இந்தச் சம்பவம் எங்களை மிகவும் பாதிக்கவே... சபிக்கப்பட்ட அந்த மக்களுக்காக களமிறங்கி போராடத் தயாரானோம். ஆனால், உயர் ஜாதியினரின் முன் நிமிர்ந்தே பழக்கப்படாத அவர்களது முதுகுகளை நேர்படுத்துவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அதற்காக நாங்களும் தளரவில்லை. கோயில் சொத்துக்களை அபகரித்த ஜமீன்களின் முகத்திரைகளைக் கிழித்தோம். அந்த ஆக்கிரமிப்பு சொத்துக்களில் நாட்கணக்கில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தோம். அடி, உதை பட்டோம். சிறை சென்றோம். எங்கள் போராட்டத்தின் தீவிரம், பப்ளிக் கோர்ட்டையே அந்த குக்கிராமத்துக்கு வரவழைத்தது. சட்டரீதியாக அத்தனை போலித்தனங்களையும் உடைத்தெறிந்து, நிலங்களை மீட்டெடுத்து நிலமில்லாத ஏழைகளுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்தோம்...'' என்று சொல்லும் கிருஷ்ணம்மாளுக்கு, அதற்குப் பிறகுதான் அந்த முள்பாதை பயணத்தின் முக்கியமான அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது.
"நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்கு நிலம் பெற்றுத் தருவதற்காக 'லாஃப்டி' என்கிற உழவனின் நில உரிமை இயக்கத்தை தொடங்கினோம். பேங்கில் லோன் பெற்று நிலத்தை வாங்கி சம்பந்தப்பட்டவர்களின் பெயரில் பட்டா செய்தோம். அதை நாங்கள் வைத்துக் கொண்டு, நிலத்தை மட்டும் ஒப்படைத்தோம். நிலத்தில் சாகுபடி செய்து, நிலத்துக்குரிய தொகையை எங்களிடம் கட்டிவிட்டு, பட்டாவை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த வகையில் பல்லாயிரம் குடும்பங்கள் தற்போது நிலம் பெற்றுவிட்டன. இனி அவர்களுக்கு வீடு அமைத்துத் தரவேண்டும் என்பது என் ஆசை. அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். எனது விருது தொகைகளை அதற்கே அர்ப்பணித்துவிட்டேன்"
- ஆணித்தரமாக பேசுகிற கிருஷ்ணம்மாளின் அந்த முயற்சிதான் இன்று 13,000 நிலமற்ற ஏழை குடும்பங்களை தலா ஒரு ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர் ஆக்கியுள்ளது. தாய் அல்லது தந்தையை இழந்த 242 பிள்ளைகள் இன்று இவருடைய ஆதரவில் வளர்கிறார்கள். இவரால் வளர்க்கப்பட்டு படிக்க வைக்கப்பட்ட பல மாணவர்கள் இன்று மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் ஆளாகி நிற்கிறார்கள். குடிசை வீடுகளில் வாழ்ந்த 2,000 பேர் ஓட்டு வீடுகளில் நிம்மதியுடன் வசிக்கின்றனர்.
சமூக வாழ்க்கை மட்டுமல்ல... கிருஷ்ணம்மாள் - ஜெகந்நாதன் தம்பதியின் இல்லற வாழ்க்கையும் நம்மை நிமிர்ந்து பார்க்கவே வைக்கிறது.
"அவர் முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர். நானோ தலித். இருந்தும் எங்களுக்குள் காதல் பூத்தது. ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகுதான் திருமணம் என்று முடிவெடுத்து ஒருவழியாக 1950-ல் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் முடித்த இரண்டாவது நாளே வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்துக்காக அவர் வடநாடு புறப்பட்டுச் சென்றுவிட்டார். நான் சென்னையில் தங்கி ஆசிரியர் பயிற்சி பெற்றேன். ஆனால், அந்தச் சான்றிதழ்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, போராட்டங்களை நான் முன்னெடுத்தபோது, என்னை பெருமையுடன் பார்த்தவர் அவர். 'மனைவியின் அறிவாற்றலை அடுப்படியில் கருக்க மாட்டேன்' என்று கூறி, திருமணமாகி ஆறு ஆண்டுகள் வரை நான் இயக்கச் செயல்பாடுகளுக்காக அலைந்துகொண்டிருந்த சமயங்களில் எல்லாம், வெறும் காய்கறி உணவை மட்டுமே உண்டு வந்தார்..." எனும் கிருஷ்ணம்மாள், பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்ற முதல் தலித் பெண்மணி.
ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சரளமாக பேசும் ஆற்றல் பெற்றவர். இவரைப் பற்றிய புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இத்தாலிய மொழிகளில் வெளிவந்துள்ளன.
96 வயதாகும் ஜெகந்நாதன், அமைச்சர் பதவி தொடங்கி தன்னைத் தேடி வந்த அத்தனை விருதுகளையும் புறந்தள்ளிவிட்டு, தரமான வாழ்க்கை வாழ்ந்த நிம்மதியுடன் இருக்கிறார்.
|