பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

அதிகரிக்கும் டிஜிட்டல் திருட்டு... பணத்தைப் பாதுகாப்பது எப்படி?

டிஜிட்டல் திருட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
டிஜிட்டல் திருட்டு

டிஜிட்டல் திருட்டு

கூகுள் பே, போன்பே, பேடிஎம் மாதிரி யான பேமென்ட் ஆப்ளிகேஷன்கள் மூலம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, அதன் வாடிக்கை யாளர்களுக்கு கிஃப்ட் கூப்பன்கள் மற்றும் கேஸ்பேக் ஆஃபர்கள் அடங்கிய ஸ்க்ராட்ச் கார்டுகளை அந்தந்த ஆப்ளிகேஷன்கள் வழங்கும். ஆனால் சமீப காலமாக குரோம் மெசேஜ் நோட்டிஃபிகேஷன் வாயிலாக போலியான ஸ்க்ராட்ச் கார்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த போலியான ஸ்க்ராட்ச் கார்டுகளிடம் இருந்து மக்கள் அலர்ட்டாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

அப்படி ஒருவருக்கு வந்த ஸ்கிரேட்ச் கார்டை விளக்கி அவர் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ சமீப நாள்களாக ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அந்த வீடியோவில், போன்பே ஆப்ளிகேஷன் வாயிலாக நீங்கள் ரூ.2,499 ஜெயித்திருக்கிறீர்கள் என்கிற நோட்டிஃபிகேஷன் மெசேஜ் வர, அதை அவர் ஸ்க்ராட்ச் செய்தால், அதில் ரூ.3,473 ஜெயித்திருப்பதாக மெஸேச் சொல்கிறது.

‘‘இந்த பணம் உங்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதற்காக நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்’’ என்று இருப்பதை அவர் க்ளிக் செய்ததும், நேரடியாக போன்பே ஆப்ளிகேஷனுக்குள் அவருடைய வங்கிக் கணக்குக்குள் சென்று, ரூ.3,473-ஐ அவருடைய கணக்கில் இருந்து எடுப்பதற்கான விஷயத்தைச் சொல்கிறது. இதைக் கவனிக்காமல் ‘Send payment’ பட்டனை அழுத்தி, பாஸ்வேர்டை போட்டுவிட்டால் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து அந்தத் தொகை எடுக்கப்பட்டிருக்கும். இப்படி நிறைய நோட்டிஃபிகேஷன்கள் தினம் தினம் வந்து கொண்டே இருக்கின்றன.

இது ஒருவகை திருட்டு என்றால், க்யூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்வதன் மூலம் அரங்கேறும் திருட்டுகள் ஏராளம். இன்றைக்குச் சின்னச் சின்ன டீக்கடைகள், பெட்டிக் கடைகள், மளிகைக்கடைகளில் க்யூ.ஆர் கோடு ஸ்கேன் கார்டை வெளிப்புறச் சுவர்களில் ஒட்டி வைத்துள்ளன. அது அந்தக் கடைக்காரரின் க்யூ.ஆர் கோடாக இருந்தால் பிரச்னை இல்லை. ஒருவேளை, அந்தக் கடைக்காரருக்கே தெரியாமல் ஹேக்கர்களால் ஒட்டப்பட்டிருக்கும் க்யூ.ஆர் கோடாக இருந்தால், கடைக்காரருக்கும் பிரச்னை, நமக்கும் ஆபத்து. ஏனெனில், அந்த க்யூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பினால் அந்தப் பணம் அந்த கடைக்காரரின் வங்கிக் கணக்கில் வரவாகாமல், ஹேக்கர்களின் வங்கிக் கணக்கில் வரவாகும்.

அதிகரிக்கும் டிஜிட்டல் திருட்டு... 
பணத்தைப் பாதுகாப்பது எப்படி?

அண்மையில் ஒரு டீக்கடைக் காரனின் கடையில் வேறு யாரோ ஒருவர் வந்து அவருடைய க்யூ.ஆர் கோடை ஒட்டிவிட்டுச் செல்ல, டீக் கடைக்காரருக்கு வரவேண்டிய வருமானம் எல்லாம் மோசடிப் பேர்வழிக்குப் போன செய்தியைப் படித்திருப்பீர்கள்.

அதுமட்டுமல்லாமல், அதை ஸ்கேன் செய்பவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களும் திருடப் படும். அந்த விவரங்களை வைத்து, வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை அதன் உரிமையாளருக்குத் தெரியா மலேயே ஹேக்கர்களால் எடுத்துவிட முடியும்.

இதுபோன்ற பேமென்ட் ஆப்ளிகேஷன்களைப் பாதுகாப் பாகப் பயன்படுத்துவது எப்படி, நம் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்கிற கேள்விகளைத் தொழில்நுட்ப வல்லுநரான பிரபு கிருஷ்ணாவிடம் கேட்டோம்.

பிரபு கிருஷ்ணா
பிரபு கிருஷ்ணா

“கூட்டம் எங்கு அதிகமாக இருக்கிறதோ, அங்குதான் பிட்பாக்கெட் அடிப்பவர்களும் அதிகமாக இருப்பார்கள். அப்படித்தான் இதுவும். இன்றைய நிலையில் பேமென்ட் அப்ளிகேஷன்களை எல்லா வற்றுக்கும் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. ஒரு டீ செலவுக்கான பணத்தைக்கூட, க்யூ.ஆர் கோடைப் பயன்படுத்தித் தான் மக்கள் செலுத்துகிறார்கள். இப்படி பேமென்ட் ஆப்ளி கேஷன் பயன்பாடு அதிகரித்து உள்ளதால், அங்கு ஹேக்கர்களின் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது.

முதலில் மக்கள் பேமென்ட் ஆப்ளிகேஷன் பயன்படுத்தும் விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு பேமென்ட் ஆப்ளிகேஷனில் அனைத்து வங்கிக் கணக்கையும் இணைக்காதீர்கள். பணப்பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தும் ஒரே ஒரு வங்கிக் கணக்கை மட்டுமே பேமென்ட் ஆப்ளிகேஷனுடன் இணைத்து வையுங்கள். அதிலும் அதிகமான தொகையைப் போட்டு வைக்க வேண்டாம். சில ஆயிரங்கள் மட்டும் இருப்பதுபோல பார்த்துக்கொள்ளவும். அதே போல, என்னென்ன பேமென்ட் ஆப்ளிகேஷன்கள் இருக்கிறதோ, அவை அனைத்தையும் டவுன்லோடு செய்து பயன்படுத்தா தீர்கள். ஒரே ஒரு ஆப்ளிகேஷனை மட்டும் பயன் படுத்துவது நல்லது. அதுவும் இதர நிறுவனங்களில் ஆப்ளிகேஷனாக இல்லாமல், உங்களுடைய வங்கி ஆப்ளிகேஷனாக இருந்தால் இன்னும் பாதுகாப்பானது. அதில் ஏதாவது சிக்கல் என்றாலும், நேரடியாக வங்கியைத் தொடர்புகொள்ள முடியும்.

முன்பெல்லாம் நெட்பேங்கிங் வசதியை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தி வந்தபோது, மெயில் வழியாக லிங்குகளை அனுப்பி ஹேக்கர்கள் தங்களில் திருட்டு வேலைகளைச் செய்து வந்தார்கள். அது போலத்தான் இன்று பேமென்ட் ஆப்ளிகேஷன் வழியாக ஸ்கிரேட்ச் கார்டு லிங்குகளை அனுப்பு கிறார்கள். முதலில் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை நம்பி லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம். சில நேரங்களில் எஸ்.எம்.எஸ்-களிலும் பரிசு வென்றிருப்பதாகச் சொல்லி லிங்குகள் வருகின்றன. அதை க்ளிக் செய்யாமல், அந்த மாதிரியான செய்திகளை உடனுக்குடன் போனில் இருந்து டெலிட் செய்துவிடுங்கள்.

வங்கி சார்ந்த விவரங்களை இணையப் பயன்பாடு அதிகம் கொண்டுள்ள டிவைஸ்களில் சேமித்து வைக்காதீர்கள். ஸ்மார்ட்போன்தான் எல்லாம் என்றாகி விட்ட நிலையில், அதற்குள் அனைத்து விஷயங் களையும், குறிப்பாக, உங்கள் நிதி சார்ந்த விஷயங்களைச் சேமித்து வைக்காதீர்கள்.

க்யூ.ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்வது எளிமை என்பதைத் தாண்டி, அது ஒரு கெளரவம், ஸ்டைலான ஒரு விஷயமாக மாறி விட்டது. எதற்கெடுத்தாலும் க்யூ.ஆர் கோடு செய்வதை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் வைஃபை பயன் படுத்துவதில் எவ்வளவு ஆபத்து இருக்கிறதோ, அதே போலத்தான், பொது இடங்களில் க்யூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்வதும்.

காலம் மாற மாற டிஜிட்டல் ஹேக்கர் களும் அதற்கு ஏற்றாற்போல தங்களில் திருட்டு வேலைக்கான உத்திகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அதனால், டிஜிட்டல் சார்ந்த பணப் பரிமாற்ற விஷயங்களில் மக்கள் மிக மிக உஷாராக இருக்க வேண்டியது அவசியம்” என்றார் தெளிவாக.

இனி கிஃப்ட் கார்டுகள் உங்களுடைய போனுக்கு மெசேஜாக வந்தால் அதை உடனே டெலிட் செய்துவிடுங்கள். அதே போல, வெளியிடங்களில் க்யூ.ஆர் கோடு பயன்படுத்துவதிலும் உஷாராகச் செயல்படுங்கள்! யாரோ பணம் அனுப்புகிறார் என்று நினைத்து, உங்கள் பணத்தை இழக்காதீர்கள்!