
டெக்னிக்கல் அனாலிசிஸ்... ‘‘செலவல்ல... முதலீடு!’’ பெருமைப்பட்ட வாசகர்கள்

நாணயம் விகடன் நடத்தும் டெக்னிக்கல் அனாலிசிஸ் இரண்டு நாள் பயிற்சி வகுப்பு, கடந்த வாரம் சென்னையில் நடந்தது. இந்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பில், சென்னை மட்டுமின்றி தேனி, கடலூர், சேலம், நாமக்கல்... என்று தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் வந்து கலந்துகொண்டனர். எக்ட்ரா பயிற்சி மையத்தின் முதன்மைச் செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் இந்தப் பயிற்சி வகுப்பினைச் சிறப்பாக நடத்தினார்.
‘‘டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது இருட்டில் டார்ச் லைட் போல வழிகாட்டும். நாம் செய்யும் பங்கு வர்த்தகத்தில் பத்துக்கு மூன்றுதான் லாபம் கொடுக்கும். ஆனால், டெக்னிக்கலை சரியாகத் தெரிந்துகொண்டு, அதன்படி டிரேட் செய்ய ஆரம்பித்தால், பத்தில் ஏழு வர்த்தகம் லாபம் தர வாய்ப்புண்டு’’ என ஆரம்பத்திலேயே பயிற்சி யாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தினார் அருள்ராஜன்.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட சேலத்தைச் சேர்ந்த மகதீஸ்வரன். ‘‘இந்தப் பயிற்சி வகுப்பின் மூலம் எதைச் செய்ய வேண்டும் என்பதைவிட எதைச் செய்யக் கூடாது என்பதைக் கற்றுக் கொண்டேன்’’ என்றார். இந்தப் பயிற்சி வகுப்பில் பாரி என்பவர், தனது மகன் டாக்டர் அருள் உடன் பங்கேற்றது ஆச்சர்யம்.
‘‘காலையில் 9.15 முதல் 10.30 வரை மட்டுமே டிரேடிங் செய்யலாமா’’, ஒரு பங்கு 10% ஏறினால் 10% குறையும் என்பது உண்மையா’’ என்பது போன்ற கேள்விகளுக்கு அருள்ராஜன் சொன்ன பதிலைப் பலரும் ரசித்தனர். ‘‘இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள செலுத்திய கட்டணம், செலவல்ல, முதலீடு...’’ என எல்லோரும் சொன்னது இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்!
- பொன்.செந்தில்குமார்
படங்கள்: ப.பிரியங்கா