
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'விழிக்கு உணவு இல்லாதபோதே கொஞ்சம் வயிற்றுக்கு ஈயப்படும்’ என்று புதுக்குறள் சொல்லவைத்தது பாரதியார் பல்கலைக்கழக மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி. விழா நடந்த நான்கு நாட்களும் மாலையில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து இருந்தது சுற்றுலாத் துறை. சுவையான உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டே கலைநிகழ்ச்சிகளை ரசிப்பதில் உள்ள திருப்தி இருக்கிறதே, அனுபவித்தால்தான் தெரியும்.

வெறுமனே இந்திய உணவுகள் மட்டும் இல்லாமல் இத்தாலி, பிரெஞ்சு, சீனா, வியட்நாம் என்று சாப்பாட்டில் சர்வதேசத்தைக் காணமுடிந்தது. எல்லா உணவுகளையும் சுவைப்பதற்கு பாக்கெட்டில் பணம் இல்லாததால் சாப்பாடு எப்படி என்று சொல்ல முடியவில்லை. ஆனால், விதவிதமான அலங்காரங்களால் மக்களைக் கவர்ந்தன அனைத்து உணவகங்களும்.

மீனவர் கிராமம் என்ற பெயரில் இடம்பெற்று இருந்த உணவகத்தில் மீனவர்களைப் போலவே தலையில் நீண்ட தொப்பி வைத்து, மண் அடுப்பில் சமைத்து மண்சட்டியில் பரிமாற 'கடல் வாசனை’யுடன் (எத்தனை நாளைக்குத்தான் மண்வாசனைன்னே சொல்றது?) சாப்பாடு சூப்பர். இன்னொரு உணவகமோ புதுவைக்கு முற்றிலும் புதுமையான அரேபிய உணவுகளான அரேபிய சவர்மா, சிக்கன், மட்டன் எனத் தயாரித்து வழங்கி உணவுப் பிரியர்களை உற்சாகப்படுத்தியது. 'லா-ஸ்பாஸ்’ என்ற கடையில் அயல்நாட்டுப் பெண்மணி ஒருவர் உணவினைத் தயாரித்துக் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். கல்லூரிப் பெண்களின் கூட்டம் சற்று அதிகம். ஃபிரான்ஸில் இது விடுமுறைக் காலம் என்பதால் வெளிநாட்டினரையும் அதிகமாகக் காண முடிந்தது. மங்களூர் சிக்கனை அப்படியே உள்ளே தள்ளிக்கொண்டு இருந்த காவ்யா-ப்ரியாவிடம் பேசினேன். ''வழக்கமாகச் செல்லும் ஹோட்டல்களுக்குச் சென்றால் இப்படியான வெரைட்டி டிஷ் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் இதில் ஏதாவது ஒரு டிஷ்ஷைத்தான் ஸ்பெஷலாக வைத்து இருப்பார்கள். ஆனால், இங்கே அனைத்து விதமான டிஷ்களும் ஒரே இடத்தில் கிடைப்பதுதான் ப்ளஸ். இருப்பதிலேயே சூப்பர், கேரளக் குழாய்ப் புட்டு, பால் அப்பம், இலை அப்பம், துளசி டீ, வேகவைத்த மரவள்ளிக் கிழங்குதான்'' என்று காவ்யா சப்புக்கொட்ட ''இல்லை சார், இவ பொய் சொல்றா. அங்கதான் இருக்கிறதிலேயே விலை கம்மி. அதான்..'' ப்ரியா சிரிக்க, காவ்யாவும் சிரிப்பைத் தொடர்ந்தார்.
ஆஹாங், பொண்ணுங்க சிரிச்சாலே திருவிழாதானே!
- கட்டுரை, படங்கள்: ஜெ.முருகன்