந்த பேச்சாளர். திராவிடர் கழகத்தின் பிரசாரச் செயலாளராகவும் உள்ளார். அவருடனான சந்திப்பில்...
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSநீங்கள் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்த மாணவர் அரசியலுக்கும், இப்போது இருக்கும் மாணவர் அரசியலுக்கும் என்ன வேறுபாடு?
சேலத்தில் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நான் படித்தேன். அங்கே போதுமான பேராசிரியர்கள் இல்லை. கல்லூரிக்குச் சுற்றுச்சுவர் இல்லை. இப்படிப் பல பிரச்னைகள் இருந்தன. அதற்காகத் தொடர்ந்து போராடி வந்தோம். அந்த நேரத்தில், ஏற்காட்டில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் காரை மறித்தோம். எங்கள் கோரிக்கைகளை உடனே அவர் நிறைவேற்றினார். அடிப்படைப் பிரச்னைகளுக்காக மட்டுமல்லாமல், இந்தித் திணிப்பு, ஈழத் தமிழர் எனப் பல பிரச்னைகளுக்காக தமிழ்நாட்டு மாணவர்கள் தொடர்ந்து போராடிவந்துள்ளார்கள். எல்லாக் காலத்திலும் அரசியல் விழிப்புடன்தான் மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு மாணவர்கள் மீதான அரசின் அடக்குமுறை அதிகமாக உள்ளது.

சாதியின் பெயரால் தமிழகத்தில் ஆணவக்கொலைகள் நடக்கின்றன. ஆனால், பெரிய கட்சிகளெல்லாம் இதைக் கண்டும் காணாமல் உள்ளன. இதன் பின்னால் உள்ள அரசியல் என்ன?
இன்னமும் அரசியல் கட்சிகளில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கான பிரதிநிதித்துவம் என்பது ஓரளவுக்குத்தான் இருக்கிறது. அதிகார முடிவுகளை எடுக்கிற இடத்துக்கு அவர்கள் இன்னும் வரவில்லை. உயர் சாதிகள் அல்லது இடைப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள்தாம் முடிவெடுக்கிற, வழிநடத்துகிற இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சாதி நலன் என்கிற ரீதியில் பார்க்கிறார்கள். இது மிகவும் வருத்தத்துக்குரிய போக்கு. இது உறுதியாக மாற்றப்பட வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இப்போதைய காலகட்டத்தில் அரசியலுக்கு வர பெண்களுக்கு தடை ஏதும் உள்ளதா?
தடை எதுவும் இல்லை. ஆனால், அவர்களின் குடும்பங்கள் விரும்பவில்லை என்றால், அந்தப் பெண்கள் அரசியலுக்கு வருவதில் தடை இருக்கும்.
பெரியாரிடம் நீங்கள் கற்றுக்கொண்ட அரசியல் என்ன?
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஒருவர் முடிவெடுத்துச் செயல்பட ஆரம்பித்தால், அந்த மக்களிடம் நிறைய கெட்ட பெயர்களைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு பணியாற்றினால்தான், அந்த மக்களுக்குப் பயன் கிடைக்கும். இதை நான் பெரியாரிடம் கற்றுக்கொண்டேன்.
சாதிய அரசியலில் மிகவும் பாதிக்கப்படுவது ஆண்களா... பெண்களா?
இன்றைய சூழலில், சாதி அரசியலால் இருவருமே பாதிக்கப்படுகிறார்கள். நம் சமூக அமைப்பில் ஆண்களைச் சார்ந்துதான் பெண்கள் இருக்கிறார்கள். அதனால், ஒரு பெண்ணை இழப்பது என்பது ஓர் உறவை இழப்பது. ஆனால், ஓர் ஆணை இழப்பது என்பது அந்தப் பெண்ணுக்கு பல வகைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்துள்ளனவா?
பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெண்களுக்கு ஓரளவுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளன. காங்கிரஸ் கட்சியில் அனந்தநாயகி, மரகதம் சந்திரசேகர், ஜெயந்தி நடராஜன் என மாநிலத் தலைமைகள் என்று சொல்லக்கூடிய அளவுக்குப் பெண்கள் இருந்துள்ளனர். தி.மு.க-வில் எல்லா மட்டங்களிலும் பெண்கள் வலுவாக உள்ளனர். அ.தி.மு.க-வில் பெண்கள் இருந்தாலும், எவ்வளவு தூரம் அவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு உள்ளது என்பது தெரியவில்லை.