``என்னால் என்ன முடியும்?
உன் போர் முரசுக்கு நான் தாண்டவம் ஆடமாட்டேன்,
உன் போர் முரசுக்கு என் உடலையும் ஆவியையும் தரமாட்டேன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதற்கு நான் இசைந்து ஆடமாட்டேன்
நான் அந்த முரசின் ஒலியை உணர்வேன்
அது உயிரற்றது
நீ உதைக்கும் அந்த உடலை நான் அறிவேன்
அது அன்று உயிரோடு இருந்தது
குதறப்பட்டு, சூறையாடப்பட்டு, உருக்குலைந்து...
உன் மதிகெட்ட போர் முரசுக்கு நான் தாண்டவமாடமாட்டேன்
உனக்காக ஓடியாடவோ, வெட்டிமுறிக்கவோ மாட்டேன்
உனக்காக நான் வெறுக்கவும் மாட்டேன்,
அல்லது உன்னை வெறுக்கவும் மாட்டேன்.
உனக்காக நான் கொள்ளமாட்டேன், உனக்காக நான் சாகவும் மாட்டேன்
வாழ்வு என்பது என் உரிமை, அது தற்செயலானது இல்லை, அது அடைமான பொருளில்லை
என் முரசை நானோ செய்வேன்
என் அன்பு சொந்தங்களை ஒன்றுசேர்ப்பேன்
அந்த இசைக்கு நாங்கள் ஆடுவோம்
எங்கள் முனகல் பறையாய் அதிரும்
என்னை நீ இயக்க முடியாது
உன் முரசுக்கு என் பெயரோ, என் தாளமோ கிடைக்காது
நாங்கள் ஆடுவோம், எதிர்ப்போம், உறுதியுடன் ஆடுவோம்,
இறப்பைவிட சப்தமானது இதயத்துடிப்பு
உன் போர் முரசைவிட சப்தமானது அது
இந்த மூச்சைவிட சப்தமானது..."
அமெரிக்க - பாலஸ்தீன கவிஞர் Suheir Hammad கவிதை இது. பாலஸ்தீன போர், சிரியா போர், இந்தியா பாகிஸ்தான் மோதல், அரபு வசந்தம், ஈழம்... குண்டுகளின் சத்தம் ஓய்ந்தபின், அந்த மயான அமைதியில் எஞ்சியவர்களுக்குப் பலமான ஓர் மூச்சுக்காற்றுகூட பயத்தைத்தான் தரும். ரத்தமும் சதையுமாகப் போரிடும் மனிதர்களுக்குத்தான் குண்டுகளின் பயம். தினமும் பட்டினி, அவமானம், அடக்குமுறை என துப்பாக்கிகளும், குண்டுகளும் இல்லாமல் தினமும் போரிடும் மக்களுக்கு அதிகாரத்தைப் பார்த்தாலே பயம்தான். இன்று உலக அமைதி தினம். அமைதி எனும் குண்டை தன் ஆயுதங்களில் ஏந்தி உலகைத் திரும்பி பார்க்க வைத்தவர்களில் இவர்களும் சிலர். பலரைத் திரும்பி பார்க்க வைத்தாலும் நோபல் பரிசோ, பெரிய அங்கீகாரமோ கிடைக்காதவர்கள் இவர்கள்.

1. கொரசோன் அக்கினோ

பிலப்பைன்ஸ் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி இவர். அந்நாட்டில் பல ஆண்டுகளாக சர்வாதிகாரம் புரிந்த ஃபெர்டிணான்ட் மார்கோஸை எதிர்த்த பெனினோ அக்கினோவின் மனைவி இவர். பெனினோ அக்கினோ நாடு கடத்தப்பட்டு சுட்டுக்கொள்ளப்பட்டதற்குப் பின் கொரசோன் அக்கினோ அமைதியான வழியில் மக்கள் புரட்சியை வழிநடத்தி மார்கோஸை பதவி விலகச் செய்தார். பிலிப்பைன்ஸ் நாட்டில் மக்களாட்சியைக் கொண்டுவந்தவர். தனிமனித சுதந்திரத்தையும், மனித உரிமைகளைக் காக்கவும் பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசியல் சாசனத்தை மாற்றி எழுதியமைத்தவர் இவர்.
2. எலினோர் ரூஸ்வெல்ட்

அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமை இவர் கணவர் தியோடர் ரூஸ்வெல்ட்டுக்கு கிடைத்தது. ஆனால், அதற்குத் தகுதியானவர் எலினோர்தான் என்று அப்போது சர்ச்சைகள் கிளம்பியது. அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்த எலினோர் ரூஸ்வெல்ட் தியோடருக்கு சளைத்தவரில்லை. மக்கள் உரிமைக்காகவும் பெண் விடுதலைக்காவும் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் இவர். ஐ.நா சபை உருவாவதற்கு முன் 1943-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி ஐ.நா உருவாக வழி செய்தார். கணவர் ஜனாதிபதியாக இருந்த நேரத்திலேயே அவரின் கொள்கைகளை எதிர்த்து பத்திரிகையில் எழுதியவர். ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் சம உரிமைக்கும், இரண்டாம் உலகப்போரின் அகதிகளின் உரிமைகளுக்காகவும் போராடியவர். நிறவெறி முற்றியிருந்த காலத்தில் ஆப்பிரிக்க - அமெரிக்கர் பூக்கர் டி வாஷிங்டன்னை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்திட்டவர் எலினோர் ரூஸ்வெல்ட். வெள்ளை மாளிகையில் விருந்தினராக நுழைந்த முதல் ஆப்பிரிக்கா அமெரிக்கர் பூக்கர் டி வாஷிங்டன்தான்.
3. ஊ தான்ட்

பர்மாவில் பிறந்தவர் ஊ தான்ட். ஐக்கிய நாடுகள் அவையின் மூன்றாவது பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றவர் இவர். ஐநா-வின் முதல் ஐரோப்பியர் அல்லாத தலைவர். மூன்றாம் உலகப்போர் உருவாகாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் இவர். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கு இடையே இருந்த கியூபா ஏவுகணை நெருக்கடியை அணு ஆயுத போராக மாறாமல் சமாதானம் பேசி முடித்தவர். ஐ.நா-வுக்கு கான்கோ கிளர்ச்சி பெரும் சவாலாக அமைந்தது. உள்நாட்டுப் போர் ஏற்படாமல் உயிரிழப்பைக் குறைத்து கான்கோ கிளர்ச்சியை சமாளித்தார். ஊ தான்ட் இரண்டாவது முறையாக ஐ.நா-வின் பொதுச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவுடன் நல்ல உறவில் இருந்தபோதும் வியட்நாம் போரின்போது அமெரிக்காவுக்கு எதிராகப் பொதுவெளியில் குரல் எழுப்பியவர் ஊ தான்ட். பல ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் ஐ.நா-வில் இணைவதற்குத் துணையாக இருந்தவர்.
4. ஜோஸே ஃபிகுரஸ் ஃபெரர்

22 ஆண்டுகள் கோஸ்டாரிகாவின் ஜனாதிபதியாக இருந்தவர். பணக்கார குடும்பத்தில் பிறந்து அமெரிக்காவில் படித்து, பிறகு கோஸ்டாரிகா திருப்பிய ஃபெரர் அங்கு விவசாயம் செய்து பெரிய முதலாளியாக உயர்ந்தார். கோஸ்டாரிகாவில் மக்களாட்சிக்காகப் பாடுபட்டு வெற்றிபெற்றார். அமைதியை நிலைநாட்டியவர்கள் என்று பலரையும் சொல்லலாம். ஆனால், ராணுவத்தைக் கலைத்து ராணுவமற்ற தேசத்தை உருவாக்கிய முதல் ஜனாதிபதி இவர். ராணுவத்தைக் கலைத்தது மட்டுமல்லாமல் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது, ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை கொடுத்தது, ஆப்பிரிக்க மக்களுக்கு தேசிய உரிமை கொடுத்தது, வங்கிகளை தேசிய மயமாக்கியது, இலவச ஆரம்ப கல்வி கொடுத்தது என கோஸ்டாரிகாவில் மதிக்கப்பெறும் தலைவர் இவர்.
5.சிமா சமர்

சிமா சமர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். ஹஜாரா எனும் சிறுபான்மை சமூகத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். ஆப்கானிஸ்தானில் மருத்துவம் படித்து பட்டம் பெற்ற முதல் ஹஜாரா பெண் இவர். ஆப்கானிஸ்தானில் போர் சமயத்தில் சமரின் கணவர் வீடு புகுந்து கடத்தப்பட்டுக் கொள்ளப்பட்ட பின் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு தன் மகனுடன் அகதியாகச் சென்றார். 17 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த அகதிகளுக்கு மருத்துவம் பார்த்து பிறகு ஆப்கானிஸ்தானுக்கே திரும்பினார். மனித உரிமைக்காகவும், ஆப்கானிஸ்தானில் பெண்களின் சம உரிமைக்காகவும் போராடியவர். ஆப்கான் ஜனாதிபதி ஹமித் கர்சாய்யால் பெண்கள் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிறகு ஷரியா சட்டத்தை எதிர்த்ததால் கொலை மிரட்டல்களுக்கு ஆளாகினார். பிறகு, கட்டாயத்தின் பெயரில் ராஜினாமா செய்யப்பட்டார். தற்போது ஆப்கானிஸ்தான் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருக்கிறார்.
பட்டியலில் இருக்கும் 5 பேர் மட்டுமல்ல. மகாத்மா காந்தி, சார்லஸ் எவான்ஸ் ஹியூக்ஸ், சீசர் சவேஸ், ஃபசில் ஹாசன் அபெத், ஐரினா சான்டிலர் என இன்னும் பல மனிதர்கள் நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கை அளித்து அமைதியைப் பரப்புகிறார்கள். 1981-ம் ஆண்டு 88 சதவிகிதமாக இருந்த வறுமையை, 2018-ம் ஆண்டில் 2 சதவிதிமாக மாற்றிய சீனாவும் மக்களைப் பட்டினியில் இருந்து மீட்டெடுத்து அமைதியைப் பரப்புகிறது. புத்தரின் வார்த்தைகள் இவை "அமைதியை உங்களுக்குள் தேடுங்கள், மற்றவர்களிடம் தேடாதீர்கள்."