வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
எந்த மனைவியுமே, கணவனிடம் விதவிதமான பட்டு புடவைகள், தங்க வைர நகைகள், கார் போன்றவற்றை எல்லாம் எதிர் பார்ப்பதில்லை. மாறாக அவளின் எதிர்பார்ப்பு சுயமரியாதையும் கணவன் தன்னிடம் பிரியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதும் தான்! திருமணம் ஆகப்போகும், ஆன ஆண்களே சில விஷயங்களை நீங்கள் மனதில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
தன் மனைவி தன்னிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள் என்பதை தெரிந்து கொண்டாலே இல்லறவாழ்க்கை இனிய நாதமாக மாறும். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா இதோ உங்களுக்காக சில விஷயங்களை பட்டியலிடுகிறேன்.
*அம்மாவிடமும், மனைவியிடமும் ஒரே மாதிரி பாசத்தை காட்டு. அம்மாவும் மனைவியும் இரு கண்கள் .
*எங்கு சென்றாலும் மனைவியிடம் ஒரு வார்த்தை சொல்லி தெரியப்படுத்திவிடுவது நல்லது.

* மனைவி தனது உடல்நிலை பற்றி கூறும் பொழுது சற்று தயவுசெய்து காது கொடுத்து கேட்கவும். அது கத்தியால் கீறிக் கொண்ட சின்ன காயமாக இருந்தால் கூட பரவாயில்லை.
*வீட்டில் மற்றவர்கள் முன் மனைவியை மட்டம் தட்டிப் பேசக் கூடாது. யாரிடமும் மனைவியைப் பற்றி மரியாதை குறைவாக பேசக் கூடாது.. இது உங்கள் அன்னியோன்னியத்தை குறைத்துவிடும்.
* தினமும் மனைவிக்கு என்று நேரம் ஒதுக்கி அவளிடம் மனம் விட்டுப் பேசுங்கள். மொட்டைமாடி இருந்தால் அவளையும் அழைத்துக்கொண்டு தாராளமாக ஒரு'walk' போய் வரலாம்.
* வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை கண்டிப்பாக நீங்கள் இருவர் மட்டும் வெளியில் செல்லுங்கள்.
*மனைவி வித்தியாசமாக புதியதாய் ஏதாவது செய்தால் அதை ரசித்துப் பாராட்டுங்கள். அவ்வப்பொழுது மனைவியின் மனம் உறுத்தாமல் சின்ன சின்ன கிண்டல்கள் ,கேலிகள் செய்து விளையாடுங்கள். நண்பர்களை மட்டும் தான் கேலி செய்ய வேண்டுமா என்ன?

* மனைவியை விட ஒரு கணவனுக்கு சிறந்த தோழி யாராக இருக்க முடியும். சின்ன சின்ன சீண்டல்கள் வாழ்வை ருசீகரமாக்கும்.
* மனைவியை எப்பொழுதும் அழகாக பெயரிட்டோ, அல்லது செல்லப் பெயரிட்டோ அழையுங்கள்.
*மனைவியின் பிறந்தநாள் அன்று முதன்முதலில் வாழ்த்து சொல். சின்னதாய் க்யூட்டாய் மகிழ்ச்சி அளிக்கிற ஏதாவது பரிசு கொடுங்கள். பரிசு வாங்காவிட்டால் கூட பரவாயில்லை. நெற்றியில் அழகாக முத்தமிட்டு குட்மார்னிங் செல்லம் .ஹாப்பி பர்த்டே என்று சொல்லுங்கள்.
*ஞாயிறன்று ஓய்வே இல்லாமல் வேலை செய்யும் மனைவியிடம் "வா இரவு டிஃபன் வெளியே பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிப்பாருங்கள்..
*மனைவி புத்தாடை, நகை அணிந்து வந்து உங்களிடம் காண்பிக்கும் பொழுது எதுவுமே சொல்லாமல் ம்...ம்..என்று முனகாமல்' வாவ் சூப்பர்' என்று வாய் திறந்து சொல்லுங்கள்.
அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்களிடம் வேறு வழியே இல்லாமல் முகஸ்துதி செய்வீர்கள் அல்லவா?!ஆனால் காலம் முழுவதும் உங்களுடனேயே வரும் துணையை பாராட்டினால் குறைந்தா போகமாட்டோம்.

*திடீரென்று உறவினர்கள் வீட்டுக்கு வந்து விட்டால் மனைவிக்கு சமையலில் உதவி செய்யுங்கள்.
* மனைவி செய்யும் எந்த நல்ல விஷயத்தையும் மனம் திறந்து பாராட்டுங்கள். அவ்வப்பொழுது மென்மையாக தொட்டு பாராட்டலாம். தோளில் தட்டிக் கொடுக்கலாம் .
*எல்லாவற்றிற்கும் மேலாக மனைவியின் மெல்லிய உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.
உங்கள் இல்வாழ்க்கை ஒரு இனிய நாதமாக மாற இந்த அம்மாவின் அன்பு வாழ்த்துகள்.

ஒரு விதை போட்டால் உடனேவா முளைத்துவிடுகிறது? முளைக்கநேரம் காலம் எல்லாம் இருக்கிறதல்லவா!
அது போல் தான் திருமணம் ஆனவுடன் மனைவி உன்னை புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதும்.. அவளுக்கு கொஞ்சமே கொஞ்சம் நேரம் கொடுங்கள். இருவரும் விட்டுக் கொடுத்து சந்தோஷமாக இருங்கள்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.