என் டைரி 234-ன் சுருக்கம்...
"பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டேன். ஆறு மாதம் வரை ஆசையாக, அனுசரணையாக இருந்து, போன் வழியாகவும் விசாரித்துக் கொண்டிருந்தவர், இன்று ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனியாகிவிட்டார். கேட்டால், 'வேலைக்கு போற மனுஷனுக்கு ஆயிரம் டென்ஷன்' என்கிறார். 'மருமகள் சீரோடு வருவாள்' என்ற என் மாமியாரின் ஆசை நிராசையாக போனதன் விளைவு அவருக்கு என்னைப் பிடிக்காமலேயே போனது. என் நிலை தெரிந்து, 'ஆயுள் முழுக்க கஷ்டப்பட வேண்டாம். என்னிடம் வந்துவிடு' என்கிறார் என் தாயார். திருமண வாழ்வைத் துறந்து செல்லவும் துணிவில்லை. எதிர்கால வாழ்வின் மீதான பயமும் குறையவில்லை. வழிகாட்டுங்கள் தோழிகளே!"
என் டைரி 234-க்கான வாசகிகளின் ரியாக்ஷன்...
'ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள்' என்று சும்மாவா சொன்னார்கள். காதலிக்கும் வரைதான் பாச நேசமெல்லாம். கட்டிக் கொண்டபின் கழற்றிவிடும் சூழ்நிலைதான் இன்று நிலவி வருகிறது. ஆனால், பெற்றோரை ஒதுக்கிவிட்டு, தனிக்குடித்தனம் செல்லாமல் இருப்பதிலிருந்தே, உன் கணவர், தன் பெற்றோருடன் வைத்திருக்கும் அதீத பாசம் புரிகிறது. தன் தாயை மீறி உங்களை திருமணம் செய்ததால், உங்களிடம் சற்று விலகி இருப்பதுபோல் நடந்து கொள்ளலாம்.
பொறுமையாக இருந்து, அன்பான உபசரிப்பால் கணவரை மட்டுமல்ல, மாமியாரையும் மனம் இளகச் செய்யுங்கள். நாளடைவில் எல்லாம் சுபமாகும். வாழ்த்துக்கள்!
- கனகம் பொன்னுசாமி, கோயம்புத்தூர்
இல்லறம் என்பது, மலையுச்சிக்கு பெருங்கல்லை உருட்டிச் செல்வது போன்றது. கல்லை கீழே கொண்டு வரவேண்டுமென்றால், லேசாக உருட்டிவிட்டால் போதும். 'பிரிந்துவிடலாமா?' என்று நீ கேட்பது, அந்தக் கல்லை உருட்டிவிடுவதற்குச் சமம்.
நீ காதல் திருமணம் செய்து கொண்ட வருத்தம்; தன்னிடம் இருந்து உன்னை பிரித்துச் சென்றதன் காரணமாக உன் கணவரின் மீதான கோபம்... இதெல்லாம்தான், 'என்னிடம் வந்துவிடு' என்று ஒரு உணர்ச்சி வேகத்தில் உங்கள் அம்மாவைச் சொல்ல வைக்கிறது. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டாம்.
மாமியார், உங்கள் மீது சுமத்தும் அவதூறு வார்த்தைகளை அலட்சியமாக ஒதுக்கிவிடுங்கள். அதற்கு நீங்கள் முக்கியத்துவம் தந்தால், ஓட்டத்தில் அது முந்திவிடும். கணவரை மனம் திறந்து பேசவைப்பதில்தான் உங்கள் சாமர்த்தியமே இருக்கிறது. "உங்களுக்காகத்தானே எல்லாவற்றையும் துறந்து வந்தேன். என்னிடம் ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்?" என்று முகத்தைப் பார்த்து பேசுங்கள். அவர் தரும் பதிலிலிருந்து... உங்கள் இல்லற வாழ்வின் சிக்கலான முடிச்சு அவிழும்.
- ஜி.கே.எஸ்.பரிமளா மூர்த்தி, கோபிசெட்டிபாளையம்
'காதல்' என்ற சர்க்கரைக்குள் விழுந்து, வெளியேற மனமில்லாமல் சுற்றித் திரியும் எறும்பை போன்ற நிலைதான் உன்னுடையது. உன் கணவரின் மீது உனக்கு நம்பிக்கை இருந்தால், பொறுமை என்னும் நகை அணிந்து, உன் கணவரின் பார்வையை உன் பக்கம் திரும்பச் செய்.
பொறுத்தார் பூமி ஆள்வார். நிச்சயம் உன் கணவருக்கு உன் தவிப்பு புரியும். அன்பும், பொறுமையும்தான் இல்லற வாழ்வின் பூலோக சொர்க்கம்.
- சுபா, சேலம்-9
என் டைரி-235 |
வாசகிகள் பக்கம் |
'சோகம்
மட்டுமே என் சொந்தம்!'
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த முப்பத்தைந்து வயது பெண் நான். எம்.ஃபில் முடித்து, ஒரு கம்பெனியில் பத்தாயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கிறேன். மிகவும் வசதி படைத்த இடத்தில் என்னைத் திருமணம் செய்து கொடுத்த என் தந்தை, ஓரளவுக்கு சீர்செய்ததோடு, சிறிய ஃப்ளாட் ஒன்றையும் என் பெயருக்கு வாங்கித் தந்தார்.
இனிமையாக வாழ்க்கை சுழன்றாலும், பத்து ஆண்டு தவத்துக்குப் பிறகுதான் பிறந்தான் ஒரேயொரு மகன். ஆனால், பிறவியிலேயே சற்று ஊனம். மிகுந்த சிரமப்பட்டு, இரண்டாம் வகுப்பு படிக்கிறான்.
|