"ஏண்டா டேய்... அவனவன் வீடு இல்லாம பிளாட்பாரத்துல படுத்துத் தூங்கிக்கிட்டிருக்கான். வீடு இருக்கறவன் கூட, கோர்ட்டு, கேஸ§னு அலைஞ்சுட்டு இருக்கான்... அதை மீட்கறதுக்காக. நீ ஒரு அருமையான வீடு வெச்சிருக்கற. அதுல நிம்மதியா வாழத் தெரியாம... என்ன மாதிரி ஃபிராடு வாஸ்துகிட்ட மாட்டிக்கிட்டு காசை கரியாக்கறயேடா முட்டாப் பயலே!'’
- இது 'பாளையத்தம்மன்' படத்தில் வாஸ்து ஜோசியராக வரும் விவேக் பேசும் டயலாக்.
இது, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சி மட்டுமல்ல... இன்றைய தேதியில் வாஸ்து ஜோதிடம் என்ற பெயரில் நடக்கும் கூத்துகளை ஊருக்கெல்லாம் உணர்த்தும் காட்சியும் கூட!
வீடு கட்டுகிறார்கள் என்று தெரிந்தாலே, வாஸ்து பற்றி வண்டி வண்டியாக அட்வைஸோடும், பணத்தைக் கறக்கும் தந்திரங்களோடும் எங்கிருந்தோ ஆட்கள் வந்துவிடுகிறார்கள். இவையெல்லாம் எந்தளவுக்கு உண்மை? அதைப் பற்றி பேசுகிறார் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் கோயில்களை வடிவமைத்திருக்கும் ஸ்தபதி கீர்த்திவர்மன்.
"வாஸ்து என்பது, 'வஸ்து' என்ற சொல்லில் இருந்து வந்தது. வஸ்து என்றால் பொருள் என்று அர்த்தம். அது பூமியையும் குறிக்கும். பூமி மீது அமைக்கப்படும் கட்டடங்களுக்கு சில வரையறைகளை, அனுபவ அறிவால் அந்தக் காலத்தில் கண்டறிந்தார்கள்.
உதாரணத்துக்கு... ராஜாக்கள் காலத்தில் புதிதாக ஒரு நகரத்தை நிர்மாணிக்கும்போது, மக்கள் குடியிருக் கத் தேவையான இடம், அவர்களின் வேளாண்மை மற்றும் தொழில்களுக்கான நிலம் போன்றவற்றை அரசாங்க ஆட்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள். அதற்காக பல்வேறு யுக்திகளை அவர்கள் கையாண்டார்கள். ஒரு இடத்தில் குறைந்தது ஒரு வாரத்துக்கு ஆடு, மாடுகளைக் கூட்டமாக மேய விடுவார்கள். காலை முதல் மாலை வரை மேய்ந்து, அங்கேயே ஏதாவது ஒரு மூலையில் உறங்க அவை பொழுதைக் கழிக்கும். அப்படி அவை உறங்கும் இடத்தைத்தான்... வீடு உள்ளிட்ட கட்டடங்களை கட்ட சரியான இடம் என்று தேர்ந்தெடுத்தார்கள். காரணம்..? பொதுவாக மனிதர்களைவிட ஐந்தறிவு ஜீவன்களுக்கு நிலத்தின் நீக்கு போக்குகள் நன்கு தெரியும் என்பதுதான். அவைதான் முழுமையாக இயற்கையோடு உறவாடிக் கொண்டிருக்கின்றன. எனவே, அவை தூங்குகின்ற இடப்பகுதி நில அதிர்ச்சி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாத பகுதியாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்து, அங்கே வீடுகளை அமைத்தார்கள்.
|