
மாத்தி யோசி... சுவையில் அள்ளும் சூப்பர் ரெசிப்பிகள்

லேடீஸ் ஃபிங்கர் கிரஞ்ச்சி சாட்
தேவை: * வெண்டைக்காய் - 250 கிராம் * தக்காளி, கேரட், வெள்ளரிக்காய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) * வேகவைத்த உருளைக்கிழங்கு - ஒன்று (சிறிய துண்டுகளாக நறுக்கவும்) * பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) * பானி பூரி - 4 (பொடிக்கவும்) * மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன் * கொத்தமல்லித்தழை - சிறிதளவு * சர்க்கரை, குளுக்கோஸ் - தலா ஒரு சிட்டிகை * டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன் * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காயைக் காம்பு நீக்கி ஒரு இன்ச் நீளத்துக்கு நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெண்டைக்காய் துண்டுகளைச் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். அதனுடன் தக்காளி, கேரட், வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், பானி பூரி, மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தழை, சர்க்கரை, குளுக்கோஸ், டூட்டி ஃப்ரூட்டி, உப்பு சேர்த்து நன்கு கலந்து உடனே பரிமாறவும்.
குறிப்பு: விரும்பினால் ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்கலாம்.
வெற்றிலை மிளகு துவையல்
தேவை: * கும்பகோணம் கார வெற்றிலை - 10 (காம்பு, நரம்பு நீக்கி நறுக்கவும்) * மிளகு - ஒரு டீஸ்பூன் * நாட்டுத் தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்) * பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்) * மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை * உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் * கட்டிப் பெருங்காயம் - சிறிய துண்டு * காய்ந்த மிளகாய் - 2 * நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: *கடுகு உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்துச் சிவக்க வறுத்தெடுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் வெற்றிலை, தக்காளி சேர்த்து வதக்கி எடுத்து ஆறவிடவும்.
அதனுடன் வறுத்த உளுத்தம்பருப்பு கலவை, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துத் தண்ணீர்விட்டு மிக்ஸியில் துவையலாக அரைத்தெடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுத் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்துத் துவையலுடன் கலக்கவும்.
குறிப்பு: விரும்பினால் சிறிதளவு ஓமம் சேர்த்து வறுத்தும் செய்யலாம்.

மாங்காய் உசிலி
தேவை: * கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 100 கிராம் * காய்ந்த மிளகாய் - 3 * சீரகம் - கால் டீஸ்பூன் * மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை * வேகவைத்த ஸ்வீட்கார்ன் முத்துகள் - 2 டீஸ்பூன் * கிளிமூக்கு மாங்காய் - ஒன்று (தோல் சீவி, துருவவும்) * கேரட் – ஒன்று (தோல் சீவி, துருவவும்) * ஊறவைத்த கொண்டைக்கடலை - 2 டீஸ்பூன் * உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: *நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன் *கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன் *காய்ந்த மிளகாய் - 2 *பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் *கறிவேப்பிலை - சிறிதளவு *தேங்காய்த் துருவல் - கால் கப்.
செய்முறை: கடலைப்பருப்புடன் துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு தண்ணீரை வடியவிட்டு சீரகம், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். மாவைச் சிறிய உருண்டைகளாக்கி 10 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் கட்டியில்லாமல் உதிர்க்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் கொண்டைக்கடலை சேர்த்துக் கிளறவும். மாங்காய்த் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு உப்பு, உதிர்த்த பருப்பு கலவை சேர்த்துக் கிளறவும். மேலே கேரட் துருவல், ஸ்வீட் கார்ன் தூவி இறக்கிப் பரிமாறவும்.

பீட்ரூட் அவியல்
தேவை: * பீட்ரூட் - கால் கிலோ * புளிப்பில்லாத தயிர் - ஒரு கப் (கடையவும்) * தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் * கறிவேப்பிலை - சிறிதளவு * உப்பு - ஒரு டீஸ்பூன்.
அரைக்க: * தேங்காய் - ஒரு மூடி (துருவவும்) * பச்சை மிளகாய் - 2 * முந்திரி - 4 * சீரகம் - கால் டீஸ்பூன் * ஊறவைத்த பச்சரிசி - கால் டீஸ்பூன்.
செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி, நீளவாக்கில் நறுக்கி, வேகவைக்கவும். அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுத்து, தயிர் சேர்த்துக் கலந்து லேசாக சூடு செய்து இறக்கவும். அதனுடன் வேகவைத்த பீட்ரூட், உப்பு, தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

ராஜ்மா கிரீன் வடை
தேவை: * வெள்ளை ராஜ்மா - 200 கிராம் * ஏதாவது ஒரு வகை கீரை (நறுக்கியது) - ஒரு கப் * பச்சை மிளகாய் - 7 - 10 * பெருங்காயத்தூள் - சிறிதளவு * குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) * ரவை - ஒரு டீஸ்பூன் * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ராஜ்மாவை 10 மணி நேரம் ஊறவிடவும். பிறகு தண்ணீரை வடித்து, அதனுடன் பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரவென அரைத்தெடுக்கவும். அதனுடன் கீரை, குடமிளகாய், உப்பு, ரவை சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, வடைகளாகத் தட்டிப்போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: விரும்பினால் சோம்பு, வெங்காயம் சேர்க்கலாம்.

தால் கிரிஸ்பீஸ்
தேவை: * பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம் * கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 * டீஸ்பூன் அரிசி மாவு - ஒரு டீஸ்பூன் * மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன் * சர்க்கரை, சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பருப்பு வகைகளைக் கழுவி, தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு தண்ணீரை வடியவிட்டு, நிழலில் உலர்த்தவும் (ஈரம் இல்லாமல் காயவிடவும்). பிறகு அவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள், சோள மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், சர்க்கரை, சமையல் சோடா சேர்த்துக் கலக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பருப்புக் கலவையைச் சிறிது சிறிதாகப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

கோகனட் மில்க் பால்ஸ்
தேவை: * தேங்காய்த் துருவல் - ஒரு கப் * நெய் - 2 டீஸ்பூன் * ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை * ஃபுல் க்ரீம் பால் - ஒரு லிட்டர் * வறுத்த முந்திரி திராட்சை - தலா 10 * சர்க்கரை - 50 கிராம்.
செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். அடிகனமான பாத்திரத்தில் ஃபுல் க்ரீம் பாலை ஊற்றி முக்கால் பாகமாகச் சுண்டும் வரை காய்ச்சவும்.
அதனுடன் சர்க்கரை சேர்த்து, கைவிடாமல் கிளறவும். நன்கு கொதித்து, பால் கோவா பதத்துக்கு வரும்போது, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். சிறிதளவு ஆறிய பிறகு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

பிளாக் கிராம் ஹெல்த்தி கொழுக்கட்டை
தேவை: * தோலுடன் கூடிய உடைத்த கறுப்பு உளுத்தம்பருப்பு - 200 கிராம் * பெருங்காயத்தூள் - சிறிதளவு * பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்) * தோல் சீவி, துருவிய இஞ்சி - சிறிதளவு * தேங்காய்த் துருவல் - கால் கப் * வெள்ளரித் துருவல் (தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும்) - கால் கப் * பச்சரிசி - 3 டீஸ்பூன் * உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: * தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் * கடுகு - அரை டீஸ்பூன் * சீரகம் - கால் டீஸ்பூன் * கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: கறுப்பு உளுத்தம்பருப்புடன் பச்சரிசி சேர்த்து ஒரு மணி ஊற நேரம் ஊறவிடவும். பிறகு தண்ணீரை வடிகட்டவும். அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துத் தண்ணீர்விடாமல் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அதனுடன் வெள்ளரித் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து அரைத்த கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். அதை கொழுக்கட்டை அச்சில் நிரப்பி எடுத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: பச்சரிசியால் மேல் மாவு செய்து உள்ளே உளுந்து கலவையை நிரப்பி, ஆவியில் வேகவிட்டும் எடுக்கலாம்.

பைனாப்பிள் கொத்சு
தேவையானவை: * பைனாப்பிள் துண்டுகள் - ஒரு கப் * கெட்டியான புளிக்கரைசல் - 3 டீஸ்பூன் * மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை * பொடித்த வெல்லம் - 50 கிராம் * உப்பு – தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: * வெள்ளை எள் - 2 டீஸ்பூன் * தனியா (மல்லி), கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் * கொப்பரைத் துருவல் - 3 டீஸ்பூன் * காஷ்மீர் மிளகாய் - 8 (கிடைக்காவிட்டால் சாதாரண காய்ந்த மிளகாயும் பயன்படுத்தலாம்) * வெந்தயம், கடுகு - தலா கால் டீஸ்பூன்.
தாளிக்க: * எண்ணெய் - 3 டீஸ்பூன் * கடுகு - அரை டீஸ்பூன் * காய்ந்த மிளகாய் - 2 * பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள பொருள்களைத் தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும். பைனாப்பிள் துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள், புளிக்கரைசல், ஒரு கப் தண்ணீர் சேர்த்துச் சூடாக்கவும். கொதி வரும்போது அரைத்த பொடி, வெல்லம் சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு இறக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து கொத்சுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

த்ரீ இன் ஒன் பொரியல்
தேவை: * தோல் சீவி, பொடியாக நறுக்கிய முள்ளங்கி, கேரட் - தலா அரை கப் * பொடியாக நறுக்கிய பீன்ஸ் - அரை கப் * தேங்காய்த் துருவல் - தேவையான அளவு * சர்க்கரை - ஒரு சிட்டிகை * உப்பு - சிறிதளவு.
தாளிக்க: * கடுகு - அரை டீஸ்பூன் * நெய் - ஒரு டீஸ்பூன் * காய்ந்த மிளகாய் - 2 * கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: குக்கரில் முள்ளங்கி, கேரட், பீன்ஸ், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து, தேங்காய்த் துருவல், வேகவைத்த காய்கறிக் கலவை, உப்பு, சர்க்கரை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: காய்களை வேகவிடும்போது உப்பு சேர்த்தால் நிறம் மாறிவிடும். மேலும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், அதிகமாகத் தேங்காய்த் துருவல் சேர்த்தாலும் நிறம் மாறிவிடும்.

பலாக்கொட்டைச் சுண்டல்
தேவை: * தோல் நீக்கி, வேகவைத்த பலாக்கொட்டை - 20 (பொடியாக நறுக்கவும்) * மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை * உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: * கடுகு - கால் டீஸ்பூன் * தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் * பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை * கறிவேப்பிலை - சிறிதளவு * பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்).
அலங்கரிக்க: * தேங்காய்த் துருவல், மாங்காய்த் துருவல் - தலா 2 டீஸ்பூன் * எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும்.
அதனுடன் பலாக்கொட்டை, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் புரட்டவும். மேலே தேங்காய்த் துருவல், மாங்காய்த் துருவல் தூவி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

அப்பளக்குழம்பு
தேவை: * பொரித்த உளுந்து அப்பளம் - 2 * புளிக்கரைசல் - அரை கப் * மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை * மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) - தலா ஒரு டீஸ்பூன் * நல்லெண்ணெய் - 100 மில்லி * உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: * கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன் * காய்ந்த மிளகாய் - 2 * கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய்விட்டு தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) சேர்த்துக் கிளறவும். அதனுடன் புளிக்கரைசல், தேவையான நீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு அப்பளத்தை உடைத்துப் போட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

லேடீஸ் ஃபிங்கர் புதினா பக்கோடா
தேவை: * மிகவும் மெல்லியதாக நறுக்கிய வெண்டைக்காய் - 250 கிராம் * புதினா - அரை கட்டு (ஆயவும்) * பொட்டுக்கடலை மாவு - ஒரு கப் * அரிசி மாவு - அரை கப் * பச்சை மிளகாய் - இஞ்சி விழுது - ஒரு டேபிள்ஸ்பூன் * சமையல் சோடா - ஒரு சிட்டிகை * நெய் - 2 டீஸ்பூன் * உடைத்த முந்திரி - 20 * மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெண்டைக்காயுடன் புதினா, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, சமையல் சோடா, நெய், முந்திரி, மிளகாய்த்தூள், பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுப் பிசிறவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு வெண்டைக்காய் கலவையைச் சேர்த்துப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

கோவைக்காய் பஜ்ஜி
தேவை: * கோவைக்காய் - 250 கிராம் * பெருங்காயத்தூள் - சிறிதளவு * ஓமம் - ஒரு சிட்டிகை * மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன் * நெய் - ஒரு டீஸ்பூன் * எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
மேல் மாவு செய்ய: * கடலை மாவு - கால் கப் * அரிசி மாவு, கார்ன் ஃப்ளார் (சோள மாவு) - தலா ஒரு டேபிள்ஸ்பூன் * மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை.
செய்முறை: கோவைக்காயை ப்ளஸ் போல நான்காகப் பிளக்கவும் (முழுவதும் வெட்டிவிடக் கூடாது). முக்கால் டீஸ்பூன் மிளகாய்த்தூளுடன் சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள், சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் குழைக்கவும். இந்த மசாலாவைக் கோவைக்காயின் நடுவே சிறிதளவு நிரப்பவும். மேல் மாவு செய்ய கொடுத்துள்ள பொருள்களுடன் சூடாக்கிய நெய், ஓமம், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு ஸ்டஃபிங் செய்த கோவைக்காய்களை மாவில் முக்கி எடுத்துப் போட்டு மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.

புளிச்சகீரை தக்காளி கடைசல்
தேவை: * வேகவைத்த துவரம்பருப்பு - 200 கிராம் * புளிச்சகீரை - அரை கட்டு (ஆய்ந்து, நீரில் அலசவும்) * தக்காளி - 5 (பொடியாக நறுக்கவும்) * பச்சை மிளகாய் - 8 (பொடியாக நறுக்கவும்) * சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் * வெல்லம் - சிறிதளவு * மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன் * உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: * எண்ணெய் - 3 டீஸ்பூன் * கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: குக்கரில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் கீரை, தக்காளி, பச்சை மிளகாய், சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள், வெல்லம் சேர்த்துக் கிளறி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பிறகு மூடியைத் திறந்து நன்கு மசிக்கவும். அதனுடன் வேகவைத்த பருப்பு சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: தக்காளி, கீரையின் புளிப்பே போதுமானது. புளி சேர்க்க வேண்டாம்.

மல்டி சீரியல்ஸ் குணுக்கு
தேவை: * வெள்ளைக் கொண்டைக்கடலை, கறுப்புக் கொண்டைக்கடலை, கறுப்பு உளுத்தம்பருப்பு, வெள்ளைப் பட்டாணி, வெள்ளைக் காராமணி - தலா 50 கிராம் (6 - 8 மணி நேரம் ஊறவிடவும்) * தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் * காய்ந்த மிளகாய் - 10 * தேங்காய்த் துருவல் - கால் கப் ஓமம், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஊறவைத்த கடலை வகைகளுடன் உப்பு, மிளகாய் சேர்த்து வடை மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். அதனுடன் இஞ்சி, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், ஓமம் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டுப் பொரித்தெடுத்து பரிமாறவும். சாம்பார் ரசத்தில் ஊறவிட்டும் பரிமாறலாம்.
குறிப்பு: விரும்பினால் மாவுடன் வெங்காயம் சேர்க்கலாம். பொரித்த துணுக்குமீது பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவியும் பரிமாறலாம்.

கோதுமை வெந்தயச் சுண்டல்
தேவை: * முளைகட்டிய வெந்தயம், முளைகட்டிய கோதுமை - தலா 50 கிராம் * தேங்காய்த் துருவல் - கால் கப் * பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் * நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு * கடுகு - கால் டீஸ்பூன் * எண்ணெய் - 2 டீஸ்பூன் * உப்பு - தேவையான அளவு.
பொடி செய்ய: * வறுத்த வெள்ளை எள், வறுத்த வேர்க்கடலை - தலா ஒரு டேபிள்ஸ்பூன் * காய்ந்த மிளகாய் - 4.
செய்முறை: கோதுமை, வெந்தயத்தைத் தனித்தனியாக குக்கரில் வேகவிட்டு எடுக்கவும். பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளிக்கவும். அதனுடன் வேகவைத்த கோதுமை, வெந்தயம், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். தேங்காய்த் துருவல், பொடித்த மசாலா, கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி இறக்கவும்.

மல்டி வெஜ் ஃப்ரை
தேவை: * 3 இன்ச் நீளத்தில் பென்சில் போல நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், வாழைக்காய் கலவை - கால் கிலோ * கடலை மாவு, அரிசி மாவு - தலா 2 டீஸ்பூன் * மிளகுத்தூள், எண்ணெய், உப்பு, தக்காளி சாஸ் - தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகளுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாதவாறு பிசிறவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுக் காய்கறிகளைச் சேர்த்துச் சிவக்கப் பொரித்தெடுக்கவும். மேலே தக்காளி சாஸ் விட்டுப் பரிமாறவும்.

கோதுமை மாவு பருப்பு பட்டன்ஸ்
தேவை: * துவரம்பருப்பு - 50 கிராம் (வேகவைக்கவும்) * கோதுமை மாவு - 150 கிராம் * பெருங்காயத்தூள், மிளகுத்தூள், சீரகம் - தலா அரை டீஸ்பூன் நெய் - 3 டீஸ்பூன் * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேகவைத்த பருப்புடன் உப்பு, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், சீரகம், நெய், கோதுமை மாவு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிறகு மாவைச் சப்பாத்தியாகத் தேய்த்துச் சிறிய பாட்டில் மூடியால் துண்டுகளாக்கி எடுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கோதுமை மாவு பட்டன்களைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

கடலைப்பருப்பு தயிர் வடை
தேவையானவை: * கடலைப்பருப்பு - 200 கிராம் * கடைந்த தயிர் - ஒரு கப் * நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: * தேங்காய்த்துருவல் - 3 டீஸ்பூன் * பச்சை மிளகாய் - 4 * பெருங்காயத்தூள், உப்பு, சர்க்கரை - தலா ஒரு சிட்டிகை.
செய்முறை: கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு தண்ணீரை வடியவிட்டு உப்பு சேர்த்து, சற்றே தளர்வாக ரவை பதத்துக்கு அரைத்தெடுக்கவும். அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். அதனுடன் தயிர், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவை வடைகளாகத் தட்டிப்போட்டு முக்கால் வேக்காடு பதத்துக்கு வேகவிட்டு எடுக்கவும். அதன் மேல் சிறிதளவு சூடான தண்ணீர்விட்டு ஊறவிடவும். ஆறிய பிறகு தயிர்க் கலவை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

ஸ்டஃப்டு ஆலு வித் கிரேடட் பனீர் மிக்ஸ்
தேவை: * பனீர் - 200 கிராம் (துருவவும்) * நடுத்தர சைஸ் உருளைக்கிழங்கு - 5 * தனியாத்தூள் (மல்லித்தூள்), சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன் * பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) * ஆம்சூர் பவுடர் (அ) எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன் * வறுத்துப் பொடித்த வெள்ளை எள் - 2 * டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கைத் தோலுடன் வேகவிட்டு எடுத்து, இரண்டாக நறுக்கவும். அதன் உட்புறம் கத்தியால் வழித்து எடுத்துவிட்டு, பள்ளம்போல செய்யவும் (வழித்து எடுத்தவுடன் உருளைக்கிழங்குத் துண்டு 2 இன்ச் கனத்துக்கு இருக்க வேண்டும்).
பனீருடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், வெள்ளை எள் பொடி, சீரகத்தூள், பச்சை மிளகாய், ஆம்சூர் பவுடர் (அ) எலுமிச்சைச் சாறு சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். இதை உருளைக்கிழங்கின் பள்ளத்தில் வைத்து நிரப்பி, தோலை நீக்கிவிட்டுப் பரிமாறவும்.

பிட்டர்கார்டு பிக்கிள்
தேவை: * பாகற்காய் - 200 கிராம் (விதை நீக்கி, பொடியாக நறுக்கவும்) * பச்சை மிளகாய் - 6 * எலுமிச்சை - ஒன்று (சாறு பிழியவும்) * மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை * வறுத்து அரைத்த வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன் * உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: * நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன் * கடுகு - கால் டீஸ்பூன் * காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை: பாகற்காயை அரை வேக்காடு பதத்தில் வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வேகவைத்த பாகற்காய், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் எலுமிச்சைச் சாறு, வெந்தயப்பொடி சேர்த்துக் கலந்தால் பிட்டர்கார்டு பிக்கிள் ரெடி.

ஸ்நேக்கார்ட் ரிங்ஸ்
தேவை: * பிஞ்சுப் புடலை - கால் கிலோ (வட்டமாக நறுக்கவும்; *விதை நீக்க வேண்டாம்) * அரிசி மாவு, கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - தலா 3 டீஸ்பூன் * ஓமம் - கால் டீஸ்பூன் * பெருங்காயத்தூள், மிளகுத்தூள் (அ) ஒன்றிரண்டாக இடித்த காய்ந்த மிளகாய் - தலா அரை டீஸ்பூன் * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நறுக்கிய புடலையுடன் அரிசி மாவு, சோள மாவு, ஓமம், பெருங்காயத்தூள், மிளகுத்தூள் (அ) இடித்த காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கலக்கவும். அதன் மீது சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, புடலை வில்லைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

ஹோம்மேட் ரைஸ் அப்பளம்
தேவை: * பச்சரிசி - 200 கிராம் (கழுவி, நிழலில் உலர்த்தவும்) * ஜவ்வரிசி - 50 கிராம் * தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் * சீரகம் - கால் டீஸ்பூன் * பெருங்காயத்தூள் - சிறிதளவு * எலுமிச்சைப் பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்) * பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன் * அரிசி மாவு - சிறிதளவு * தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் * உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து மெஷினில் மாவாக அரைத்துச் சலிக்கவும். அதனுடன் சீரகம், உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கலக்கவும். பிறகு சிறிதளவு தண்ணீர்விட்டுப் பிசைந்து உருண்டைகளாக்கி, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். அதனுடன் தேங்காய் எண்ணெய், எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கைபொறுக்கும் சூட்டில் நன்கு பிசையவும். மாவை ஈரத்துணியால் அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, தட்டி அரிசி மாவு தோய்த்து மெல்லிய அப்பளங்களாக இட்டு, வெயிலில் காயவைத்து எடுக்கவும். நன்கு காய்ந்த பிறகு சூடான எண்ணெயில் பொரிக்கலாம். ஜவ்வரிசி சேர்ப்பதால் அப்பளம் நன்கு பொரியும்.

ஆந்திரா தாளித்த பொங்கல்
தேவை: * பாசிப்பருப்பு - 50 கிராம் (ஊறவைக்கவும்) * பச்சரிசி நொய் - 200 கிராம் * மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு * நெய் - ஒரு டீஸ்பூன் * உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: நெய், எண்ணெய் - தலா 3 டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் சீரகம், பொடித்த மிளகு - தலா அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (கீறவும்) காய்ந்த மிளகாய் - ஒன்று தோல் சீவி நறுக்கிய இஞ்சி - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: குக்கரில் நெய், எண்ணெய் சேர்த்துக் கலந்து சூடாக்கவும். அதில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் 500 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், பாசிப்பருப்பு, பச்சரிசி நொய் சேர்த்துக் கிளறி மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து ஒரு டீஸ்பூன் நெய்விட்டுக் கிளறிப் பரிமாறவும்.

வேர்க்கடலை வத்தக்குழம்பு
தேவை: * பச்சை வேர்க்கடலை - 50 கிராம் * மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன் * சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் * கெட்டியான புளிக்கரைசல் - 3 டேபிள்ஸ்பூன் * வெல்லம் - சிறிதளவு * நல்லெண்ணெய் - 100 கிராம் * உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: * தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன் * வெந்தயம் - அரை டீஸ்பூன் * காய்ந்த மிளகாய் - 3 * மிளகு - 10.
தாளிக்க: * கடுகு - அரை டீஸ்பூன் * துவரம்பருப்பு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன் * காய்ந்த மிளகாய் - 2 * பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) * கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்தெடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்தெடுக்கவும். கனமான வாணலியில் 50 கிராம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சாம்பார் பொடி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் வறுத்து அரைத்த பொடி, வெல்லம் சேர்த்து, மீதமுள்ள 50 கிராம் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு கொதிவிட்டு இறக்கவும். இது, ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.
குறிப்பு: விரும்பினால் பூண்டு, வெங்காயத்தைத் தாளிப்பில் சேர்க்கலாம்.

கோஸ் வடகறி
தேவை: * பொடியாக நறுக்கிய கோஸ் - ஒரு கப் * கொத்தமல்லித்தழை, புதினா - தலா கால் கப் * பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்) * தக்காளி - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்) * கடலைப்பருப்பு - 200 கிராம் * காய்ந்த மிளகாய் - 5 * சீரகம் - ஒரு டீஸ்பூன் * மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை * தனியாத்தூள் (மல்லித்தூள்), மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன் * நறுக்கிய கொத்தமல்லித்தழை (அலங்கரிக்க) - சிறிதளவு * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: * எண்ணெய் - ஒரு டீஸ்பூன் * நெய் - 2 டீஸ்பூன் * கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன் * ஏலக்காய் - 4.
செய்முறை: கடலைப்பருப்பை ஒரு மணி ஊறவைத்துத் தண்ணீரை வடியவிடவும். அதனுடன் காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்துத் தண்ணீர்விடாமல் கொரகொரவென அரைத்தெடுக்கவும். பிறகு கோஸ், புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, கோஸ் கலவையைச் சிறிய பக்கோடாக்களாகக் கிள்ளிப்போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ஆறியதும் ஒன்றிரண்டாக உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய், நெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் தக்காளி, தனியாத்தூள் (மல்லித்தூள்), மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு 3 கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். அதனுடன் உதிர்த்த கோஸ் பக்கோடாவைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். பக்கோடா நன்கு ஊறிய பிறகு மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

மைதா கோன்ஸ்
தேவை: * மைதா மாவு - 100 கிராம் * ஓமம் - ஒரு சிட்டிகை * மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை * மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் * நெய் - அரை டீஸ்பூன் * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவுடன் ஓமம், மஞ்சள்தூள், மிளகுத்தூள், நெய், உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் தேய்த்து, ஒரு இன்ச் அகலத்துக்கு நீளவாக்கில் துண்டுகளாக்கவும். ரிப்பன் போல் வரும். இந்த மைதா ரிப்பன்களை கூம்பு வடிவ அலுமினியம் அல்லது இண்டோலியம் மோல்டின் மீது கீழிருந்து சுற்ற ஆரம்பித்து மேலே முடிக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மோல்டை அப்படியே எண்ணெயில் போடவும். சிறிது நேரம் கழித்து மோல்டில் இருந்து மைதா கோன் தனியாக வெளியே வந்துவிடும். பிறகு மோல்டை வெளியே எடுத்துவிடவும். மைதா கோனை வேகவிட்டு எடுக்கவும். இந்த கோனுள் மிக்ஸர், சுண்டல், ஓமப்பொடி, பொரியல் வகைகளை நிரப்பிப் பரிமாறலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

ஏதோ ஒன்றைச் சாப்பிட வேண்டாமே!
வீட்டுச் சமையல் என்பது அக்கறையுடன், ஆரோக்கியமாகச் செய்யப்பட்டாலும் வெரைட்டி அதிகம் இல்லாதபோது சலிப்பைத் தரும். ஹோட்டல் மெனுவும்கூட தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், காலப்போக்கில் சாய்ஸ்கள் தீர்ந்து `ஏதோ ஒன்றைச் சாப்பிடலாம்’ என்பதுபோன்ற சுவாரஸ்யமற்ற மனப்போக்கை ஏற்படுத்தும். இதற்கு என்னதான் தீர்வு? `நான் சொல்லித்தருகிறேன் வாருங்கள்’ என்று உரிமையுடன் அழைக்கிறார் சமையல் கலைஞர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன்.
``முருங்கைக்காய் வத்தக்குழம்பு, வெண்டைக்காய் கறி, கொத்தவரங்காய் உசிலி, வாழைக்காய் பஜ்ஜி, வெங்காயப் பக்கோடா, சமோசா, தேங்காய்த் துவையல், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றுக்குப்பதில் வேர்க்கடலை வத்தக்குழம்பு, லேடீஸ் ஃபிங்கர் கிரஞ்ச்சி சாட், மாங்காய் உசிலி, கோவைக்காய் பஜ்ஜி, லேடீஸ் ஃபிங்கர் புதினா பக்கோடா, பைனாப்பிள் கொத்சு, மைதா கோன்ஸ், வெற்றிலை மிளகு துவையல் என்று வித்தியாசமான, சுவையில் அள்ளும் சூப்பர் ரெசிப்பிகளை இங்கே வழங்கியிருக்கிறேன்.
கூடவே பிளாக் கிராம் ஹெல்த்தி கொழுக்கட்டை, பலாக்கொட்டை சுண்டல், கோதுமை வெந்தயச் சுண்டல் போன்ற மிகவும் சத்துமிக்க ரெசிப்பிகளையும் கொடுத்துள்ளேன். இவற்றையெல்லாம் செய்து பரிமாறுவதுடன், நீங்களும் தேவையான அளவு சாப்பிடுங்க’’ என்று உற்றதோழியாக, அக்கறையுடன் சொல்கிறார் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன்.
படங்கள்: தி.குமரகுருபரன்