
கேள்வி பதில்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக வழங்கப்பட்ட தீர்ப்பின் ஆவணங்கள் பழுதடைந்துவிட்டன. அதன் நகலை தற்போது பெற முடியுமா?

குருநாத் பிரபு, சென்னை
வி.எஸ்.சுரேஷ், வழக்குரைஞர்
``பொதுவாக, ஒரு வழக்கின் ஆவணங்கள் தீர்ப்பு வழங்கப்பட்டு, 3 - 5 வருடங்கள் வரை பராமரிக்கப்படும்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து, கீழ் நிதிமன்றங்களுக்கு வழக்குத் தொடர்பான ஆவணங்கள் வந்ததிலிருந்து 3 முதல் 5 வருடங்கள் வரை நீதிமன்ற பராமரிப்பில் இருக்கும்.
ஐந்து வருடங்களுக்கு மேல் வழக்கின் ஆவணங்கள் நகல் தேவைப்பட்டால், உரிய நீதிமன்றத்தில் ஆவணத்தின் நகலைத் தாக்கல் செய்து, ஆவணங்களைப் பெற முடியும். பொதுவாக, வழக்கு முடிந்து அதிக காலமாகி இருந்தால் தீர்ப்பின் நகல் மட்டுமே கிடைக்கும்.”
சமீபத்தில் என் பைக் தொலைந்துவிட்டது. பைக்குக்கான இ.எம்.ஐ முடிய இன்னும் 17 மாதங்கள் உள்ளன. தொலைந்துபோன பைக் கிடைக்கவில்லை எனில், கடனுக்கான இ.எம்.ஐ-யை இன்ஷூரன்ஸ் நிறுவனம் கட்டுமா?

எம்.கிரிதரன், அரியலூர்
திருமலை, வழக்குரைஞர் மற்றும் இன்ஷூரன்ஸ் நிபுணர்
``நீங்கள் இருவேறான தனித்தனி ஒப்பந்தங்களை செய்துகொண்டிருக்கிறீர்கள். அவற்றில் இன்ஷூரன்ஸ் ஒப்பந்தம் மூலம், திருடுபோன வண்டிக்கான இழப்பீட்டை நீங்கள் கோரலாம். இந்த இன்ஷூரன்ஸ் ஒப்பந்தம் மூலம் உங்கள் வண்டிக்கான ‘Hire Purchase’ தவணைப் பணத்தைக் கோர முடியாது. உங்களுக்கான இழப்பீட்டை, நீங்கள் வண்டிக்கான பாலிசி எடுத்த நிறுவனத்தில் தாமதம் இல்லாமல் உடனடியாகக் கோர வேண்டும்.
வண்டி தொலைந்ததற்கான காவல் நிலையத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR), வண்டியின் அனைத்துச் சாவிகள் மற்றும் சில மாதங்கள் கழிந்து காவல் துறையின் `வண்டி கிடைக்கப் பெறவில்லை என்பதற்கான சான்றிதழ்’ ஆகியவற்றை இன்ஷூரன்ஸ் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அவர்கள் உங்கள் கோரிக்கையைப் பரிசீலித்து உங்களது வண்டிக்கான இழப்பீட்டை வழங்குவார்கள்.”
நான் மாதாமாதம் ரூ.15,000 வீட்டு வாடகையாகச் செலுத்துகிறேன். என் வீட்டு உரிமையாளர் அதற்கு ரசீது தருவதில்லை. அவருடைய பான் நம்பரைக் கேட்டால், அதையும் தர மறுக்கிறார். என் அலுவலகத்தில் `இந்த மாத இறுதிக்குள் வீட்டு உரிமையாளர் பான் எண் தரவில்லை எனில், வீட்டு வாடகைக்கு வரிவிலக்குப் பெற முடியாது’ என்கிறார்கள்.
நான் 30% வரி வரம்பில் இருக்கிறேன். என் வீட்டு உரிமையாளரின் பான் எண் இல்லாவிட்டால், ரூ.45,000 நான் அதிக வரி கட்டவேண்டும். இதற்கு என்ன தீர்வு?
ராஜன், திருச்சி

சதீஷ்குமார், ஆடிட்டர்
``ஏற்கெனவே உங்கள் வீட்டு உரிமையாளரிடம் வாடகை ஒப்பந்தம் ஏதாவது நீங்கள் செய்திருந்தால் அதைத் தாராளமாக வழங்கலாம்.
இல்லையெனில், நீங்கள் குடியிருக்கும் வீட்டைவிட்டு வெளியேறி, புதிதாக வேறொரு வீட்டில் குடி புகுந்து, குடிபுகும் வீட்டில் எல்லா வற்றையும் வலியுறுத்திக் கேட்டு வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. இந்தச் சிறிய விஷயத்துக்காகக் காவல் நிலையம் அல்லது நீதிமன்றத்துக்குச் செல்வது நல்லதல்ல.
இனிவரும் காலங்களில் வீட்டு உரிமையாளர் பான் எண் தர மறுத்தால், யாருமே அவருடைய வீட்டில் குடியேற யோசிப்பார்கள். அதன்பிறகு, அத்தகையவர்கள் தானாகவே முன்வந்து பான் எண்ணைத் தரவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.”
என் வயது 66. ஓய்வு பெற்றவன். எனது தற்போதைய ஆண்டு வருமானம் பென்ஷன் உள்பட ரூ.2.50 லட்சம். நான் ஆறு ஆண்டுகளுக்குமுன் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்தேன்.
இப்போது அந்தத் தொகை முதிர்வடைந்து ரூ.6 லட்சமாகத் திரும்பக் கிடைக்கவுள்ளது. இதற்கு நான் வருமான வரிச் செலுத்த வேண்டுமா? வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?

தசரதன், சேலம்
ஈ.எஸ்.முருகானந்தம், ஆடிட்டர்
``நீங்கள் வருமான வரிக் கணக்கு அவசியம் தாக்கல் செய்ய வேண்டும்.
பென்ஷன் மற்றும் வட்டித் தொகையைச் சேர்த்து வரக்கூடிய மொத்த வருமானத்தில், அடிப்படை வருமான வரி விலக்கு ரூ.3 லட்சம் போக (மூத்தக் குடிமகன் என்பதால்) மீதி உள்ள தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும். நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி குறைவாக இருப்பதால், டி.டி.எஸ் வரியைக் கழித்துக் கொண்டு மீதமுள்ள தொகையை ஃரீபண்ட் பெற இயலும்.”
தொகுப்பு : சோ.கார்த்திகேயன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.