தேசிய யோகா விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தேசிய அளவிலான இரண்டாவது சீனியர் யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டிகள் சமீபத்தில் நடந்தன. தமிழகம், மகாராஷ்டிரா ஹரியானா மற்றும் பஞ்சாப் முதலிய 19 மாநிலங்களை சேர்ந்த 169 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர்.இதில் தமிழக மகளிர் அணி இரண்டு தங்கம், ஐந்து வெள்ளி, நான்காம் இடத்திற்கான பரிசு ஒன்று என ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடம்பிடித்து அசத்தியுள்ளனர்.
இப்பெண்கள் அணியில் இடம்பெற்றுள்ள காயத்ரி, ரோகினி ஆகிய இருவரும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் யோகா புலம் இளம் கலை யோகா தெரப்பி துறையை சேர்ந்த மாணவிகள் ஆவர். ஆர்டிஸ்டிக் குழு போட்டிகளில் காயத்ரி, ரோகினி ஆகியோர் இரண்டாமிடமும், ஆர்டிஸ்டிக் ஜோடிகளுக்கான போட்டிகளில் நான்காம் இடமும் பெற்றனர்.
தமிழக அணியின் பயிற்சியாளர்களாக யோகா முனைவர் பட்ட ஆய்வாளர்களான எழிலரசி மற்றும் கீதா செயல்பட ஆராய்ச்சி மாணவி விஜயகுமாரி புதுச்சேரி அணியின் மேலாளராக பணியாற்றினார்.

வெற்றியுடன் திரும்பிய மாணவிகளை மீனாட்சி உயர் கல்வி நிறுவனத்தின் வேந்தர் ராதாகிருஷ்ணன், நிறுவன தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைவேந்தர் நீலகண்டன், பதிவாளர் பேராசிரியர் முனைவர் கிருத்திகா மற்றும் யோகா புலம் தலைவர் பேராசிரியர் இளங்கோவன் ஆகியோர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.