கற்பனை வளத்தை நான் வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், உள் மன அழுத்தத்தால், நிறைவேறாத ஆசைகளின் வடிகாலாக வெடித்துக் கிளம்பும் கற்பனை உலகத்தை பற்றித்தான் அலர்ட் செய்கிறேன். தனிமை, அந்தக் கற்பனை ஜீவிகளுக்கு ஒரு போதை வஸ்து. உளவியல் நிபுணர்களின் கருத்துப்படி இவர்கள் ரியாலிட்டியில் இருந்து தங்களை விடுவித்து, கற்பனை உலகத்திலேயே வாழ்ந்து, ஆட்டிஸத்துக்கு ஆளானவர்கள்... கஸ்தூரியைப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) போல!
பிரபலமான கல்லூரி.... அனைத்து வசதிகளும் நிரப்பிய விடுதி! கிராமத்திலிருந்து சென்ற கஸ்தூரிக்கு மட்டும் அங்கு எதுவும் பிடிக்கவில்லை. அங்கிருந்த யாரும் அவளுடன் தட்டாங்கல் ஆட வரவில்லை. வண்ணத்துப் பூச்சியை பிடித்து விளையாடவில்லை. தயிர் சாதமும் எலுமிச்சை ஊறுகாயும் சாப்பிடவில்லை. 'ஹ§ஸ் திஸ்?', 'ஹாய் டியர்' போன்ற வாக்கியங்களுக்குள் வாழ்ந்தவர்களிடம் தவறியும் தமிழ் வரவில்லை. கைகோத்துக் கொள்ளும் நட்பு அவளுக்கு அங்கே கிடைக்கவில்லை.
ஏங்கி ஏங்கி நெஞ்சுருகியவள், இறுதியாக தன் கிராமத்து பள்ளித் தோழிகளை துணைக்கு அழைத்தாள். அவர்களுடன் பேசினாள். விளையாடினாள். பகிர்ந்துகொண்டாள், சிரித்தாள்... அத்தனையும் கற்பனையில்! 'எப்பப் பார்த்தாலும் தனியா உட்கார்ந்து பேசி, சிரிச்சுட்டு இருக்கா. சம்திங் அப்நார்மல்' என்று விடுதி நிர்வாகம் அவளை பெற்றோரிடம் ஒப்படைக்க, அவர்கள் என்னிடம் அழைத்து வந்தார்கள். பேசிப் பார்த்ததில், 'ஸ்கீஸோஃபெர்னியா' (Schizophrenia) எனப்படும் கொடிய மன நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தது தெரிந்தது.
இது ஒரு வகை என்றால், இன்னும் சிலருக்கு காதுக்குள் ஏதோ சத்தம் கேட்பதுபோல தோன்றும். யாரோ தன்னிடம் பேசிக்கொண்டு இருப்பதாக உணர்வார்கள். அந்த கற்பனைச் சத்தத்திலேயே கவனத்தைச் செலுத்தி, உலகத்தை மறப்பார்கள். இதை ஆங்கிலத்தில் 'ஹலுசினேஷன்' (Hallucination) என்று சொல்வார்கள். உளவியல் நிபுணர்களால் மட்டுமே சிகிச்சை அளித்து தீர்க்கக்கூடிய மனோவியாதிகள் இவை.
எனவே கேர்ள்ஸ்... கற்பனை என்பது நமக்கு தேவையான ஒன்றுதான். ஆனால், அதுவே வாழ்க்கையானால்... இதுதான் விளைவு. சாப்பாட்டுக்குத்தான் உப்பே தவிர, உப்புக்கு சாப்பாடு இல்லை!
|