மனைவிக்கு சிசேரியன்... மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் க்ளெய்ம் செய்ய முடியுமா?

கேள்வி பதில்

நான் ஓர் அரசு ஊழியர். என் மனைவிக்குத் தற்போது சிசேரியன் அறுவை சிகிச்சை நடந்தது. குழந்தை நன்றாக இருக்கிறது. ஆனால், மனைவியின் உடல்நிலை சரியில்லை. அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்ய முடியாது என்கிறார்கள். இதற்கு இன்ஷுரன்ஸ் கிளெய்ம் கிடைக்குமா?
முத்துக்குமார், மதுரை

ஆர்.குருராஜன், உதவிப் பொது மேலாளர், இன்டகிரேட்டட் இன்ஷூரன்ஸ்
“சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே மகப்பேறு தொடர்பான சிகிச்சைகளுக்கு பாலிசி அளிக்கின்றன. அதுவும் பாலிசி எடுத்த மூன்று வருடங்களுக்குப் பிறகே மகப்பேறுக்கான காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும்.
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மகப்பேறு மற்றும் உடல் உபாதைகளுக்கு பொதுவாக வழங்கப்படுவதில்லை. தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் வழங்கப் பட்டுள்ள மருத்துவக் காப்பீட்டுக்கான பாலிசியில் மகப்பேறுக்கான சலுகை உள்ளதா என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.”
காற்றாலை அமைப்பதற்கு எந்த நிதி நிறுவனத்தை அணுக வேண்டும்? எவ்வளவு கடன் கிடைக்கும், வட்டி விகிதம் மற்றும் மானியம் எவ்வளவு இருக்கும்?

பி.ராமசாமி, சிவகாசி
பிரபாகரபாபு, முன்னாள் துணை மண்டல மேலாளர், பாங்க் ஆஃப் இந்தியா
“காற்றாலை போன்ற மரபு சாரா தூய மின்சக்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அரசால் ஊக்கப்படுத்தப்படுகின்றன. காற்றாலை மின் உற்பத்தியில் வெற்றிகரமாக ஈடுபட்டு லாபம் ஈட்டிவரும் நிறுவனம் மற்றும் தொடர்ந்து மூன்றாண்டுகள் லாபம் ஈட்டுவதோடு, முந்தைய வருடங்களின் நஷ்டங்களைக் கணக்கில் வைத்திராத கூட்டாண்மை நிறுவனத்துக்குக் காற்றாலை அமைக்கத் தேவையான கடனை வங்கிகள் வழங்கிவருகின்றன. நெடுங்காலக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, தேசிய மற்றும் தனியார் வங்கிகளும் காற்றாலை அமைக்கும் திட்டங்களுக்குக் கடன் வழங்க முன்வருகின்றன.
நெடுங்காலத் திட்டத்தின் தனித்தன்மை மற்றும் பிற பிரத்யேக நடைமுறைகளைக் கருதி, காற்றாலை மட்டுமே அமைத்து இயங்க விரும்பும் நிறுவனங்களுக்குப் பொதுவாக வங்கிகள் கடன் வழங்குவதில்லை. கடன் வழங்குவதற்கான நடைமுறைகள் மற்றும் கடன் தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும்.
பொதுவாக, மார்ஜின் 15 சதவிகிதத்திலிருந்து 25% வரையிலும் இருக்கக்கூடும். கடன் வாங்கும் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகளின் அடிப்படையிலும், கிரெடிட் ரேட்டிங் அடிப்படையிலும் வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.
பொதுவாக, வட்டி விகிதம் ஆண்டுக்கு 13% என்ற அளவில் உள்ளது. குறிப்பிட்ட அந்தக் காற்றாலை நிறுவனம் சார்ந்த குழுமத்தின் நிதி வலிமையைக் கருத்தில்கொண்டு மார்ஜின் மற்றும் வட்டி விகிதங்களில் சலுகைகள் வழங்கப் படலாம்.
மானியம், ஊக்கத்தொகை, சலுகைகள் தொடர்பாக புதிய மற்றும் மரபுசாரா சக்தி அமைச்சக விதிமுறைகளை அவ்வப்போது நேரடியாக அறிந்துகொண்டு பின்பற்றுவது நல்லது.”
வங்கியில் பர்சனல் லோன் வாங்குவதற்காக நானும், என் அலுவலக நண்பரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஜாமீன் கையெழுத்து போட்டுக் கொண்டோம். ஆனால், அலுவலக நண்பர் இப்போது வேறு அலுவலகத்துக்கு வேலை மாறி போய்விட்டார். அவர் தொடர்ந்து பணம் கட்டவில்லை என்றால் என்ன செய்வது?

டி.ஜான்சன், பூந்தமல்லி
என்.ரமேஷ், வழக்கறிஞர்
‘‘வங்கியில் பர்சனல் லோன் வாங்குவதற்காக உங்கள் அலுவலக நண்பர் உங்களுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டுள்ளார். இப்போது வேறு அலுவலகத்துக்கு அவர் வேலைக்குப் போய்விட்டாலும், தாங்கள் கடன் செலுத்தி முடிக்கும் வரை ஜாமீன்தாரர் என்ற முறையில் உங்கள் கடனுக்குத் தங்கள் நண்பர் பொறுப்பு.
அதேபோல், அவர் கடன் செலுத்தி முடிக்கும் வரை ஜாமீன்தாரர் என்ற முறையில் நீங்கள் அவரின் கடனுக்குப் பொறுப்பு. அவர் தொடர்ந்து பணம் கட்டுவதை நீங்கள்தான் கண்காணிக்க வேண்டும். அவர் தொடர்ந்து பணம் கட்ட மாட்டார் எனச் சந்தேகம் எழுந்தால், அவரை வங்கிக்கு அழைத்துச் சென்று, வங்கியின் அனுமதியோடு வேறு ஜாமீன்தாரரை நியமித்துக் கொள்ளுமாறு சொல்லலாம். அலுவலகம் மாறியதால், ஜாமீன்தாரர் பொறுப்பு மாறாது. கடன் பெற்றவருக்கு என்ன பொறுப்பு உள்ளதோ, அதே பொறுப்பும் கடமையும் ஜாமீன்தாரருக்கு உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.’’
தொகுப்பு: சோ.கார்த்திகேயன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.