
நாணயம் விகடன் கான்க்ளேவ்... இனி உங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும்?
நாணயம் விகடன் சார்பில் ‘பிசினஸ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ் மற்றும் எக்ஸ்போ’ நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சி 5.30 மணிக்கு முடிவடையும் என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால், நிகழ்ச்சி முடிவடையும்போது இரவு 8 மணி. சுந்தரம் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சுனில் சுப்ரமணியம் பேச ஆரம்பித்தது முதல் இரண்டே முக்கால் மணி நேரமும் பார்வையாளர் களிடையே மகிழ்ச்சிப் பரவசம் பெருக்கோடியது.
சுமார் ஏழு மணிக்கு, ‘‘இத்துடன் நான் பேச்சை முடித்துக்கொள்ளவா அல்லது உங்களால் இன்னும் சிறிது நேரம் இருந்து கேட்க முடியுமா?’’ என்று சுனில் சுப்ரமணியம் கேட்க, கான்க்ளேவுக்கு வந்திருந்த முதலீட்டாளர்கள், ‘‘நீங்கள் பேசுங்கள். நாங்கள் கேட்கத் தயார்’’ என்று ஆர்ப்பரித்தனர். பங்குச் சந்தை எதிர்கொள்ளவிருக்கும் பாசிட்டிவ் செய்திகளைப் புள்ளிவிவரங்களுடன் அடுக்கி, அனைவரையும் திக்குமுக்காட வைத்தார் சுனில் சுப்ரமணியம். அவர் பேசியதைப் படிப்பதற்குமுன், அவருக்கு முன்னால் பேசிய இருவரின் பேச்சின் சுருக்கம் இனி...

‘‘தொழில்நுட்ப இடையூறுகளுக்கு இடையே செல்வம் சேர்த்தல் (Creating Wealth During Disruption)” என்னும் தலைப்பில் வேல்யூ ரிசர்ச் நிறுவனர் திரேந்திர குமார் சிறப்புரையாற்றினார்.
“சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது குறித்து அஞ்சத் தேவையில்லை. உண்மையில் ஏற்ற இறக்கங்கள் இல்லாத எந்தவொரு விஷயத்திலும் வெற்றி தோல்வி என்பதை நம்மால் அனுபவிக்க முடியாது. சந்தையில் மாற்றங்கள் இருக்கவேண்டியது அவசியம். ஏற்ற இறக்கம் இல்லையென்றால் பங்குச் சந்தையில் நம்மால் சம்பாதிக்க முடியாது. சரியான பங்கைச் சரியான நேரத்தில் விலை இறங்கும்போது வாங்கி முதலீடு செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை, நம் இலக்குக்கேற்ப சரியான ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்” என்றார்.

‘‘தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஞானம் தேடுதல்’’ (Seeking Wisdom in the Age of Information) என்னும் தலைப்பில் சஃபல் நிவேஷக் நிறுவனத்தின் நிறுவனர் விஷால் கன்டெல்வெல் பேசினார். சந்தையில் முதலீடு செய்யும்போது நமக்குக் கிடைக்கும் தகவல்களை நாம் எப்படி அணுகுகிறோம், நம்முடைய அடிப்படை குணாதிசயங்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதைப் பற்றிப் பேசினார்.
“கடந்த ஆண்டில் சுறா மீன்களால் தாக்கப்பட்டு மரணமடைந்தவர்களைவிட அபாயகரமாக செல்ஃபி எடுத்ததால், இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். கொசுக்கடியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதைவிட அதிகம். அதேபோல, கடந்த ஆண்டில் பயங்கர வாதத்தால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட கட்டிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இப்படித்தான் பங்குச் சந்தை குறித்தும் மியூச்சுவல் ஃபண்ட் குறித்தும் நம்முடைய எண்ணங்கள் தவறாக இருக்கின்றன.

முதலீட்டு விஷயங்களில், நாம் சமூக வலைதளங்கள் உட்பட பல வழிகளிலிருந்தும் வரும் தவறான தகவல்களை முழுமையாக நம்பி மோசம் போகிறோம். பங்குச் சந்தை தொடர்பான செய்திகள், தகவல்களை காந்தியின் மூன்று குரங்கு பொம்மைகள் செய்திகளை அணுகும் விதத்தில்தான் அணுக வேண்டும். தவறான தகவல்களை நம்பித் தவறான முடிவு எடுக்கக் கூடாது; தவறான தகவல்களைப் பரப்பவும் கூடாது; நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்பவர்கள், தினம் தினம் சந்தை ஏறி இறங்குவதைப் பார்த்துக் கவலைப்படவும் கூடாது. இந்த மூன்று விஷயங்களையும் தவறாமல் கடைப்பிடித்தால், சந்தையைப் பாதிக்கும் எந்தவொரு தினசரி செய்தியையும் நாம் எடுத்துக்கொள்ளமாட்டோம். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இந்த ஞானம்தான் நமக்குத் தேவை” என்றார்.
அடுத்து பேச ஆரம்பித்தார் சுந்தரம் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சுனில் சுப்ரமணியம்.
“2018-ல் எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வது என்ற கேள்வி எல்லோரிடமும் இருக்கிறது. எந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது என்பது உங்கள் முடிவு. ஆனால், 2018-ல் முதலீடு செய்து, அதைக் குறைந்தபட்சம் 2021, 2022-ல் லாபத்துடன் திரும்ப எடுத்துக்கொள்கிற மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது கடந்த காலத்தில் அதன் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அடுத்து ஐந்து வருடங்களில் பங்குச் சந்தையை நகர்த்தும் முக்கிய ஐந்து காரணிகள் எவை என்று பார்த்தால், மத்திய அரசின் பொருளாதார சீர்த்திருத்தங்கள், அதிகரிக்கும் நுகர்வுக் கலாசாரம், குறைவான வட்டி, சேமிப்புத் திட்டங்களிலிருந்து முதலீட்டுக்கான திட்டங்களை நோக்கி மக்கள் வருவது, முதலீட்டுச் சுழற்சியில் முன்னேற்றம் போன்றவற்றைச் சொல்லலாம்.

இதுநாள் வரை பணவீக்கம் அதிகமாக இருந்ததால், பெரும் தொகை நிலையான முதலீட்டுக்கு அதிகளவில் சென்றது. தற்போது பணவீக்கம் குறைந்திருப்பதால், நிதி சார்ந்த முதலீட்டுக்கு அதிகளவில் பணம் வர ஆரம்பித்திருக்கிறது. வங்கியில் டெபாசிட்டுக்கு வட்டி விகிதம் குறைவு; ரியல் எஸ்டேட்டிலும் வளர்ச்சி இல்லை; தங்கத்தின் விலையும் அதிகரிக்க வாய்ப்பில்லாத நிலை; இந்தச் சமயத்தில் பங்குச் சந்தையில் அதிகளவில் முதலீடு செய்யவேண்டிய கட்டாயத்தைப் பலரும் உணரத் தொடங்கி யிருக்கின்றனர்.

இனி வருங்காலங்களில் பங்குச் சந்தைக்குப் பணம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, அடுத்த மூன்று ஆண்டுகளில் சந்தை 18% வளர்ச்சி அடைய வாய்ப்புண்டு. அதாவது, சென்செக்ஸ் 44000 புள்ளிகளை எட்ட வாய்ப்புண்டு. ஒருவேளை அவ்வளவு புள்ளிகள் உயரவில்லை என்றாலும், ஆண்டுக்கு 11-12% வருமானம் கிடைக்கலாம்.
முதலீட்டாளர்கள் ஃபைனான்ஷியல் செக்டாரில் கவனம் செலுத்தலாம். வங்கிகள் மட்டுமல்ல, மற்ற நிதிச் சேவை நிறுவனங்களிலும் முதலீடு செய்யலாம்’’ என்றார் அவர்.
- ஞா.சக்திவேல் முருகன், ஜெ.சரவணன்
படங்கள்: பா.காளிமுத்து