சாந்தியின் புகழ் இப்படி உலக அளவில் ஜொலிக்கத் தொடங்கியபோதுதான் கொஞ்சமும் எதிர்பாராத அந்த பேரிடி சாந்தியை தாக்கியது. 2006-ம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார் சாந்தி. அடுத்த சில தினங்களில் வெளியானது அந்த அறிவிப்பு. Ôசாந்தியின் பெண் தன்மையில் குறைபாடு இருப்பதால், வெள்ளிப் பதக்கம் திரும்பப் பெறப்படுகிறது' என்று அறிவித்தது போட்டியை நடத்திய நிர்வாகக் குழு.
"நடந்தத நினைச்சு எதிர்காலத்தை வீணாக்கக் கூடாதுனு தெளிவான ஒரு முடிவுக்கு வந்தேன்.. புதிய சாதனையாளர்களை உருவாக்கி, ஒலிம்பிக்ல தங்கப்பதக்கம் வாங்க வைக்கணும்னு தீர்மானிச்சேன். அதைத்தான் இப்ப செய்துகிட்டிருக்கேன். கண்டிப்பா வாங்க வைப்பேன்" என உயரிய நோக்கத்தோடு, உணர்வுப்பூர்வமாக பேசிய சாந்தி,
"கடந்த ஒரு வருஷமாத்தான் இந்தப் பயிற்சிகளை கொடுத்துக்கிட்டு இருக்கேன். இப்பவே என்னோட மாணவர்கள் பெரிய அளவுல சாதிக்கத் தொடங்கிட்டாங்க.. ரொம்பவே திறமையா இருக்காங்க" என்று சொல்லிவிட்டு, அருகில் நின்ற பெண்ணை கை நீட்டி,
"இவ பேரு ராணி. போபால்ல நடந்த தேசிய அளவிலான 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்துல வெள்ளிப் பதக்கம் வாங்கியிருக்கா. மாநில அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில மிகப்பெரிய சாதனை செஞ்சிருக்கா. 40 நிமிடம் 16 நொடிகள்ல 10 ஆயிரம் மீட்டர் தூரத்தை கடந்து புதிய சாதனை படைச்சு, வெள்ளிப்பதக்கம் வாங்கியிருக்கா" என மகிழ்ச்சியோடு அறிமுகம் செய்தார்.
"எங்களோட வெற்றிக்கு சாந்தி மாஸ்டர்தான் முக்கியமான காரணம். கொஞ்ச நேரம்கூட ஓய்வெடுத்துக்கவே மாட்டாங்க... நாங்க களைப்படையற வரைக்கும் விடமாட்டாங்க. எங்களுக்கு முன்னாடியே தினமும் காலையில அஞ்சு மணிக்கெல்லாம் வெண்ணாற்று மணல்ல காத்திருப்பாங்க" என்று குரு பெருமை பேசினார் ராணி.
மாநில அளவிலான மாராத்தான் ஓட்டத்தில் 6-ம் இடம் வென்ற மீனா, தட்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்ற ராஜசேகர், நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்ற சரண், சென்னை மாராத்தானில் தங்கம் வென்ற சங்கர் ராஜபாண்டியன் என சாதனையாளர் பட்டியல் நீள்கிறது. பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை அறுபதைத் தாண்டிவிட்டது.
"இவங்க எல்லாருமே திறமைசாலிகள். கண்டிப்பா ஒலிம்பிக்ல தங்கப்பதக்கம் வாங்குவாங்க. ஆனா, அதுக்கான பயிற்சிகளுக்கு, அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாம ரொம்பவே சிரமப்படுறாங்க. சத்தான உணவுகள் சாப்பிட்டாதான் உடல் திடமா இருக்கும். ஒலிம்பிக்ல ஈடு கொடுக்க முடியும். ரொம்ப தூரத்துல உள்ள கிராமங்கள்ல இருந்துதான் இவங்க எல்லாம் பயிற்சிக்காக வர்றாங்க. ஹாஸ்டல் வசதி செஞ்சு கொடுத்துட்டா இவங்களுக்கு வசதியா இருக்கும்" என அக்கறையோடு பேசும் சாந்தி, தனக்காக எதுவுமே கேட்கவில்லை. அத்தகைய சாந்திக்கு, அரசு தரும் மாத ஊதியம் வெறும் 5 ஆயிரம் ரூபாய்!
விடைபெற்றபோது கோராஸாக அந்த வீராங்கனைகள் சொன்னது...
"சமீபத்துல நடந்த உலக தடகள போட்டியில தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த செமன்யா என்ற பெண் தங்கப்பதக்கம் வாங்கினாங்க. அவங்களுக்கு பெண்மைத் தன்மை குறைபாடுனு சொல்லி, பதக்கத்தை திரும்பப் பெறப்போறதா அறிவிப்பு வெளியானது. உடனே தென் ஆப்பிரிக்கா பிரதமர் தலையிட்டதால, அந்த அறிவிப்பு ரத்தாயிடுச்சு.
செமன்யாவுக்கு கிடைச்ச மாதிரியே, எங்க சாந்தி மாஸ்டருக்கும் நியாயம் கிடைக்கணும். நம்ம நாட்டு பிரதமர் தலையிட்டு, ஆசிய தடகள சம்மேளனத்தின் வஞ்சகமான அந்த பழைய அறிவிப்பை ரத்து செய்ய வைக்க வேண்டும்."
கு.ராமகிருஷ்ணன்
படங்கள் மு.நியாஸ் அகமது
|