மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் மனைவி ஸ்ரீகிட், நுரையீரல் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
உலகில் ’நீண்ட காலம் ஆட்சிப்புரிந்த மன்னர்’ என்னும் பெருமை கொண்ட தாய்லாந்து மன்னர் பூமிபால், உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் 13-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து அந்நாட்டில் ஒரு வருடக் காலம் துக்கம் அனுசரிக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் பூமிபாலின் மனைவியும், தாய்லாந்தின் அரசி ஸ்ரீகிட், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ட்விட்டரில் #queensirikit, #LongLiveTheQueen என்னும் ஹேஷ்டாக்குகளின் கீழ் உலகம் முழுவதும் உள்ள தாய்லாந்து மக்கள் அரசி குணமடைய வேண்டும் என பதிவு செய்து வருகின்றனர்.