வாதநாராயணன்.... இதற்கு ஆதிநாராயணன், வாதமடக்கி, வாதரக்காட்சி, வாதரசு, தழுதாழை என பல பெயர்கள் உண்டு. வாத நோய்களை விரட்டுவதில் வாதநாராயணன் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் இலையை நல்லெண்ணெயில் வதக்கி... உளுந்து, பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையலாக அரைத்து வாரம் ஒருநாள் உணவோடு சேர்த்து சாப்பிட... பேதியாகும். இதனால் வாத நோய்கள் விலகும். மேலும் வேலைப்பளு, அலைச்சல் காரணமாக ஏற்படும் கை - கால் வலி, உடல் வலி சரியாகும். இதே பிரச்னைகளுக்கு வாதநாராயணன் இலைகளை நீர் விட்டு கொதிக்கவைத்து பொறுக்கும் சூட்டில் வலி உள்ள இடங்களில் ஊற்றினாலே நிவாரணம் கிடைக்கும். வாதப்பிடிப்பு, வாய்வுப்பிடிப்பு உள்ள இடங்களில் இதே நீரை ஊற்றி வந்தாலும் பிரச்னைகள் சரியாகும். வீக்கம், கட்டி ஏற்பட்டால் வாதநாராயணன் இலையுடன் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பொறுக்கும் சூட்டில் பூசி வந்தால் பிரச்னைகள் விலகும்.

வாதக்கோளாறு உள்ளவர்கள், கை - கால் பிடிப்பு, சுளுக்கு உள்ளவர்கள் மற்றும் பொதுவாக எல்லோருமே வாதநாராயணன் இலையை சமைத்து வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் நன்றாக மலம் கழிவதோடு வாதநீர், துர்நீர் எல்லாம் வெளியேறும். மூட்டுவலி மற்றும் வாதக் கோளாறு உள்ளவர்கள் வாதநாராயணன் இலையுடன் முருங்கைக்கீரை, லெச்சக்கொட்டை கீரை எனப்படும் நச்சுக்கெட்ட கீரை சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எம்.மரிய பெல்சின்