''இல்ல... அவ டீ ரொம்ப நல்லா போடறானு... பத்து முறை சொல்லிட்டாரு. நாம உசுரை உருக்கி எது செய்தாலும் ஒரு சொல்லு வராது... 'ஒரு டீக்கு இவ்வளவு பாராட்டா?'னு கடுப்பாயிடுச்சு.''
அன்றிரவு என் குளிர்ந்த அறையின் மௌனத்தில், செல்வியைப் பற்றி மனநல மருத்துவரான இன்னொரு தோழியிடம் போனில் பேசிக் கொண்டிருந்தேன். ''இன்னொரு பெண்ணின் உயர்வை சட்டென்று ஏற்க முடியாமைதான் பெண்களின் ஆழ்மனக்கூறு. அதுவே அவர்களின் தீராத போராட்டத்தனத்துக்கான அஸ்திவாரம்கூட. பெண்ணின் அக உணர்வுகளில் ஒருநாளும் ஆண் அவளுக்குப் போட்டியே அல்ல. இன்னொரு பெண்தான்'' என்று சொன்னாள்.
''பெண்கள்... எம்.எஸ். சுப்புலட்சுமியை ரசிக்கலையா... இந்திரா காந்தியைப் பார்த்து வியக்கலையா?'' - இது நான்.
''செலிப்ரிட்டியா... உயரத்துல இருக்கறவங்கள ரசிப்பாங்க... வியப்பாங்க. அன்றாட வாழ்க்கையில எதிர்படறவங்கனா... ஏற்கறது கொஞ்சம் கஷ்டம்'' - அவள்.
உண்மையா?
'எங்க பிராஞ்ச்சுக்கு புது மேனேஜரா வந்திருக்கறாளே லதா சௌத்ரி... ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் கஸ்டமர் மீட்டிங்னு வெளியே போயிடறா. பெரிய பாஸோட ரொம்ப நெருக்கமாம்...''
''விமலாதான் இந்த வருஷ கிளப் செக்ரட்டரியா? என்ன பிரயோஜனம்... வீட்டைக் கவனிக்கறதே இல்லையாமே..!''
நிறைவை ஏற்க முடியாத குறைகள்... குறைகள்... குறைகள்!
வீட்டுக்கு வரும் மருமகளுடனான மாமியாரின் உறவு எந்தப் புள்ளியில் விலக ஆரம்பித்தது? தன் மகனுக்கு அவளை ரொம்பப் பிடிக்கிறது என்று உணரத் தொடங்கிய அன்றுதானே? இதை உணர மறுக்கும் பிடிவாதம்தான் பெண்மையா?
- ஒரு பெண்ணின் ஒழுக்கம் பற்றிய விமர்சனங்கள் மிகப் பல நேரங்களில் பிற பெண்களாலேயே தொடங்கி வைக்கப்படுகின்றன.
- நெருங்கிய உறவாகவே இருந்தாலும் மற்றொரு பெண்ணுக்கு தன்னைவிட எதுவும் அதிகம் கிடைத்து விடுவதில் மனநெருடல், கோபம் கொள்ளாத பெண்கள் ரொம்பக் குறைவு.
- பெண்ணுக்கு பெண்ணே எதிரி.
பெண்கள் மீது வீசப்படும் குற்றச் சாட்டுகள் இவையெல்லாம்.
பள்ளி நாட்களில் மனித பிரமிட் என்று ஒரு உடற்பயிற்சி உண்டு. பத்துப் பெண்கள்... ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு வட்டமாக குனிந்த தலையுடன் நிற்க வேண்டும். அவர்களின் தோள்கள் மீது ஐந்து பெண்கள் நிற்பார்கள். ஐந்து பேரின் மீது மூன்று பேர்.
அவர்கள் மேல் இருவர். கடைசியாக இருவரின் தோள்களில் காலை வைத்து ஒரு பெண் தேசியக் கொடியை வீசியபடியே நிற்பாள். கைதட்டும் கூட்டம் பார்ப்பது உச்சியில் நிற்கும் அந்த ஒரு பெண்ணைத்தான். ஆனால், எங்களுக்குப் பயிற்சி தரும் சாரா டீச்சர் சொல்லுவார்...
''உச்சியிலே இருக்கிறவ அங்க நிக்கணும்னா கீழே இருக்கிற பத்துப் பேர்ல ஒருத்தி கூட மறந்தும் தலையைத் தூக்கக் கூடாது. இவ தலையைத் தூக்கினா, அவ பேலன்ஸ் போயிடும்.''
இன்று பெண்கள் அடைந்திருக்கும் எல்லா முன்னேற்றமும் இந்த பிரமிட் மாதிரிதான். நமக்காக உழைத்த அம்மா, அழுத அக்கா, குரல் நடுங்க ஆசீர்வாதம் செய்த பாட்டி, உதவி செய்த பக்கத்து வீட்டு அத்தை, பெருந்தன்மையான ஒரு மாமியார், படிக்கச் சொன்ன டீச்சர், ஃபீஸ் கட்ட உதவிய சிநேகிதி... யார் யார் தோள் மேலோ நின்று ஒவ்வொரு பெண்ணும் ஏறி வருகிறாள். அவளையும் கடந்து ஏறிப்போகும் இன்னொரு பெண்ணுக்கு இவள் தோள் தருவது, மனிதாபிமானம் மட்டுமல்ல அவளது தார்மீகக் கடமை கூடத்தான்.
சக பெண்ணின் உயர்வில் ஒரு பாராட்டு, ஒரு மலர்ந்த சிரிப்பு, அவளது திறமையை விமர்சிக்கும் வம்புகளில் பங்கேற்காத நயத்தகு நாகரிகம்... இது கூடவா கஷ்டம் நமக்கு?!
|