மிகவும் நெருக்கமான ஒருவர் நம் இல்லத்துக்கு வரும்போது 'வா' என்று அழைக்கிறோம். வாருங்கள் என்பதை சுருக்கி 'வாங்க' ன்னு மரியாதையாகவும் சொல்வோம்.
குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் போது 50 ஆண்டுகளுக்கு முன்பு நிலாவைக் காட்டி காட்டி... வா வா ன்னு சொல்லு என்று நம் பாட்டிமார்கள் அப்பாக்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள். காலம் மாற மாற அதுவும் மாறிவிட்டது. இப்போது 'வா' க்கு பதில் 'பா'.. அதாவது செல்போன் பாரு..பாரு... என்று மாத்தி யோசிச்சு செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர். வா வா வாய் நிறைய சொல்லிப்பாருங்கள் அதில் ஒரு சுகம் கிடைக்கும். இந்த 'வா' வில் தொடங்கும் முக்கியமான இடங்கள், சில திரைப்பட பாடல்கள், அது என்னென்ன இடங்களில் எப்படி எப்படி சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது என்று பார்க்கலாம்.

'வா' ரணாசி
வட இந்தியாவிலுள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தில் கங்கை கரையில் அமைந்த நகர் இது. இந்துக்களின் ஆன்மிக தலைநகராகவும் உள்ளது. புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயம் இங்குள்ளது.
பெனாரஸ் பட்டுப்புடவைகள் இங்குதான் தயாரிக்கப்படுகிறது. 1916 ஆம் ஆண்டு 'பெனாராஸ் ஹிந்து பலகலைக்கழகம்' நிறுவப்பட்டது. ஆதி சங்கரர் சிவ வழிபாட்டை நிலை நாட்டியதும் இங்குதான். புத்தர் பல ஆண்டுகள் தவமிருந்து ஞானம் பெற்றதும் வாரணாசிக்கு அருகில் உள்ள சாரணத்தில்தான் சீடர்களுக்கு தர்மத்தை போதிக்க ஆரம்பித்தார். சமணர்களுக்கும் வாரணாசி புனித இடமாகும்.
சீன யாத்திரிகர் யுவான் சுவாங் தனது பயண நூலில் இந்த நகரத்தைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். இறந்தவர்களின் அஸ்தியை கங்கையில் கரைத்தால் அந்த ஆன்மா முக்தி அடையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தினமும் சூரியன் மறையும் வேளையில் கங்கைக்கு ஆரத்தி எடுப்பது வழக்கம். அதை கங்கா ஆரத்தி என்பார்கள். 30 நிமிடங்கள் அது நடைபெறும். நான் கடவுள் படத்தில் அந்த காட்சியை டைரக்டர் பாலா காட்டியிருப்பார்.
அதனைத் தொடர்ந்து, 'ஓம் சிவோஹம்' என்ற பாடல் ஒலிக்கும். நமது நாடி நரம்புகளில் எல்லாம் ஓங்காரம் புகுந்து நம்மை மெய்மறக்கச் செய்யும். தியான நிலைக்கு சென்று விடுவோம். தியானம் முடியும் போது 'அஹம் பிரம்மாஸ்மி...அஹம் பிரம்மாஸ்மி... சிவோஹம்...சிவோஹம்...என்று சொல்வார்கள்.
உன்னுள்ளே கடவுள் இருக்கிறார் என்று பொருள். வாரணாசி சென்றால் இதை பரிபூரணமாக உணரலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS'வா'டிகன் நகரம் :
இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உள்ளது வாடிகன். கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைமை மையம் இது ஒரு புனித ஸ்தலம். தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடு.
இதை ஆள்பவர் போப். தற்போதைய போப் அர்ஜெண்டீனா நாட்டை சேர்ந்த பிரான்சிஸ் அவர்கள். இவர் செய்த மிகப் பெரிய விஷயம் முதல் முறையாக உயர் பதவியில் பெண் ஒருவரை நியமனம் செய்தது. போப்பின் செயல்பாடுகளில் அவருக்கு உதவ மற்றும் ஆலோசனைகள் வழங்கும் அமைப்பிற்கு SYNOD OF BISHOPS என்று பெயர். இந்த அமைப்பில்தான் சகோதரி நத்தலி பெகார்ட் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். வாடிகன் வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய நிகழ்வு.

'வா' ட்டர்லூ :
வரலாற்றில் முக முக்கியமாக அறியப்பட்ட இடம் இதுதான். பெல்ஜியம் நாட்டில் உள்ள வாட்டர்லூ என்ற இடத்தில் நடந்த போரில்தான் மாவீரன் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டான். தனது 15 வது வயதிலேயே பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து 16 வது வயதிலே உயர் பதவியை அடைந்தார். 1804 முதல் 1814 வரையில் பிரான்ஸ் நாட்டின் பேரரசாரக இருந்தார். தொடர்ச்சியான போர்களின் மூலம் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பா வரையில் தனது எல்லைகளை விரிவுபடுத்தினார். ஜூன் 18 1815 ஆம் ஆண்டு ஆங்கிலேயப் படைகளும் பிரசியப் படைகளும் இணைந்து நெப்போலியன் மீது போர்தொடுத்து அவரை தோற்கடித்தனர். எவ்வளவு பெரிய மாவீரர்களும் ஒரு நாள் தோல்வியை சந்திக்க நேரும் என்பதை உணர்த்துவதே இந்த வாட்டர்லூ யுத்தம். ஆங்கிலத்தில் TO MEET ONE'S WATERLOO என்ற சாட்டு வாக்கியம் . (idioms and pharases) அதை ஒட்டியே உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
'வா' லிப கவிஞர் வாலி :
எம்.ஜி.ஆர். அவர்களின் சினிமா வாழ்கையில் பல திருப்புமுனைகளை தந்தது வாலி அவர்களின் பாடல்களே. 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்... நாளை நமதே.. போன்ற பாடல்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
Also Read
சிவாஜி அவர்களுக்கு இவர் எழுதிய 'மாதவி பொன்மயிலால்..' பாடல் அற்புதமான வர்ணனைகளைக் கொண்டது. அப்பாடல் கண்ணதாசன் எழுதியது என்று இன்றும் சிலர் நினைத்துக்கொண்டு இருப்பார்கள். ஏனெனில் சமகாலத்தில் பயணித்தவர்கள் அவர்கள் இருவரும். மலரே குறிஞ்சி மலரே..., இதோ எந்தன் தெய்வம் முன்னாலே... போன்ற அற்புதமான பாடல்களை அவருக்காக எழுதியுள்ளார்.

கமல்ஹாசனுக்காக இவர் எழுதிய 'கல்லை மட்டும் கண்டால்' பாடல் அனைவராலும் போற்றப்பட்ட பாடல். ரஜினிக்காக ராக்கம்மா கையை தட்டு.." என்றதும் திரை அரங்கமே ஆட்டத்தால் அதிர்ந்து போனது. அது மட்டுமில்லாமல் 2002 ஆம் ஆண்டு உலகளவில் பிபிசி வேர்ல்ட் சர்வீஸால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இப்பாடல் நான்காவது மிகப் பிரபலமான பாடல் என்ற அந்தஸ்தைப் பெற்றது.. எல்லா காலங்களுக்கும் புதிய கதாநாயகர்களுக்கும் பாடல் எழுதிய ஒரே கவிஞர் இவர்தான்.. அதனாலே வாலிப கவிஞர் என்றே அழைக்கப்பட்டார்.
தேங்காய் சீனிவாசன் கதாநாயகனாக நடிக்க 'கலியுக கண்ணன், அதிர்ஷ்டம் அழைக்கிறது போன்ற படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். இரண்டுமே அருமையான படங்கள். ஆனந்த விகடனில் இவர் புதுக்கவிதையில் எழுதிய 'அவதார புருஷன்' மிகவும் பிரபலமானது. 1995 ஆம் ஆண்டு ராம நவமி அன்று தொடங்கினார். அதைப் படித்த லட்சக்கணக்கான வாசகர்கள் பக்தி வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தனர். இவர் மேலும் மகாபாரதத்தை வசனக்கவிதை நடையில் 'பாண்டவர் பூமி' என்ற தலைப்பில் அதே விகடனில் மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக எழுதியுள்ளார். இரு பெரும் காப்பியங்களை கவிதை நடையில் எழுதி மகத்தான சாதனை படைத்தார்.
'வா' க்கு வங்கி
உலக வங்கியை விட மிகப்பெரிய வங்கி இந்த வாக்கு வங்கிதான். அரசியல்வாதிகள் அனைவரும் ஸ்விஸ் வங்கியை விட அதிகமாக யோசிப்பது இந்த வங்கியைத்தான். இது முற்றிலும் தனியார் வங்கி. நடத்துவது மக்கள்தான் ஆனால் இதனால் அவர்களுக்கு எந்த லாபமுமில்லை. இதை முற்றிலும் தங்கள் வசமாக்க எல்லாரும் முயல்வார்கள். சூழ்நிலைக்கேற்றது போல இந்த வங்கி மாறும். இதற்கு விதிமுறைகள் என்று ஏதுமில்லை.
'வா' ராய்
"2...’’ என்று பாட ஆரம்பித்தால் போதும் தலைமுறை இடைவெளி இல்லாமல் 'போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்' ன்னு எசப்பாட்டு எல்லா திசைகளிலிருந்தும் ஒலிக்கும். மந்திரிகுமாரி' படத்தில் இடம்பெற்றது. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படம். தமிழில் உள்ள ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியை தழுவி எடுத்த படமிது. இதற்கு வசனம் எழுதியவர் கருணாநிதி அவர்கள். இந்தப் பாடலை திருச்சி லோகநாதன் அவர்களும் ஜிக்கி அவர்களும் இணைந்து பாடினார்கள். தனியார் தொலைக்காட்சிகள் நடத்தும் பாட்டுப்போட்டிகளில் ஜூனியர்கள்கூட இதை தேர்வு செய்து பாடுவதுதான் சிறப்பு.

'வா' ராயத் தோழி...
"பாசமலர் படத்தில் இடம்பெற்ற ஒரு அற்புதமான பாடல் இது. எல்.ஆர். ஈஸ்வரி வாழ்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது இந்தப் பாடல்தான். 1990 வரையில் ஒவ்வொருவரின் வீட்டு திருமண விழாவில் கட்டாயம் இந்தப் பாடல் ஒலிக்கும். பாட்டுப்போட்டிகளில் இந்தப் பாடலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வா வா என்று நல்லவைகளை அழைப்போம். அவைகள் வந்து சேர சேர கெட்டவைகள் காணாமல் போய்விடும். வாழ நினைத்தால் வாழலாம் வழியாய் இல்லை பூமியில்... என்று கண்ணதாசன் பாடியதை நினைவில் நிறுத்துவோம். நல்ல வழியில் செல்வோம்.
'வா' க்கு உண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு... - அவ்வையாரின் இந்த மூதுரைப் பாடலை பாடி பூக்களால் விநாயகர் பாதங்களை துதிப்பவருக்கு லட்சுமி கடாச்சமும் நோயற்ற வாழ்வும் கிடைக்கும் என்கிறார் அந்த தமிழ் மூதாட்டி.
நல்ல வாக்கும் நல்ல மனமும் இருந்தால் போதும் மற்றவர்கள் நம்மைப் பார்த்து 'வா' வ் என்று சொல்லும்படியான ஒரு வாழ்க்கையை நாம் வாழலாம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.