
டாக்டர் வி. விஐய் ஆனந்த் ஸ்ரீராம்
வேலைக்கான நேர்முகத்தேர்வு நடக்குமிடம். அஸ்வந்த் மற்றும் சரண் இருவரும் தங்கள் வாகனத்தில் வந்து இறங்கினார்கள்.

சரண் : அஸ்வந்த், என்னடா இவ்வளவு பெரிய கட்டடமா இருக்கு?. இங்கேயா நமக்கு இன்டர்வியூ? இதுல வேலைப்பார்க்கணும்னா வேற லெவல்ல இருக்குணுமே!
அஸ்வந்த் : என்னடா லெவல் அது..?
சரண் : ஆபீஸ் இவ்வளவு பெருசா இருக்கே எனக்கு எப்படி வேலை கிடைக்கப்போகுது?
அஸ்வந்த் : டேய், பெரிய இடத்துல வேலைக்கு போகப்போறேன்னு பாசிட்டிவா யோசிடா. நீ இப்பத்தான சென்னை வந்திருக்க. இங்க எல்லாமே பெரிய கட்டடமாதான் இருக்கும். ஆனா, நிறைய கம்பெனிகள் சேர்ந்து, இதுல ஒவ்வொரு பகுதிய யூஸ் பண்ணியிருப்பாங்க.

சரண் : ஆனாலும், எனக்கென்னமோ தயக்கமா இருக்குடா. இதுல எனக்கு வேலை கிடைக்குமா?
அஸ்வந்த் : சும்மா எதையாவது பேசிக்கிட்டு இருக்காதே. வா போகலாம், ஏற்கெனவே லேட்டாகிடுச்சு.
சரண் : எனக்குப் பயமா இருக்குடா. இன்டர்வியூல என்னவெல்லாம் கேட்பாங்களோ?
அஸ்வந்த் : உன்னைப்பத்தி கேட்பாங்க. அப்புறம் நீ படிச்ச படிப்பு சம்பந்தமாவும், பார்க்கப்போற வேலை சம்பந்தமாவும் கேட்பாங்க அவ்வளவுதான். நம்மளோட தைரியம் மட்டும்தான் அவங்க மனசுல பதியக்கூடிய முதல் கருத்தா இருக்கணும். அதைத்தான் அவங்க எதிர்பார்ப்பாங்க.
சரண் : சரிடா, நீ ஏதோ சொல்ற. ஆனா, எனக்கு நம்பிக்கையே இல்லடா.
உள்ளே நுழைந்து லிஃப்டில் ஏறி இரண்டாம் தளம் வந்தார்கள். அங்கே 25 நபர்கள் வரை காத்திருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் சரணுக்கு மனசுக்குள் இன்னும் நடுக்கம்.
சரண் : டேய் அஸ்வந்த், நான் வரலை.
அஸ்வந்த் : டேய்... ஏன்டா?
சரண் : இல்லடா, இவ்வளவு பேர் இருக்காங்க, இதுல நானெங்க செலக்ட் ஆகப் போறேன்?
அஸ்வந்த் : என்னடா சரண், நீயாடா கூட்டத்தப் பார்த்து பயப்படுற. நம்ம பள்ளிக்கூட பேச்சுப்போட்டியிலெல்லாம் கலந்துகிட்டு சும்மா கலக்குவியேடா. என்னால நம்ப முடியலடா.
சரண் : என்னவோ தெரியலடா... ஏதோ சுமாரா இங்கிலீஷ் பேசுவேன். அந்தத் தைரியத்துலதான் வந்தேன். ஆனா, இங்க இருக்குறவங்கள பார்த்தா எல்லாரும் படு ஸ்டைலா இருக்காங்க. நுனி நாக்குல இங்கிலீஷ் பேசுறாங்க.
அஸ்வந்த் : அட இதுதான் உன்னோட பிரச்னையா? வெறும் வெளித்தோற்றத்தை மட்டும் வெச்சுக்கிட்டு அவங்கெல்லாம் ஏதோ அறிவாளியாகவும், உன்னை நீ முட்டாளாகவும் ஏன் நினைக்கிற?
சரண் : இல்லடா. இந்தச் சூழ்நிலையைப் பார்த்தாலே பயமும் தயக்கமும் வந்துருச்சு. இன்டர்வியூல என்ன கேள்வியெல்லாம் கேப்பாங்களோ?
அஸ்வந்த் : இங்க பாரு சரண், நல்லா தயார் பண்ணிட்டுத்தானே வந்த..?
உங்களுக்கு இந்த மாதிரியான அனுபவங்கள் இருந்திருக்கும் இல்லையா? யாராவது சொல்ல கேட்டிருப்பீர்கள் இல்லையா? இவர்களைப் போன்றோர் களுக்கான விஷயங்களைத்தான் இங்கு நாம் பேசப் போகிறோம்.
1. நமக்கு நம்மைப் பற்றிய ஒரு தெளிவும் நம்பிக்கையும் வேண்டும்.
2. நேர்முகத் தேர்வுக்குச் செல்வதற்குமுன், நம்மை நாம் தயார் செய்திருக்க வேண்டும்.
3. நாம் நம்முடைய நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தால், அங்கே வந்திருக்கின்றவர்கள் பற்றிய எந்தவொரு கவலையும் தேவையில்லை.
4. நேர்த்தியான உடை அணிவது முக்கியம். ஆனால், அதைவிட முக்கியம் நாம் சொல்கிற விஷயத்தைத் தெளிவாகச் சொல்வது.
5. நேர்முகத் தேர்வு செய்பவர் யாராக இருந்தாலும், நாம் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
6. பதில் நம் மூளையில் பதிந்திருக்கும்போது, என்ன கேள்விகள் கேட்டாலும் நம்மால் சரியான பதில் சொல்ல முடியும்.
7. நாம் பதிலைத் தவறாகச் சொன்னாலும், ஒரு புதிய கேள்வியைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பாக அதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
8. நேர்முகத்தேர்வில் நாம் என்ன பதில் சொல்கிறோம் என்பதைவிட, எப்படி நம்பிக்கையுடன் சொல்கிறோம் என்பதைத்தான் பார்ப்பார்கள்.
தண்ணீர் ஆறாக ஓடினால்தான் சுத்தமாகவும், சுவையாகவும் இருக்கும். ஓர் இடத்தில் தேங்கிவிட்டால் குட்டையாக மாறி நாற்றம் எடுத்துவிடும். அதுபோல்தான் நம்முடைய வாழ்கையில் நாம் எடுக்கிற முடிவுகளும். நாம் சரணைப் போன்று இனம்புரியாத பயத்தினால் ஓர் இடத்தில் தயங்கி நின்றுவிட்டால், நம் வாழ்கையில் முன்னேற்றம் என்பது இல்லாமல் போய்விடும்.
தயக்கத்துடன் செய்கிற எந்த வேலையும் தடையின்றி நடக்காது. அதனால் பயம், தயக்கம் இதில் எது உங்களிடம் இருந்தாலும், அதை இப்போதே தகர்த்தெறிந்துவிடுங்கள்.
இப்போது நம் சரண் கதைக்குச் செல்வோமா?
அஸ்வந்த் : சரண், வண்டி ஓட்டிக் கத்துக்கும்போது முதல்ல தயக்கமாதான் இருக்கும். ஆனா, ஒரு ரவுண்டு ஓட்டிட்டா அப்புறம் ஈஸியா ஆகிடும். அதுமாதிரிதான் தயக்கம். அதை உடைச்சுட்டு வாடா... உன்னால முடியும் எல்லாமே.
சரண் : இப்பதான் அஸ்வந்த், எனக்குக் கொஞ்சம் தெளிவு கிடைக்குது.
அஸ்வந் : நண்பா, முட்டையில இருக்குற கோழிக்குஞ்சு வெளியவந்தா என்ன நடக்குமோன்னு தயங்கினா என்னாகும்? யோசிச்சிப் பாருடா.
சரண் : நீ சொல்றது சரிதான்டா, எதுக்குடா நான் பயப்படுணும். நீ சொல்றமாதிரி நான் அவங்க கேக்கற கேள்விக்குப் பதில் தெரிஞ்சா சொல்லப்போறேன். தெரியலன்னா அப்படி ஒரு கேள்வி இருக்குன்னு இன்னைக்கு நான் கத்துக்கிட்டதா நெனச்சிக்கிட்டு, அதற்கான விடையை தேடப்போறேன் அவ்வளவுதான்.
அஸ்வந்த் : அப்படிச் சொல்லுடா நண்பா! வா இப்ப இன்டர்வியூக்குப் போகலாம்.
இருவரும் நேர்முகத் தேர்வு நடக்கும் அறைக்குள் சென்றனர், தயக்கத்தை உடைத்தெறிந்துவிட்டு!
(காலம் வெல்லும்)
படம்: ப.சரவணக்குமார்
சில கேள்விகள்!
தயக்கத்துடன் ஒதுங்கி நிற்பவர்களுக்குச் சில கேள்விகளை முன்வைக்கிறேன். தயக்கம் இருப்பவர்கள் இந்தக் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டு, அதற்கான தெளிவான பதிலைக் கண்டுபிடித்து தயக்கத்தை உடைக்க முயற்சிசெய்யுங்கள்.
* உங்களுக்கு எந்தவிதமான பயம் அல்லது தயக்கம் ஏற்படுகிறது?
* நீங்கள் எதற்காகத் தயங்குகிறீர்கள்?
* தயக்கத்துக்கான காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?
* காரணத்தைக் கண்டுபிடித்திருந்தால், அதற்கான தீர்வு என்ன என்பதைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ!
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக சலீல் பரேக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராகவும் செயல்படுவார் என இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 2018 ஜனவரி மாதத்தில் சலீல் பரேக் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என இன்ஃபோசிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சலீல் பரேக், மும்பை ஐ.ஐ.டி-யில் ஏரோநாட்டிகல் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். கணினி அறிவியலில் முதுநிலை பொறியியல் படிப்பையும், இயந்திர பொறியியல் படிப்பையும் முடித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம்மிக்கவர் இவர்.