உனக்கு மறுவாழ்வு தந்து, எதையும் மறைக்காமல் பகிர்ந்து கொள்ளும் உன் நண்பரின் குணம், அவருடைய நேர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
தன்னைக் காதலிக்கும் பெண்ணிடம்கூட, 'நான் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன்' என்று உண்மையைச் சொன்னதிலிருந்து, உன்மீது அவர் வைத்துள்ள பாசமும், நேசமும் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இப்படிப்பட்டவரை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காதே.
வளரும் குழந்தைகளின் எதிர்காலம் மனதில் வைத்து, சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உன்னவரைக் காதலிக்கும் பெண்ணிடம் நேரில் சென்று மனம் விட்டுப் பேசி, அவளின் மனதை மாற்ற முயற்சி செய். நிச்சயம் உன் நிலை புரிந்து மனம் மாறுவாள்.
மறுமலர்ச்சி அடைந்த வாழ்வை, மீண்டும் கருகவிடாதே!
- ஏ.பி.எம்.பானுமதி, திருச்சி-8
'சந்தேகக்கோடு, அது சந்தோஷக் கோடு' என்று தெரியாதா உனக்கு..? உன் நிலைமையைத் தெரிந்து கொண்டு உன்னை விரும்பித்தானே, ஏற்றுக் கொண்டுள்ளார். அந்தத் தியாக உள்ளத்துக்கு விலை மதிப்பே இல்லை. பத்து ஆண்டுகளாக உன்னையும், குழந்தைகளையும் அருமையாக பார்த்துக் கொண்டிருக்கிறார். முதலில் அவர்மீது முழு நம்பிக்கை வை.
ஒருவேளை அவர் கூறுவது போல், அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்வதாக அவரை மிரட்டுகிறாளோ என்னவோ? எத்தனை சீரியல்களில் பார்த்திருப்பாய். தன்மேல் அன்பு இல்லாவிட்டாலும், தான் விரும்புவரை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்ற வெறியில், பின்விளைவுகளை யோசிக்காமல் எந்தக் கீழ்த்தரமான செயலிலும் இறங்கத் தயாராக இருப்பார்கள். இந்தப் பெண்ணும் அப்படிப்பட்ட குணம் கொண்டவளாக இருக்கலாம். உனக்கு இப்போது தேவை பொறுமை மட்டும்தான். தீர விசாரித்து, அவர் சொல்வதில் உண்மையிருந்தால், அந்தப் பெண்ணிடமே பேசி, நிலைமையை சரி செய். தியாகம் செய்வதாக நினைத்து, அவரை விட்டு விலகிப் போய், உன் வாழ்க்கைக்கு நீயே குழி பறித்துக் கொள்ளாதே.
எதிர்மறையாக யோசிக்காமல், நடக்கக்கூடிய சாத்தியங்களை யோசித்து, பொறுமையாக முடிவு செய்.
-டி.எம்.பானுமதி, சென்னை-88
|