
வேலூரில் முதலீட்டாளர்கள் உற்சாகம்
நாணயம் விகடன், ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துடன் இணைந்து ‘செல்வம் சேர்க்கும் முதலீடு’ என்கிற தலைப்பில், வேலூரில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை அண்மையில் நடத்தியது. தீபாவளி பர்ச்சேஸ் வேலையைக்கூட ஒதுக்கிவிட்டு, முதலீடு குறித்துக் கற்றுக்கொள்ள இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள் வாசகர்கள்.

இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு பிராந்திய தலைமை அதிகாரி சுவாமிநாதன் கருணாநிதி, ‘‘இன்றைக்கு நாம் குடும்பம் நடத்த ரூ.30 ஆயிரம் தேவை எனில், 30 ஆண்டுகள் கழித்து ரூ.1,72,304 தேவை. இன்றே திட்டமிட்டு முதலீடு செய்தால்தான் எதிர்காலத்தில் நாம் இந்தத் தொகையைப் பெற முடியும்’’ என்றார்.

அடுத்து பேசிய ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி மற்றும் விநியோகஸ்தர் பிரிவின் உதவி துணைத் தலைவர் எஸ்.குருராஜ், ‘‘நாம் முதலீடு செய்யும்போது லாபத்தை மட்டும் பார்க்காமல், நாம் முதலீடு செய்யும் பணத்துக்கு எவ்வளவு பாதுகாப்பு, நாம் செய்யும் முதலீட்டை எளிதில் பணமாக்குவது, வரிச் சலுகை போன்ற அம்சங் களையும் பார்க்க வேண்டும்’’ என்றார்.

இறுதியில் பேசிய பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன், ‘‘எல்லா இடங்களுக்கும் நாம் குடும்பத்துடன் செல்கிறோம். ஆனால், முதலீடு தொடர்பான விஷயங்களுக்கு வீட்டிலுள்ள பெண்களையோ அல்லது குழந்தைகளையோ நாம் அழைத்து வருவதில்லை. அடுத்தமுறை, இதுபோன்று நடக்கும் கூட்டத்துக்குக் குடும்பத்து டன் வாருங்கள்’’ என்று அழைத்தார். ‘‘இப்போது தான் உண்மையான முதலீடு பற்றித் தெரிந்து கொள்கிறோம்’’ என்றார்கள் நாணயம் விகடன் வாசகர்கள்.
-ஆகாஷ்,
படங்கள்: ச.வெங்கடேசன்