
ரவிக்குமார் நிதி ஆலோசகர்

இன்றைக்குத் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிற பலரும் ஒரு நிரந்தர ஓய்வூதியத் திட்டம் இல்லாமல் இருக்கிறார்கள். அரசு வேலை தற்போது சேருகிறவர்களுக்கும் வருங்காலத்தில் நிரந்தரமான ஓய்வூதியத் திட்டம் இல்லை.

தற்போது ஓய்வு பெறுகிறவர்களில் பலர் தங்களுக்குக் கிடைக்கும் செட்டில்மென்ட் தொகை முழுவதையும் வங்கி எஃப்.டி.களில் முதலீடு செய்துவிடுகின்றனர். அப்படிச் செய்யாமல், கிடைக்கும் தொகையின் ஒருபகுதியை ஒவ்வொரு மாதமும் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ளும் வகையிலான எஸ்.டபிள்யூ.பி (SWP - Systematic Withdraw Plan) முறையில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அது எப்படி சாத்தியம் என ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.
ஒருவர் 30.12.2005 அன்று ரூ.25 லட்சத்தை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பேலன்ஸ்டு ஃபண்டில் முதலீடு செய்து, மாத அடிப்படையில் (ஒவ்வொரு மாதம் 10-ம் தேதி) ரூ.25 ஆயிரத்தை அந்த ஃபண்டிலிருந்து 10.2.2006 முதல் திரும்ப எடுக்கிறார். தற்போது (11.09.2017) வரை, அதாவது 140 மாதம் பணத்தைத் திரும்ப எடுக்கிறார் எனில், மொத்தம் (140 x 25,000) ரூ.35 லட்சத்தை அவர் திரும்பப் பெற்றிருப்பார். இதுபோக, தற்போது (11.9.2017) ரூ.24.64 லட்சம் மீதமிருக்கும். (பார்க்க கீழே உள்ள அட்டவணை)

ஈக்விட்டி சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்ட் என்கிற போது, ஓராண்டுக்குப்பிறகு வருமானத்துக்கு வரி கட்ட வேண்டியதில்லை. நீண்ட கால அடிப்படையில் எஸ்.டபிள்யூ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் ஓய்வுக் கால வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்!