
காந்தியம்
இந்தியாவில் காந்தி கிட்டத்தட்ட வரலாற்றுப் புத்தகப்பக்கங்களில் மடித்துவைக்கப் பட்டிருக்கும் நிலையில், அமெரிக் காவைச் சேர்ந்த பெண் ஒருவர் காந்தியின் கொள்கைகளை அமெரிக்க மக்களிடத்தில் பரப்புவதில் பெரும்பங்காற்றி வருகிறார்.

என்பது ஆச்சர்ய செய்தி. அமெரிக் காவில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் மனதில் காந்தியின் கொள்கைகளைப் புரியவைக்கவும், பதியவைக்கவும் அங்கு நிறுவப்பட்டிருக்கும் ‘காந்தி மெமோரியல் சென்ட'ரின் தலைவரான அந்தப் பெண், கேரி ட்ரைபுலெக்!பேச்சிலும் நிறத்திலும் அமெரிக்கவாசம் இருந்தாலும், ‘பகவத்கீதை’ என்ற சொல்லை அடிக்கடி ஆங்கில சாயலுடன் கேரி உதிர்க்கும்போது, இந்திய மண்ணின் வசீகரத்தை உணர முடிகிறது. ஒரு சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தவரை, சென்னையில் சந்தித்தோம்.
“அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் படித்தபோது, சர்வதேச அமைதி யைப் பற்றிய என் மேற்படிப்புக்கு நான் தேர்ந்தெடுத்தது, பகவத்கீதையை. ஒவ்வொரு வரியிலும் பற்பல தத்துவங்கள் புதைந்திருக்கும் இந்த பொக்கிஷத்தைப் பற்றி ஆழமாகப் படிக்கத் தொடங்கியபோது, பகவத்கீதையைப் பற்றிய காந்தியின் கண்ணோட்டங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. காந்தி தன் வாழ்க்கை முறையிலும் இந்திய விடுதலை வேட்கையிலும் பகவத்கீதையின் சாராம்சத்தையே அடிப்படையாக வைத்து பல பாதைகள் வகுத்திருந்தார். கீதையில் ஆரம்பித்த என் பயணம், காந்தியில் நிலைகொண்டது. காந்தியத்தைப் பரப்பும் எண்ணம் வலுத்தது’’ எனத் தொடங்கிய கேரியின் பேச்சில், காந்தியும் பகவத்கீதையும் உபநிடதங்களின் மேற்கோள்களும் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை தலைகாட்டுகின்றன.

காந்தி மெமோரியல் சென்டரின் செயல்பாடுகள் பற்றிப் பேசும்போது, தெளிவும் தீர்க்கமும் அவர் வார்த்தைகளில். ‘‘வருடம் முழுவதும் அமெரிக்காவின் மூலை முடுக்குகளில் இருந்து பலதரப்பட்ட வயதினரும், காந்தியைப் பற்றியும் இந்திய கலாசாரத்தைப் பற்றியும் அறிந்துகொள்ள ஆவலாக வருவதைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?! அவர்களுக்குக் கலந்துரை யாடல்கள், காந்தியின் வாழ்க்கை முறைகளைப் பற்றிய படம் திரையிடல், சொற்பொழிவுகள், இந்திய கலாசார நிகழ்ச்சிகள் போன்றவை எங்கள் சென்டரில் நடத்தப்படும். இந்தியாவின் பல சிறந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள் இதில் கலந்துகொள்வார்கள்.
அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இந்தியத் தூதரகத்துடன் இணைந்து பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அமெரிக்காவில் இவ்வாறு காந்தியின் வழி நடப்பவர்கள் லட்சக்கணக்கில் இருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம். ஆண்டின் இறுதியில் உலக அமைதிக்காக செயல்புரிந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களில் ஒருவருக்கு அமைதிக்கான விருதினையும் நாங்கள் வழங்கிவருகிறோம்.’’

சரியான வழிகாட்டி இல்லாத இன்றைய இளையசமுதாயத்தினர், காந்தியக் கொள்கைகளைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு பற்றி நாம் கேட்க, ‘‘காந்தியைப் புரிந்துகொள்வதற்கு வயது வரம்பு தேவை இல்லை. அதற்குப் படிப்பறிவும் பழக்கமுமே தேவைப்படும். உபநிஷத்துகள் கூறியபடி யாராலும் தங்கள் வாழ்நாளில் தடம் மாறாமல் இருக்க முடியாது. காந்தியின் கூற்றுப்படி உண்மையை நோக்கிய வாழ்க்கையின் பாதை மிகவும் கூரானது. அதிலிருந்து பலமுறை நமக்கு கால் இடறியிருந்தாலும் மீண்டும் அந்தப் பாதையில் பயணத்தைத் தொடங்க வேண்டியது நம் கடமை. நான் காந்தியைப்போல நடக்கச் சொல்லவில்லை, அவரைப்போல உடுத்தச் சொல்லவில்லை. அவர் விதைத்த அன்பின் விதையை அறுவடை செய்தால் மட்டும் போதும்’’ என்று பதிலளித்த கேரி, இந்தியப் பெண்கள் பற்றிப் பேசும்போது குரலில் வியப்பு கூட்டுகிறார்.
‘‘இந்தியப் பெண்கள் அழகானவர்கள். பொறுப்பானவர்கள். துணிந்தவர்கள். அக்கறை யுள்ளவர்கள். பொதுவாழ்க் கையோ தாம்பத்ய வாழ்க்கையோ... அவர்கள் அதனை முழுவதும் உள் வாங்கி நல்ல செய்கைகள் மூலம் தங்களை திருப்திப் படுத்திக்கொள்கிறார்கள். டாக்டர், ஐ.டி ஊழியர், இல்லத்தரசி என யாராக இருந்தாலும், இந்தியப் பெண்களிடத்தில் நான் பார்த்தது முற்றிலும் எக்ஸலன்ஸ்!’’ எனும்போது, விழிகள் விரிகின்றன கேரிக்கு!
ஸ்ரீ.தனஞ்ஜெயன் படம்:ம.நவீன்