சமீபத்திய சாமியார் சர்ச்சை, ஸ்பெஷல் காட்சிகள், செய்தித் தொகுப்புகள், சமாதி நிலையில் இருந்ததாகச் சொல்லப்பட்ட சமாதானங்கள், பேரங்கள் என்று நீண்டு கொண்டே போகும் இந்தப் பிரச்னை சில நாட்களில் ஏதாவது ஒரு புள்ளியில் முற்றுப்புள்ளி வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதன் பிறகும் ஒன்று மிச்சமிருக்கும். அது, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்!
அரசியல் சச்சரவோ, ஆன்மிகப் பரபரப்போ... அடிபடுவதும், அலசப்படுவதும், அவமானப்படுவதும் இங்கு எப்போதுமே பெண்தான். சம்பந்தப்பட்ட பெண் செய்தது சரியா, தவறா - அது வேறு விஷயம். ஆனால், குறிவைக்கப்படுவது யாருக்காக இருந்தாலும், அதிகம் பொசுங்கிப் போவது பெண் என்பது சுடும் நிஜம்.
நான் முன்பு குடியிருந்த அடுக்குமாடி வீட்டில், கோபாலன் என்பவர் இருந்தார். கொரியர் கொடுக்கும் பையனுக்கும் அவருக்கும் எப்போதும் சண்டை வந்துகொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில், அவன் வேலை செய்த கம்பெனிக்கு தொலைபேசி மூலம் ஒரு புகார் அளித்து விட்டார் கோபாலன். அடுத்த நாளிலிருந்து அவனைக் காணவில்லை.
ஆனால், மூன்று நாள் கழித்து, அவர் வீட்டுக்குப் போகும் மாடிச் சுவரில் பளிச்சென்று நீல நிறப் பெரும் எழுத்துகளில் அவர் மனைவியின் பெயரெழுதி, வக்கிரமான ஆபாச வார்த்தை ஒன்று எழுதப்பட்டிருந்தது. பதறி ஓடி, சுவரில் வெள்ளையடித்து கோபாலன் அதை மறைப்பதற்குள் குடியிருப்புவாசிகள் அனைவரும் அதைப் படித்து விட்டனர். வழக்கம்போலவே, 'தட்டி மாநாடுÕ போட்டு காரண காரியங்களை விவாதித்தனர். எழுத்துக்கூட்டிப் படித்த சிறு குழந்தைகள், ''அப்படினா என்ன?" என்று அம்மாக்களிடம் கேட்டு, ''படிக்கிற வேலையைப் பார்" என்று பதில் பெற்றார்கள்.
சண்டை யாருக்கும் யாருக்கும்? இதில் சம்பந்தமில்லாத கோபலனின் மனைவி எப்படி டார்கெட் ஆனார்? இங்கு மட்டுமா? எப்போதுமே ஒரு ஆணைத் திட்டுவதற்கு, காட்சியிலேயே இல்லாத அவனின் தாயோ, சகோதரியோ, மனைவியோ சம்பந்தப்படுத்தப்படுவது எவ்விதம்? அது சரி... ஆணை அவமானப்படுத்த உருவாக்கப்பட்ட திட்டு வார்த்தைகளில், அவன் வீட்டுப் பெண்களை இழிவு செய்யும் வார்த்தைகள் இல்லாத மொழிகள் ஏதாவது உலகில் உண்டா என்ன?
ஓர் அலுவலகத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் புரமோஷன் வந்தது. அது பொறுக்காத சக ஊழியர்களின் ஆணைப் பற்றிய பேச்சு... ''அவனுக்கென்ன காக்கா பிடிச்சே வாங்கிட்டான்!". பெண்ணைப் பற்றிய பேச்சு... 'காக்காய் பிடித்தாள்’ என்று நீங்கள் யூகித்தால் உங்களுக்கு சைபர் மார்க். எதிர்பார்க்கக் கூடிய கமென்ட்... ''இதெல்லாம் எப்படி புரமோஷன் வாங்கிச்சுனு தெரியாதா என்ன..?"
மார்க்கெட்டுகள்தோறும் கொட்டிக் கிடக்கும் காய்கறிகளோடு பெண் உடலைச் சம்பந்தப்படுத்தும் 'கருத்து’ நிறைந்த சினிமாப் பாடல்கள், அலுவலக பாத்ரூம்களில் எழுதப்படும் கதைகள், கார்ட்டூன்கள், பிடிக்காத பெண்ணின் மொபைல் நம்பரை தவறாக வெப்சைட்டில் விளம்பரப்படுத்தும் கயமைகள்... என்று காலந்தோறும் இந்த அவமானங்களுக்கு எத்தனை வடிவங்கள்? இன்று நேற்று நடப்பதா என்ன?
டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி - இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். அவர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது, இவர் மட்டுமே பெண் என்பதால் 'உடன் படிக்கும் ஆண் மாணவர்களின் கவனம் கலையும்; மனம் கெட்டு விடும். அதனால் முத்துலக்ஷ்மியை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று மாணவர்களின் பெற்றோர் மனு கொடுத்திருக்கிறார்கள். அப்போது டீனாக இருந்த ஒரு ஐரோப்பியர், ''கவனம் கலைகிற மாணவர்கள் வீட்டில் இருக்கட்டும். இந்த ஒரு மாணவி படித்தால் போதும்" என்று சொல்லியிருக்கிறார்.
|