சமீபகாலமாகவே ரகசிய கேமராக்கள், மொபைல்போன் கேமராக்கள் ஆகியவற்றின் வளர்ச்சியால் ஏற்படும் நெகட்டிவ் விளைவுகள், அதிர்ச்சி தரும் செய்திகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. வி.ஐ.பி-க்கள் முதல் மிடில் கிளாஸ் மக்கள் வரை என வேறுபாடு இன்றி விரிக்கப்படும் இந்த மாய வலை, இன்று 'பிரைவஸி' என்ற வார்த்தைக்கே கொள்ளி வைத்துக் கொண்டிருக்கிறது.
இதோ... கேரளாவில் நடந்துள்ள இந்தச் சம்பவம் நம் பதற்றத்தைக் இன்னும் கூட்டுகிறது. கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் சிலர், தங்களின் புராஜெக்ட்டுக்காக வெளியூர் செல்ல நேரிட்டபோது, படிப்பு சம்பந்தமான வேலைகளை முடித்துவிட்டு ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள். பாத்ரூம் சென்ற ஒரு மாணவி, அங்கு மொபைல் போன் கேமரா ஒன்று, 'வீடியோ ரெக்கார்டிங் மோட்' ஆன் செய்யப்பட்டு, மறைவாக பொருத்தப்பட்டிருந்ததை தற்செயலாக பார்த்திருக்கிறார். பதறிப்போய் ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட, அந்த ஹோட்டலின் ஊழியர் ஒருவன்தான் கீழ்த்தரமான இந்தக் காரியத்தை செய்துள்ளான் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஹோட்டல் ரூம்கள், துணிக்கடை 'டிரயல் ரூம்'கள், பொது இடங்களில் உள்ள பாத்ரூம்கள் என்று இந்த 'ஹிடன் கேமராக்கள்' எங்கும் இருக்கலாம் என்பதுதான் இப்போதைய கசக்கும் உண்மை. அப்படி அந்த கேமராக்களால் விழுங்கப்படும் நம் அந்தரங்கம், பின் எம்.எம்.எஸ்., இணையதளம் என்று பொதுப்பந்தி வைக்கப்படலாம் என்பது உயிர் உறைய வைக்கும் நிதர்சனம்.
இந்த அந்தரங்க திருட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கும் நமக்கு, அதற்குத் தேவையான விழிப்பு உணர்வு தகவல்களைத் தருகிறார் பிரபல தடயஅறிவியல் நிபுணரான பெங்களூருவைச் சேர்ந்த சந்திரசேகரன். ராஜீவ் காந்தி கொலை வழக்கு, ஆட்டோ சங்கர் என்று ஆரம்பித்து மிக முக்கியமான குற்றச் சம்பவங்களில் தடய அறிவியல் மூலமாக உண்மைகள் வெளிப்படக் காரணமாக இருந்தவர். தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், தனியாக இந்தப் பணிகளைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்.
"விஞ்ஞானம் வளர வளர, சில வக்கிர புத்திக்காரர்களால் அந்தத் தொழில்நுட்பங்கள் இப்படி தவறான செயல்களில் புகுத்தப்படுவது, வேதனைக்குரிய, தண்டனைக்குரிய விஷயம். ஆயினும், இது தொடர்பாக நாம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வதே இதற்கான தீர்வு" என்று ஆரம்பித்த சந்திரசேகரன், அந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை அடுக்கினார்.
"இதுபோன்ற ரகசிய கேமராக்களைப் பயன்படுத்தி தவறுகள் நடக்க அதிக சாத்தியமான இடங்கள், ஹோட்டல்கள்தான். அதிலும் ஹனிமூன் தம்பதிகளைக் குறிவைத்து, அவர்களின் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தும் வக்கிரங்கள் அதிகம் பெருகிவிட்டன. எனவே, ஹோட்டல் அறையின் மின்விசிறி, அலங்கார விளக்கு, வாட்ரோப், படுக்கை என்று அனைத்து இடங்களையும் டபுள் செக் செய்துகொள்வது அவசியம். ஹோட்டல் பாத்ரூம்களும் இப்போது புதைகுழியாகிப் போய்க்கிடக்கிறது. எனவே, பாத்ரூம்களில் கேமரா ஏதேனும் இருக்கிறதா என்பதை அலர்ட்டுடன் ஆராய வேண்டும். ஷவர் பைப்பில் பொருத்தக்கூடிய 'மைக்ரோ கேமரா'க்கள் வரை இப்போது புழக்கத்தில் இருப்பதால், வீட்டில் குளிப்பதுபோல 'சுதந்திர'மாக குளிக்காமல், பாதுகாப்புடன் குளிக்க வேண்டியது அவசியம். பாத்ரூம் லைட்டை ஆஃப் செய்துவிடுவது இன்னும் உத்தமம்" என்ற சந்திரசேகரன், அடுத்து சொன்ன விஷயம் ரொம்பவே அதிர வைப்பதாக இருந்தது.
"துணிக்கடைகளின் 'டிரயல் ரூம்'கள், அடுத்த ஆபத்து. பெரும்பாலும் உடை சரிபார்க்கும் அந்த அறைகள், அதிகமான வெளிச்சத்துடன் கூடிய சிறிய அறைகளாக இருக்கும். அதில் நாலாபுறமும் ஆளுயர கண்ணாடி பொருத்தப் பட்டிருக்கும். இங்கு ரகசிய கேமரா வில்லனோடு, இன்னொரு வில்லனும் இருக்கலாம். அது... 'டூ வே மிரர்'. சில கெமிக்கல்களை சேர்த்து உருவாக்கப்படுவதால் பார்ப்பதற்கு முகம் பார்க்கும் கண்ணாடி போல்தான் இருக்கும். ஆனால், அதன் முன் அதிகப்படியான வெளிச்சத்தில் நிற்கும்போது, நம் முழு உருவமும், கண்ணாடிக்கு பின்புறம் இருப்பவருக்கு அப்பட்டமாகத் தெரியும். எனவே, உடை சரிபார்க்கும் அறைகளிலும் 'லைட் ஆஃப்' டெக்னிக்கே, ஆபத்தில் இருந்து தப்பிக்க வழி" என்றார் சந்திரசேகரன்.
|